Saturday 22 April 2017

மேகமலைப் பயணம் - பாகம் 3

                                                 
      மேகமலைப் பயணம் - பாகம் 1                    
      மேகமலைப் பயணம் - பாகம் 2

நிழலும் குளிர்காற்றும் சேர்ந்து உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்த தூக்கத்திலிருந்து மெல்ல மீண்டோம். மேகமலையின் சிறப்பே அதுதான். வெயிலில் நிற்கும்போது வெப்பம் வியர்வையை வரவழைத்தாலும் அருகில் ஒரு நிழலில் ஒதுங்கிப் பாருங்கள் நிழலுடன் சேரும் காற்றால் நீங்கள் ஒரு ஸ்வெட்டரையும் ஒரு கப் தேனீரையும் தேடுவீர்கள். நாமும் தேனீரைத் தேடி முருகன் கடைக்குப் போனோம்.
முருகன் கடை முன்பு

மணி ஐந்தை நெருங்கியதால் நாளை  மஹாராஜாமெட்டு செல்லத் திட்டமிட்டு இப்போது தூவானம் டேம் வரைக் காலாற நடந்துவரத் திட்டமிட்டோம். பஞ்சாயத்து அலுவலக நுழைவாயிலை விட்டு வெளியே வந்தவுடன் இடதுபுறம் செல்லும் சாலை வழியாக ஒரு 2 கிமீ வரை நடந்து சென்றால் தூவானம் டேம் செல்லலாம். சாலையின் தொடக்கத்திலேயே மின்துறைச் செக்போஸ்ட் உள்ளது. வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதிக ஏற்றம் இல்லாத சாலை. நடக்க எளிதாகவே இருந்தது.
தூவானம் செல்லும்போது

உயரே சென்று சாலையின் ஒரு வளைவில் நின்று பார்த்தால் ஊர் மிக அழகாகத் தெரிகிறது. வியூ பாயிண்ட் போல் உள்ளது அந்த இடம்.

ஹைவேவிஸ் எழில் தோற்றம்
தொடர்ந்து போகும்போது தேயிலைத் தோட்டத்தை விடுத்துக் காட்டிற்குள் நடந்து செல்கிறோம். வழியெங்கும் யானையின் கழிவுகள் சாலையிலேயே கிடப்பது லேசாக பயத்தைத் தோற்றுவிக்கின்றது. யானை வந்தால் எப்படித் தப்பிப்பது என்று எங்களுக்குள் விவாதித்துக்கொண்டு முன்னேறினோம். அப்போது ஒரு செங்குத்தான பாறையில் யானையின் கழிவைக் கண்ட பழனி, யானை எப்படி அவ்வளவு உயரத்தில் ஏறிச் சாணமிட்டது என்ற ஒரு கடினமான கேள்வியைக் கேட்டார். யாருக்கும் பதில் தெரியவில்லை. அதற்குள் இருட்டத் தொடங்கியதால் டேம் செல்ல முடியாமல் பாதி வழியிலேயே திரும்பினோம்.
தூவானம் செல்லும் பாதை

விடுதியை அடைந்தபோது நன்றாக இருட்டியிருந்தது. இருட்டில் நான் முருகன் கடைக்கு முன் உள்ள ஒரு இரண்டாடி ஆழமுள்ள கழிவுநீர்க் கால்வாயில் காலை விட்டு தடுமாறி விழப்போனேன். நல்ல வேலையாக அது கழிவுநீர் இன்றிக் காய்ந்திருந்தது. அப்போது ஒருவர் என்னை விழாமல் தாங்கிப்பிடித்தார். அவருக்கு நன்றி தெரிவித்தேன். பிறகு வெளிச்சத்தில் அவரப் பார்த்தபோது எங்கோ பார்த்ததுபோல் இருந்தது. எனக்கு பிடிபடவில்லை. மனோ தான் அவர் சினிமா நடிகர் என்று கூறினார். கொம்பன் போன்ற படங்களில் பெரும்பாலும் போலீஸ் வேடங்களில் நடித்திருக்கிறார். மதுரைக்காரர். நிஜத்திலும் அவர் போலீஸ் SI ஆகப் பணியாற்றுவதாக அவர் உடன் வந்தவர்கள் கூறினார்கள். கண்ணனைத் தொடர்ந்து அனைவரும் அவருடன் கைகுலுக்க அவரும் உற்சாகமாகி நம்முடன் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். குளிர் அதிகமாக இருந்ததால் இரவு உணவு தயாராகும்வரை கேம்ப் ஃபயர் போட்டுக் குளிர் காய்ந்தோம்.
நடிகருடன்..

உற்சாகமாய் நம் பழனி..

சிறிது நேரத்தில் இரவு உணவாகச் சப்பாத்தியும் சிக்கன் கிரேவியும் அறைக்கு வந்தது. சிக்கன் அருமையாக இருந்தது. சப்பாத்தி தான் வறண்டும் ரப்பர் போலும் இருந்தது. கோதுமையில் அரிசி மாவைக் கலந்து சுட்டால் இப்படி இருக்கும் என்று கண்ணன் அதற்கான காரணத்தைக் கூறினார். அனைவரும் அவரவர் பணி, குடும்பச் சூழல் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். குழுவில் பழனி மட்டுமே பேச்சிலர். தனது திருமணத் திட்டம் பற்றி ரகசியமாக வைத்திருக்கிறார். கரகாட்டக்காரன் படத்தில் வரும் ‘ ஊருவிட்டு ஊருவந்து காதல் கீதல் பண்ணாதீங்க ‘, பாடலைப் போட்டு எல்லோரும் சேர்ந்து பாடி அவரைக் கலாய்த்தோம். நாளைக் காலை மஹாராஜாமெட்டு சென்றுவிட்டு மதியம் ஊர் திரும்புவதாகத் திட்டம். மனோ மட்டும் காலை பணிக்குச் செல்ல வேண்டிய காரணத்தால் காலையிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது. மனோவைத் தனியாக அனுப்ப யாருக்கும் மனசு இல்லை. கண்ணன் எப்படியாவது மனோவைத் தங்க வைத்துவிட முயற்சித்தார். ஆனால் மனோ தன்னுடைய நிலையை விளக்கியதும் மனமின்றித் தலையசைத்தார். அரட்டையை முடித்து அந்த நாளுக்கு விடைகொடுத்தோம்.
போர்த்தி இருந்த கம்பிளிக்குள் ஊடுருவிய குளிர் உடலையும் துளைத்துத் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டிருந்தது. அருகில் இருப்பதால் எத்தனையோ முறை கொடைக்கானல் சென்றுள்ளேன், ஆனால் இப்படி ஒரு குளிரை அனுபவித்தது இல்லை. என்னைப் பொருத்தவரைக் கொடைக்கானலை ஒப்பிடும்போது மேகமலையில் குளிர் அதிகமே. ஏரி அருகிலேயே இருப்பதால் கூட அவ்வாறு இருக்கலாம். அரைக்கண்ணில் விழித்துப் பார்த்தேன். ஒரு உருவம் அறையில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தது. மனோ தான் அது. எனக்கு முன்னரே விழித்திருந்தார். ஆறு மணியளவில் அவர் கிளம்பி ஆக வேண்டும். அப்போது தான் அவன் 9:30க்குள் கல்லூரியை அடைய முடியும். உடை மாற்றித் தயாராக இருந்தார். மொபைலில் மணியைப் பார்த்தேன், 5:30 ஆகி இருந்தது. குப்புறப்படுத்து முயற்சித்தும் தூக்கம் வராததால் வேறு வழியுன்றி நானும் எழுந்துவிட்டேன். எனது தூக்கத்தைக் கெடுத்த குளிரால் கண்ணன் மற்றும் பழனியை எதுவும் செய்ய முடியவில்லை. முரட்டுத் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தனர் இருவரும். வெளியே எட்டிப்பார்த்தேன். டியூப் லைட் வெளிச்சத்திலும் பனி அப்பட்டமாகத் தெரிந்தது.
அதிகாலைப் பனி
மணி 6 ஆகி இருந்தது. முருகன் கடை திறந்திருந்தால் டீக் குடிக்கலாம் என்று கீழே சென்றோம். அப்போது தான் கடையைத் திறந்துகொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் பழனியும் கண்ணனும் வந்துவிட்டனர். 


கண்முன்னே பசும்பால் கறந்து டீ போட்டுக் கொடுத்தார்கள். குளிருக்கு இதமாக இருந்தது. இருள் விலகி லேசாக வெளிச்சம் வந்திருந்தது ஆனால் பனி விலகவில்லை. நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் மனோ எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். மனமின்றி விடை கொடுத்தோம். 
விடைபெறும் மனோவுடன்

மனோவை அனுப்பிவிட்டு ஏரிக்கரைக்குச் சென்றோம். நேற்றுப் பகல் வெளிச்சத்தில் பளிச்சென்று இருந்த ஏரி இப்போது வேறுமாதிரியாக உருமாறி இருந்தது. கோனில் நிரப்பிய ஐஸ்கிரீம் போல் ஏரியில் இருக்கும் நீர் தெரியாத அளவுக்கு அதன்மேல் பனி சூழ்ந்திருந்தது. வெள்ளை உடை அணிந்த தேவதை வானிலிருந்து இறங்கி வந்து பூமியில் உலாவுவது போல் வெண்பனி அந்த ஏரி முழுவதும் தவழ்ந்து சென்றது வாழ்வில் பார்க்க வேண்டிய காட்சி. காதலர்கள் காதல் செய்ய ஏற்ற அருமையான சூழல்.
அதிகாலை ஏரிக்கரையில்...

குளிரைப் பொருட்படுத்தாமல் பனி விழகும்வரை அங்கேயே இருந்து அந்தக் காட்சியை ரசித்துக்கொண்டு இருந்தோம்.


வெயில் வருவதற்குள் பைக்கில் ஒரு ரவுண்டு போய் வரலாம் என்று கண்ணன் விருப்பப்பட்டதால் கிளம்பினோம். இப்போது விடுதி காம்பவுண்டை விட்டு நேராக வெளியே வந்து சின்னமனூர் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் செக்போஸ்ட் போடப்பட்ட ஒரு சாலை செல்கிறது. அந்தச் சாலையில் தொடர்ந்து சென்றோம். வழியில் எஸ்டேட் வேலையாட்கள் மலையில் இருந்து வழிந்து வரும் தூய நீரைப் பிடித்து களைக்கொல்லி மருந்தைக் கலக்கிக்கொண்டு இருந்தனர், தேயிலையின் ஊடே இருக்கும் களையை அழிக்க.  சரிவில் வழிந்தோடும் நீர் சமதளம் வரை சென்று புல்த்தரைக்குள் மறைகிறது. நாங்கள் தேயிலையின் ஊடே இறங்கி அருகில் சென்று பார்த்தபோது புற்களுக்குள் நீர் ஓடுவதைத் தெளிவாகக் காண முடிகிறது. அருமையான இடம். தேயிலைப் பள்ளத்தாக்கு என்று சொல்லலாம். புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
தேயிலைச் சரிவு

மீண்டும் பாதைக்கு வந்தோம். தேயிலைத் தோட்டத்தின் மேல் வரிசையாக இருந்த மரங்களின் ஊடே புகுந்து வெளியேறிய சூரியக்கதிர் விசிறியைப் போல் ஒரு தோற்றத்தைக் கொடுத்தது. புகைப்படம் எடுக்க அருமையான பேக்கிரவுண்ட். மொபைல் கேமராவில் எடுத்ததால் ஓரளவிற்கு மேல் அதன் அழகைப் பதிய முடியவில்லை.

சூரிய விசிறி

பழனியின் மிரட்டல் போஸ்.. ஹா..ஹா...
பைக்கை எடுத்து சிறிது தூரம் சென்றபோது வழியில் ஒருவர் நம்மை மறித்து எங்கே செல்கிறோம் என்று கேட்டார். சுற்றிப் பார்க்க வந்தோம் என்றோம். இது தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் என்றும் வெளியாட்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்றும் அதனால் தான் சாலையின் தொடக்கத்தில் செக்போஸ்ட் போட்டிருப்பதாகக் கூறினார். நாம் சுற்றிப் பார்க்க அனுமதி கேட்டோம். கிடைக்கவில்லை. இந்த இடத்தைப்போல் ஒரு அழகான இடத்தைக் கண்டதில்லை என்று கூறினோம். அவர் ஒன்றும் சொல்லவில்லை. இவ்வளவு அழகான இடத்தில் வாழ்கிறீர்கள் என்று பழனி கூறியதற்குமலங்காட்டில் என்னங்க சந்தோசம்?” என்று அவர் கூறியது எங்களை யோசிக்க வைத்தது. ஆம் உல்லாசப் பயணம் சென்ற நமக்கு அதன் அழகு மட்டுமே தெரிகிறது. ஆனால் அந்த மலங்காட்டை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு மட்டுமே அவர்கள் வாழ்வின் வலி தெரியும். ஆம், அடிப்பாடை வசதிகள் ஏதும் இல்லாத அங்கு மழை, குளிர், அட்டைக் கடியைப் பொருட்படுத்தாமல் சொற்ப வருமானத்திற்காக அந்தத் தேயிலைக் காடுகளை நம்பி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் அந்த மக்கள். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் சின்னமனூர் சென்றுப் பரீட்சை முடியும்வரை அங்கேயே அரசு விடுதியில் தங்கி இருந்து பரீட்சைகளை முடித்துவிட்டு ஊர் திரும்புகிறார்கள். சுற்றிப் பார்க்க மட்டுமே சென்ற நமக்கு அவர்களின் வாழ்வின் இன்னல்கள் விளங்க வாய்ப்பில்லை. எங்கிருந்து வருகிறீர்கள் என்றார். மதுரை என்றோம். எஸ்டேட் மேலாளர் வந்தால் பிரச்சனை ஆகிவிடும் கிளம்புங்கள் என்றார்


அவர்களையும் குறை சொல்ல முடியாது. இது போன்ற இயற்கையான இடங்களைச் சுற்றிப் பார்க்க வருகிறவர்கள் அந்த இடங்களைத் தாங்கள் ரசிப்பதுபோல் மற்றவர்களும் ரசிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். மாறாக அந்த இடங்களில் தங்களின் எச்சங்களை விட்டு வருகின்றனர். ஆம், ஆங்காங்கே சில பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், மது பாட்டில்கள் ஆகியவற்றைக் காண முடிகிறது. மேகமலை வருபவர்கள் இதே அழகைத் தங்கள் வாழ்நாள் முழுதும் அனுபவிக்க வேண்டும் என்றால் சூழல் பொறுப்புடன் நடந்துகொள்வது நல்லது. விடைபெற்றுத் திரும்பினோம்.

மஹாராஜாமெட்டு
அறைக்குச் சென்று கிளம்பித் தயார் ஆனோம். நேராக மஹாராஜாமெட்டு

 சென்றுவிட்டு வந்து அறையைக் காலி செய்து மதியம் ஊருக்குக் கிளம்ப வேண்டும். பொதுவாக மதியம் 12 மணிக்கு அறையைக் காலி செய்ய  வேண்டும். அன்று அறைகள் எதும் முன்பதிவு செய்யப்படாததால் உதவியாளர் கண்ணன் எங்களை மெதுவாகக் காலி செய்ய அனுமதித்தார். முருகன் கடையில் காலை உணவாகத் தோசை கொடுத்தார்கள். சாப்பிடுமளவுக்கு இருந்தது.  நேற்று அந்தக் கடையில் இருந்த ஒருவர் மஹாராஜாமெட்டுக்கு பைக்கில் செல்வது சிரமம் என்று சொல்லியிருந்தாலும் நாங்கள் துணிந்து பைக்கில் செல்ல முடிவு செய்தோம். உதவியாளர் கண்ணன் மஹாராஜாமெட்டு செல்ல அணைக்குள் செல்லும் ஒரு குறுக்குப்பாதையைக் கூறினார். விடுதியை விட்டு வெளியே வந்து வலதுபுறம் திரும்பும் சாலையில் மஹாராஜாமெட்டு செல்லலாம்.. ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து துருத்திக்கொண்டும் தண்ணீர் தேங்கியும் உள்ள கரடுமுரடான குறுகிய சாலை.
மஹாராஜாமெட்டு செல்லும் சாலை

செல்லும் வழியெங்கும் ஏரி நம்மோடு பயணிக்கிறது. ஏரியின் மறுகரையில் அந்தச் சாலை செல்கிறது. வழியெங்கும் இயற்கையை ரசித்துக்கொண்டு பயணிக்கலாம். சாலை ஆங்காங்கே சில பிரிவுகளைக் கொண்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாததால் நாமே முடிவெடுத்து முன்னேற வேண்டும். 

பயணம் தொடரும்...   மேகலைப் பயணம் - நிறைவு இங்கே


No comments:

Post a Comment