Friday 23 June 2017

இயன்றவரும்... இயலாதவரும்...

நேரம், காலை 8:15. சென்னை  எழும்பூரிலிருந்து 'குருவாயூர் எக்ஸ்பிரஸ்' கிளம்புகிறது. சொந்த வேலையாக  சென்னை சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். சென்னையில் இருந்து மதுரைக்கு முதல் முறை பகலில் ரயில்பயணம். எனக்கு 'சைடு அப்பர் பெர்த்'  முன்பதிவாகி இருந்தது. லோயர் பெர்த்தில் திருச்சி செல்ல வேண்டிய ஒருவர். என்னைக் கீழே அமரச் சொல்லிவிட்டு அவர் மேலே சென்று படுத்துக்கொண்டார். ஜன்னல் காற்றை அனுபவித்துக்கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் பயணித்தேன்.

ரயில் தாம்பரம் தாண்டியதும் கால்கள் செயலிழந்த ஒருவர் தவழ்ந்து கொண்டு வந்தார். அவர் கையில் ஒரு துணி இருந்தது. வந்தவர் அந்தத் துணியை வைத்து நடைபாதையில் இருந்த தூசுகள் முழுதும் துடைக்க ஆரம்பித்தார். துடைத்துவிட்டு நடைபாதையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். வாய் திறந்து யாரிடமும் எதும் கேட்கவில்லை. ஒரு சிலர் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பினார். 

பிறகு செங்கல்பட்டில் ஒரு திருநங்கை ஏறி அனைவரிடமும் பணம் வேண்டினார்.  யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்று நன்கு அறிந்து வைத்திருக்கிறார். குடும்பமாய் வந்திருந்தவர்களை அவர் தொந்தரவு செய்யவில்லை. இளைஞர்கள் பலர் அவர் கேட்பதற்குள்ளாகவே பணத்தை நீட்டினர். பணம் தரத் தயங்கிய ஒரு சிலரையும் அவர் விடவில்லை. நின்று பெற்றுக் கொண்டே கிளம்பினார். பணம் கொடுத்தவர்களின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் அவர் கையில் பத்து ரூபாய் நோட்டுக்கள் கத்தையாய்  இருந்தன. மேல்மருவத்தூர் வந்ததும் இரயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் போய் குத்தவைத்து அமர்ந்துகொண்டார்.  

அடுத்து ஒரு தட்டில் அம்மன் படம், விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டும், 'ஓம்சக்தி.... ஓம்சக்தி...' என்று கூறிக்கொண்டும் சிவப்பும் மஞ்சளும் கலந்த உடை அணிந்த மூன்று பெண்கள் ரயிலில் ஏறிக் காணிக்கை கேட்டனர். மறக்காமல் கையில் வேப்பிலையும் எடுத்து வந்திருந்தனர். வந்ததற்காக சிலர் சில்லரைக் காசுகளைக் கொடுப்பதைப் பார்க்க முடிந்தது. திண்டிவனம் வந்ததும் இறங்கிவிட்டனர்.

கொஞ்ச நேரத்தில் வெள்ளை நிற கவுன் அணிந்த ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை வந்தது. பல நாள் உடுத்தியதில் வெள்ளை உடை மஞ்சளாய் காவியாய் மாறியிருந்தது. திடீரென்று அந்தக் குழந்தை, ரயில் பெட்டியின் ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் பல்டி அடித்துக்கொண்டே சென்றது. அதை பார்த்த ஒரு வயதான அம்மா அந்தக் குழந்தையை அழைத்து கையில் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து "நீ இதெல்லாம் செய்ய வேண்டாம்" என்று கூறி அனுப்பினார். அதைப் பெற்ற குழந்தை நேராகப் போய் கதவருகே மறைந்து அமர்ந்திருந்த தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்தது. அடுத்து கையில் வைத்திருந்த வளையத்தை கால் வழியாக இடுப்பிற்கு கொண்டுவந்து , உடலை ரப்பர் போல் வளைத்துத் தலையை மேலிருந்து கீழாக வளையத்திற்குள் விட்டு முதுகு வழியாக வளையத்தை வெளியே எடுத்தது. இதைப் பார்த்துப் பதறிய அந்த வயதான அம்மா அந்த குழந்தையை மீண்டும் மீண்டும் அழைத்தும் அந்தக் குழந்தை அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் காரியத்தில் கருத்தாக இருந்தது. பிறகு ஒரு தட்டைக் கொண்டுவந்து அனைவரிடமும் நீட்டியது. அந்த வயதான அம்மையார் அருகில் வந்தபோது வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது. அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது, வளர வளர வெட்டப்படும் தேயிலைச் செடி ஏனோ என் நினைவிற்கு வந்தது.

விழுப்புரத்தில் அவர்கள் இறங்கிவிட அங்கே பார்வையற்ற ஒருவர் ரயிலில் ஏறினார்.  ஏடிம் கவர், ரேசன் கார்டு கவர் போன்றவற்றை விற்று அதில் வரும் பணத்தைப் பார்வையற்றோர் ஆசிரமத்திற்கு அளிப்பதாகக் கூறினார். பெரிய வரவேற்பு இல்லை அவருக்கு. ஒரு சிலர் மட்டும் அனுதாபத்தில் அவர் விற்ற பொருட்களை வாங்கினர்.

இவ்வாறாக திருச்சி வரை ஒவ்வொருவராக மாறி மாறி தங்கள் பிழைப்புக்காக அந்த ரயிலைப் பயன்படுத்தினர். திருச்சியில் முக்கால்வாசிக் கூட்டம் இறங்கிய பிறகு மதுரை வரை வேறு யாரும் இவ்வாறு வரவில்லை

இந்த ரயில் பயணத்தில் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. இயலாதவர் கூட யாசிக்க மறுத்து உழைக்கிறார், ஆனால் இயன்றவரோ உழைக்க மறுத்து மற்றவரை அண்டிப் பிழைக்கிறார். 

அந்தக் கால் இழந்தவரும், கண் இல்லாதவரும் உழைத்துப் பிழைக்க நினைத்ததில் எனக்கு மேலாகத் தெரிந்தனர். சமூகப் புறக்கணிப்பால் யாசிக்கும் அந்தத் திருநங்கையின் செயல் கூடத் தவறாகத் தெரியவில்லை. ஆனால் அம்மன் பெயரைச் சொல்லி யாசித்த அந்தப் பெண்களின் கண்களுக்கு உழைத்துப் பிழைக்கும் அந்த மாற்றுத்திறனாளிகள் தெரியவில்லையோ?? அதுபோல் பெற்ற குழந்தையை யாசிக்க வைத்து வேடிக்கை பார்த்த அந்தத் தாயின் செயலும் ஒப்பவில்லை. தான் யாசித்துக் கூட பெற்ற பிள்ளையைக் காப்பற்றலாம் என்று ஏனோ அந்தத் தாய்க்குத் தோன்றவில்லை.  "இயலாதவரால் இயலும்போது, இயன்றோர் இயலாதவரானார்".


இவர்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது கடவுள் நமக்கு எவ்வளவோ மேலான வாழ்வை வழங்கியிருக்கிறார் அல்லவா??


Saturday 17 June 2017

வாகமன் பயணம் - நிறைவு


மாலையில் கிளம்பி எலப்பாரா சாலையில் இருக்கும் தற்கொலை முனை என்று அழைக்கப்படும் மூப்பன்பாறாவிற்குச் சென்றோம். சாலையில் இருந்து ஒரு இரண்டு கிமீ உள்ளே செல்ல வேண்டும். சொந்த வாகனத்தில் செல்லலாம். உள்ளே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ஆகையால் அவர்களின் வாகனத்தைத் தவிர மற்றவர்களின் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பைக்கை நிறுத்திவிட்டு நடராஜா சர்வீசில் கிளம்பினோம். இருமருங்கும் இருக்கும் புல்மேவிய குன்றுகளுக்கு நடுவில் பாதை நம்மை அழைத்துச் செல்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் புல்வெளி மட்டுமே. பூமிக்குப் பச்சிலையை அரைத்து அப்பியது போன்ற தோற்றம். வாகமனின் ஆளமில்லா மண் மரங்கள் வேரூன்ற வசதியில்லாததால் புல்வெளியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே தேங்கிய மண்ணில் காட்டுக் கொய்யா மரங்கள் மொய்த்து வளர்ந்திருக்கிறது. மலைவிளிம்பில் பாராகிளைடிங் நடப்பதைக் காண முடிந்தது. பூதக் கண்ணாடியைக் கொண்டு தூரத்தில் இருந்து ரசித்தோம். அதற்குள் சூழலைப் பனி ஆக்கிரமித்ததால் நாம் அருகில் சென்றபோது முடித்திருந்தனர். 

மலை விளிம்பிற்குச் சென்றோம். மலைச்சரிவும் புல்வெளி படர்ந்திருக்கிறது. புல்வெளியோடு சேர்த்து வென்பனி நம்மையும் அணைத்தது. நேரம் ஆக ஆக அந்த அணைப்பின் இறுக்கம் அதிகமாகி சிலிர்ப்பைக் கொடுத்தது. இயற்கையின் அரவணைப்பில் கவலையைத் துறந்த துறவியானோம்.

மூப்பன்பாறா
நாம் கண்ட பள்ளத்தாக்குகளிலேயே அழகானது இது தான். இதற்கு தற்கொலை முனை என்று தவறான பெயர் வைத்தது யாரோ?? பூலோக சொர்க்கம் இங்கிருக்க, இங்கே வந்து தற்கொலை செய்து சொர்க்கம் செல்ல யார் விரும்புவார்? வாழ்வை வெறுத்து தற்கொலை எண்ணம் கொண்டவரும் இங்கு வந்தால் போதும் இவ்விடத்தின் ரம்யம் மனதை இளக்கி அந்த எண்ணத்தைக் கைவிடச் செய்யும். 




தூரத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட பகுதியைத் தாண்டி யாரும் அங்கே செல்ல இயலாதபடி காவல் அமைக்கப்பட்டிருந்தது. புல்வெளியில் சிறிது நேரம் படுத்து வானை நோக்கினோம். மனதின் பாரங்கள் இறங்கி காற்றாய் உணர்ந்தோம். வானத்தைப் போல் எண்ணங்களும் எங்கோ பறந்து உயரே சென்றது.  வழக்கமான அலுவல் நாட்களின் கசகசப்பு நீங்கி மனம் புத்துணர்வு பெற்றது.


திரும்பி நடராஜாவில் கிளம்பி புறப்பட்ட இடம் வந்து சேர்ந்தோம். ஒரு வால்வோ கார் எங்கள் அருகில் வந்து நிற்க அதில் வந்த உதயநிதி அவர்களை ரசிகர்கள் மொய்த்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாமும் தான்.   நடன மாஸ்டர் பிருந்தா இருந்தார். வினோத்  கலா அக்காவைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்று சொல்ல அவர் சிரித்துவிட்டுச் சென்றார்.

உதயநிதி

பிருந்தா மாஸ்டருடன்..

‘மொட்டைக்குன்று’ என்று அழைக்கப்படும் வாகமன் புல்வெளிகளுக்குச் சென்றோம். பையா படத்தில் கார்த்தியும், தமன்னாவும் ‘அடடா, மழடா.. அடமழடா…’ என்று ஆடிப் பாடும் அழகிய பாடல் இங்கே படமாக்கப்பட்டது. அனுமதி நேரம் முடிந்ததால் உள்ளே செல்ல இயலவில்லை. அறைக்கு வந்து சேரும்போது இருட்டியிருந்தது. நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்தோம். இரவு உணவாக புரோட்டாவும் சிக்கனும் அந்த நாளை நிறைவாக முடித்து வைத்தது.


இருள் மெல்ல விலகிப் புதிய விடியலைக் கொடுத்தது. அறைக்கு வெளியே வந்து பார்த்தோம். ஊரே ஃபிரிட்ஜில் வைத்தது போல் ஃபிரஷாக இருந்தது.  இருள் விலகினாலும் பனி விலக மறுத்து காதலன் காதலியைப் பிரிய மனமின்றிப் பிரிவதுபோல் பனி மெல்ல மெல்ல விலகியது. 


அதிகாலை பைக்கில் ஒரு சுற்று சென்று வரக் கிளம்பினோம். ஆள்நடமாட்டம் இல்லாத பனி சூழ்ந்த சாலை.. குளிர் காற்று.. சுற்றிலும் பசுமை.. பைக்கில் நாம்…. பறவையானோம்... இலக்கின்றிப் பறந்தோம்..

வழியில் குரிசுமலை ஆசிரமத்தின் நுழைவாயிலைக் கண்டு அலசக் கிளம்பினோம் உள்ளே. குரிசுமலை ஆசிரமம் ஒரு தனி சாம்ராஜியம். உள்ளேயே குடியிருப்பு, பள்ளிக்கூடம், கடைகள், உணவகங்கள், பால்பண்ணை, சர்ச் என அத்தனையும் உள்ளது. 

குரிசுமலை ஆசிரம நுழைவாயில்
சாலையின் முடிவு நம்மை குரிசுமலையின் அடிவாரத்தில் கொண்டு போய் விட்டது. பைக்கை நிறுத்திவிட்டு மலையேறத் துவங்கினோம். கற்பாறைகளை ஒவ்வொன்றாய் கடந்து ஏறினோம்.

குரிசுமலை அடிவாரம்
தங்கல்பாறை போன்று இல்லாமல் முதல் பாதி தூரம் செங்குத்தாக ஏற வேண்டியுள்ளது.


அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை இயேசுநாதர் சிலுவை சுமப்பது முதல் சிலுவையில் அறையப்படுவது வரை உள்ள காட்சிகள் சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் மக்கள் ஜெபம் செய்து மேலே ஏறுகிறார்கள்.
                                                 


எதிரே முருகன்மலை தெரிகிறது. இந்துக்களின் வழிபாட்டுத் தளம். இவ்வாறு மூன்று மதத்தினரும் ஆளுக்கொரு மலையைத் தங்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

முருகன் மலை

இரண்டாம் பாதி ஏற எளிதாக உள்ளது. கரும்பாறையும் , பாறை இடுக்கில் தேங்கிய மண்ணில் வளர்ந்த புற்களும் ஓவியம் போல் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் வெண்பனி வளைத்திருந்தது.


பூமி மேகத்திற்கு மேல் மிதப்பதைப் போல் உணருகிறோம். உச்சியை அடைந்தோம். ஒரு சிறிய தேவாலயம் அங்கே உள்ளது. ஆடம்பரங்கள் இன்றி எளிமையாக அமைந்த அந்த தேவாலயம் அவ்விடத்தின் அழகில் கலந்தது.

உச்சியில் உள்ள  தேவாலயம்
தேவாலயத்தின் பின்புறம் அழகிய பள்ளத்தாக்கு. அழகிய அவ்விடத்தைக் கண்டதும் மிட்டாயைக் கண்ட குழந்தையைப் போல் துள்ளிக் குதித்தோம். பாறைகள் ஒவ்வொன்றாய் ஏறி, இறங்கி, தவழ்ந்து, தாவிக் குதித்து மலையின் விளிம்பில் சென்று அமர்ந்தோம். சொர்க்கத்தின் மற்றொரு பரிணாமத்தைக் காண்கிறோம்.


காலுக்குக் கீழ் அடர்ந்த சோலைக்காடுகள் கண்களைக் குளிர்விக்க, கீழிருந்து மேல்நோக்கி வரும் காற்று உடலைக் குளிர்விக்கிறது. பல நேரம் அங்கே அமர்ந்து பள்ளத்தாக்கின் அழகிலும் அழத்திலும் மூழ்கினோம். 



அடிவாரத்தை அடைந்து பைக்கைக் கிளப்பி ஆசிரமத்திற்குட்பட்ட இந்தோ-சுவிஸ் பால்பண்ணையைப் பார்க்கச் சென்றோம். குளிர்பிரதேசங்களில் வளரும் அதிகப் பால் தரும் வெளிநாட்டு மாடுகள் அங்கே பராமரிக்கப்படுகிறது. நுழைவாயிலில் இருந்து நடந்து சென்றோம். நடுவே குறுகிய சாலை. இருபுறமும் அடர்ந்த புல்வெளி. புல்வெளியில் ஆங்காங்கே பைன் மரங்கள். அதன் நிழலில் பசும்புற்களை மேய்ந்துகொண்டிருக்கும் கன்றுகளும் பசுக்களும்... இவ்வளவு அழகான உணவுக்கூடம் யாருக்கும் வாய்க்காது.. அந்தப் பசுக்கள் மூன்று வேளை பால் கறக்கக் கூடியவை. அவை பசுக்கள் அல்ல பால் கறக்கும் இயந்திரங்கள்.


உள்ளே ஒரு சிறிய தேவாலயம் உள்ளது. அங்கே இறைபணி செய்த சன்னியாசிகளின் சமாதி அதன் வளாகத்தில் உள்ளது. அந்த இடத்தில் அவ்வளவு அமைதி. சிறிது நேரம் தியானம் செய்தோம். 

தேவாலயம்

அறைக்கு வந்து தயாரானோம். புட்டும் தொட்டுகொள்ள கடலைக் குழம்பும் காலை உணவாகக் கொண்டோம்.  அறையைக் காலிசெய்து விடுதி உரிமையாளருக்கு நன்றி கூறிக் கிளம்பினோம். செல்லும் வழியில் உள்ள  வாகமன் புல்வெளிக்கு பைக்கைச் செலுத்தினோம்.  வாகமனுக்கு ‘ஆசியாவின் ஸ்காட்லாந்து’ என்று பெயர் வாங்கிக் கொடுத்த இடம் அது. அனுமதிச் சீட்டு பெற்று உள்ளே சென்றோம். டென்னிஸ் பந்துகளை அடுக்கி வைத்தது போல் அடுக்கடுக்காய் பச்சைப் புற்கள் மேவிய சிறு சிறு குன்றுகள் ஒன்றன்பின் ஒன்றாய் எல்லையின்றிச் செல்கிறது.


அடித்த வெயிலில் புல்வெளி சம்மர் கட்டிங் அடித்ததுபோல் இருந்தது. புல்வெளியில் காலாற நடந்தோம். சிறிது தூரத்தில் புல்வெளியின் நடுவே ஒரு அழகிய ஏரியைக் கண்டோம். சுற்றிலும் பசுமையான குன்றுகளால் சூழப்பட்ட ஏரி. ஏரியைச் சுற்றி உள்ள புற்களின் பச்சையைக் கறைத்துவிட்டது போல் தண்ணீர் பச்சையாய்க் காட்சியளித்தது.


ஏரியில் தொடங்கப்பட்டுள்ள நீர் விளையாட்டுக்கள் சூழ்நிலைக்கு ஒப்பவில்லை. பிரபுவும், வினோத்தும் படகு சவாரி செல்ல, மனோ பலூன் சார்பிங் (balloon zorbing) செய்தார். நம் மனதுக்கு அந்த இயற்கை மட்டுமே தேவைப்பட்டது. மாலை வேளையில் வந்தால் சூழ்நிலை இன்னும் அற்புதமாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

மதியம் தேனியில் இருக்க திட்டம். வெளியே ஒரு கடையில் குளுக்கிய சர்பத் அருந்தி நமது பயண விரதத்தை முடித்துக் கிளம்பினோம். மீண்டும் செங்கரா வழியாகப் பசுமையின் ஊடே குமுளி திரும்பினோம். வழியில் ஃபாத்திமுக்கு என்ற இடத்தில் ஒரு கள்ளுக்கடையைக் கண்டோம். அங்கே சிறிது நேரம் இளைப்பாறினோம். அந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்திருந்தேன்.

குமுளியில் ‘கோழிக்கோடு அல்வா’ கிடைக்கும். சுவைக்கக் கொஞ்சம் அன்னாசி அல்வா வாங்கிக் கொண்டு கிளம்பினோம். மலையிறங்கி தமிழகம் வந்தோம். வெயில் சற்று அதிமாக இருந்தது. உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாற்று பாலத்தைக் கடக்கிறோம். இருபுறமும் தென்னை மரம் சூழ்ந்து தண்ணீர் பச்சையாக ஓடிக்கொண்டிருந்தது கேரளாவை நினைவூட்டியது. ஊருக்குப் போகும் எண்ணத்தைத் தள்ளி வைத்துவிட்டு வெயிலைத் தணிக்க ஆற்றில் இறங்கிவிட்டோம்.

முல்லை பெரியாறு இடம்: உத்தமபாளயம்
இடுப்பளவு தண்ணீர், தடுப்பணையால் குளம் போல் தேங்கி வழிந்து சென்றது. நீந்திக் குளித்தோம். தடுப்பணையில் தலை சாய்த்து 'பில்லா' போல் போஸ் கொடுத்தோம். தண்ணீருக்கடியில் மீன்கள் பாதத்தைக் கடித்து குறுகுறுப்பூட்டின. ஆற்றுக் குளியல் அலுப்பையும் வெயிலையும் ஒரேடியாக விரட்டியது.


தேனியை அடையும்போது இருட்டியிருந்தது. ஊரை அடையும்போது நள்ளிரவாகி இருந்தது.. கட்டிலில் படுத்தபோது தூங்க மனமில்லை. வாகமனை விட்டு வந்துவிட்டோம் ஆனால், வாகமனின் பசுமை மட்டும் மனதை அப்பியிருந்தது.

வாகமன் பயணம் - பாகம் 1


வாழ்வில் பல இடங்களுக்குப் பயணம் செய்திருப்போம். ஒரு இடம் சென்று வந்த பின் அடுத்த பயணத்திற்கு வேறு இடம் தேடியிருப்போம். ஆனால் ஒரு சில இடங்கள் மட்டும் சென்று வந்த பின்பும் மீண்டும் நம்மை அழைக்கும். எத்தனை முறை சென்றாலும் தித்திக்கும். அப்படி ஒரு இடம் தான் வாகமன். ‘ஆசியாவின் ஸ்காட்லாந்து’ என்று அழைக்கப்படும் வாகமன் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

புது வீடு கட்டும் ஒவ்வொருவரும் விரும்பும் ஒரு விஷயம் வீட்டின் முன் ஒரு சிறிய புல்வெளி அமைக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். புல்வெளி வீட்டிற்கு அழகையும் மனதிற்கு அமைதியையும் கொடுக்கக் கூடியது. புல்லின் பசுமை மனதை இளக்க,  மாலை வேளையில் புல்வெளியில் படுத்துக் கொண்டு நம்மை மறந்து வானையே பார்த்துக் கொண்டிருக்கும் போது புல்லின் குளிர்ச்சியும், புல் நுணி குத்தி ஏற்படுத்தும் குறுகுறுப்பும் ஒரு பேரானுபவம்.. 

ஒரு சிறு புல்வெளிக்கு ஆசைப்படும் நம் கண் முன் ஒரு ஊரே புல்வெளியாகத் தெரிந்தால் எப்படி இருக்கும்? வாழ்வின் மீதி நாட்களை அங்கேயே உலாவிக் கழித்துவிட எண்ண மாட்டோமா? வாகமனின் சிறப்பு அது தான். எங்கெங்கு காணினும் பச்சைப் புல்வெளி மட்டுமே!!!

இரண்டு வருடங்களுக்கு முன் நாமும் நண்பர் மனோவும் குடும்பத்துடன் வாகமன் சென்று வந்த நினைவுகள் இன்றும் மனதில் பசுமையாய் படிந்திருக்கிறது. மீண்டும் அங்கே செல்லப் பல நாட்களாக எண்ணிக் கொண்டிருந்து இப்போது வாய்த்தது. நம்முடன் இம்முறை மனோ, கண்ணன் மற்றும் கண்ணனின் அலுவலக நண்பர்கள் வினோத்தும் பிரபுவும் சேர்ந்துகொண்டனர். மொத்தம் மூன்று நாள் பயணம் வழக்கம்போல் பைக்கில் செல்வது என்று ஒருமனதானோம். மனோ உசிலையில் இருந்து கிளம்பி தேனி செல்ல நானும் கண்ணனும் பெரியகுளத்தில் இருந்து தேனி பழைய பேருந்து நிலையம் அருகே காலை 10 மணிக்கு மனோவை சந்தித்தோம். பிரபுவும் வினோத்தும் மதுரையில் இருந்து 11 மணிக்கு தேனியை அடைந்ததும் அங்கிருந்து நமது வாகமன் பயணம் ஆரம்பமானது.

தேனியில் 
தேனியில் இருந்து வாகமன் செல்ல நாம் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் வழியாகக் குமுளியை அடைந்து அங்கிருந்து வண்டிப்பெரியார் வழியாக பீர்மேடு, எலப்பாரா வழியாக 117 கிமீ பயணித்து வாகமனை அடையலாம். ஒருவர் பின் ஒருவராக சீராக பைக்கைச் செலுத்திக்கொண்டு இருக்கும்போது பின்னால் வந்த கண்ணனைக் காணாது பைக்கை வீரபாண்டி அருகே முல்லைபெரியாற்று பலத்தில் நிறுத்திவிட்டு கண்ணனுக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் முல்லைபெரியாற்றின் அழகை ரசித்தோம். அது வெறும் ஆறு அல்ல, தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வின் ஓர் அங்கம்.

முல்லை பெரியாறு, இடம் : வீரபாண்டி

தனது பையை தேனியிலேயே மறந்து விட்டு வந்ததால் அதை திரும்பிப் போய் எடுத்து வரத் தாமதம் என்று கண்ணன் தெரிவித்தார். பயணம் தொடர்கிறது.

அந்தக் கோடையிலும் தேனி மாவட்டம் பசுமை கட்டி நிற்கிறது. சாலையின் இருமருங்கிலும் முல்லைப் பெரியாற்றைக் குடித்து செழிப்பாக வளர்ந்த தென்னந்தோப்புகள் அரண் அமைக்கின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்கள், அதில் மறுதாம்பாய் தானாய் முளைத்த நெற்பயிர், விதைப்புக்காக நாற்று விடப்பட்ட வயல்கள், வாழைத் தோட்டங்கள், பசுமைக் கூடாரம் போன்ற திராட்சைக் கொடிகள், ஆதில் கனத்துத் தொங்கும் திராட்சைக் கொத்துக்கள்… ரசித்துக் கொண்டே பைக்கைச் செலுத்தினோம். 

தேனி-குமுளி சாலை

கம்பத்தைத் தாண்டி 14 கிமீ சென்றதும் லோயர் கேம்பில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ‘கர்னல் ஜான் பென்னிகுயிக்’ அவர்களின் நினைவு மண்டபம் வருகிறது. அவர் ‘காலத்தை வென்றவர்.... காவியமானவர்.....’. மானசீகமாக அவரை வணங்கிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். 

பென்னிகுயிக் மணிமண்டபம்

மலைச்சாலையில் செல்லும்போது இந்த ராட்சஷக் குழாய்களைக் கடக்கிறோம். முல்லைப் பெரியாற்றுத் தண்ணீர் இந்தக் குழாய்கள் மூலம் மேலிருந்து கீழே லோயர் கேம்பில் உள்ள நீர் மின் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.


அடுத்து இரைச்சல் பாலம் என்ற இடம் வருகிறது. முல்லைபெரியாறு தமிழகம் நோக்கி பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டிற்கு வரும் குழந்தை போல் துள்ளிக் குதித்து வருகிறது. அந்தத் துள்ளலில் நீர்த்துளிகள் பன்னீர் போல் நம் மீது தெறித்து குளிர்ச்சியைத் தருகிறது.

இரைச்சல் பாலம்
அதற்குள் அனைவருக்கும் பசி எடுக்க கண்ணன் அவர்கள்  நமக்காக வீட்டில் இருந்து தயார் செய்து கொண்டு வந்த புளி மற்றும் எழுமிச்சை சாதத்தை அங்கேயே உண்டு பசியாறினோம். பசியில் ருசி இரட்டிப்பானது.



6 கிமீ மலைச்சாலையைக் கடந்து குமுளியை அடைகிறோம். குமுளி ஒரு வாசனை நகரம். மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விளையும் வாசனை பூமி அது. வளைந்து நெலிந்து செல்லும் சாலையின் இருபுறமும் பலா, ஏலக்காய், காபி, தேயிலை மற்றும் மிளகுக் கொடிகளின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே பயணித்து வாகமனை அடைந்தோம். காட்சிகள் மாறியதே தவிர பசுமை மாறவில்லை.




நாம் எலப்பாரா வழியாக வாகமன் செல்லாமல், 10 கிமீ தூரம் குறைவான செங்கரா வழியில் சென்றோம். வாகமனின் முதல் காட்சியே நம்மை மயக்கப் போதுமானதாக இருந்தது.  தூரத்தில் தெரிந்த பசும்புல் அப்பிய மலை வாகமனின் குளிரைத் தாங்காது மலை தனக்குப் போர்த்திக்கொண்ட பிரம்மாண்டக் கம்பளி போல் காட்சிப்படுகிறது.




வாகமன் ஒரு சிறிய நகரம். ஊரின் நுழைவாயிலை இருபுறமும் புல்வெளிகள் அழகுபடுத்துகின்றன. ஊரைச் சுற்றித் தேயிலைத் தோட்டங்கள். தேயிலைத் தோட்டத்தின் நடுவே ஒரு சிறிய ஏரி. படகு சவாரி செய்யலாம். மாலை நான்கு மணிக்கே பனி இறங்கிவிடுகிறது. விளக்கொளியுடன் பைக்கை செலுத்தி நகருக்குள் சென்று ஒரு தங்கும் விடுதியில் எங்களுக்கான அறையைப் பதிந்துகொண்டு இளைப்பாறினோம். தங்கும் விடுதிக்கு வாகமனில் பஞ்சமில்லை. எட்டுக்கு ஒரு விடுதி உள்ளது. மாலை எந்தத் திட்டமும் இல்லை. பொதுவாக நமது பயணம் திட்டமிடப்பட்ட சுற்றுலாவாக இருக்காது. பல இடங்களைப் பார்த்து விட வேண்டும் என்ற மனப்பான்மையும் இல்லை. பார்க்கும் இடங்களின் எண்ணிக்கைக்கேற்ப இன்பம் இரட்டிப்பாகும் என்ற எண்ணமும் இல்லை. அத்தகைய எண்ணம் ஒரு மாயை. நம்முடைய பயணம் எப்போதும் பயணிக்கும் இடத்துடன் ஒன்றி சூழ்நிலைக்கேற்ற வாழ்வை வாழ்ந்து விட்டு வருவதாகவே இருக்கும். வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து கொஞ்சம் மாறுபாட்ட வாழ்வை வாழும் ஒரு வாய்ப்பு அவ்வளவே. அது மனதிற்கு அமைதியையும் உடலுக்கு உற்சாகத்தையும் கொடுத்தால் போதும்…  

கடைத்தெரு வரை காலாற நடந்து சென்று குளிரை அனுபவித்துத் திரும்பினோம். விடுதிக்கு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து தூரத்தில் தெரிந்த மலைக் குன்றுகளைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இருட்டத் தொடங்கியது. விடுதியின் உரிமையாளர்  கேம்ப் ஃபயர் தயார் செய்து கொடுத்தார். வானத்தில் வெள்ளி முளைக்கவில்லை, மழைக்கான அறிகுறி.. சிறிது நேரத்தில் தூரல் போட்டு கேம்ப் ஃபயரை முடித்து வைத்தது. மீதிக் கச்சேரியைத் திண்ணையில் தொடர்ந்தோம். இரவு உணவாக சப்பாத்தியும் சூடான சிக்கன் கிரேவியும் வந்து, வந்த வேகத்தில் வயிற்றை நிரப்பி மறைந்தது. கேரள உணவின் தீவிர ரசிகன் நான்.. அடுத்து தமிழ் திரைப்படங்களின் லேட்டஸ்ட் குத்துப் பாடல்களுக்கான நடன அரங்கேற்றம் நடைபெற்றது. கண்ணன் நடனத்தில் அனைவரையும் விஞ்சியிருந்தார். உற்சாக மனதுடன் கம்பளிக்குள் தஞ்சமடைந்து தூங்கினோம்.

அதிகாலை… மணி 5:30.. இதமான குளிர்.. கம்பளியின் கதகதப்பு.. விழிப்பு வந்தாலும் எழ மனமின்றி, கதகதப்பை அனுபவித்துப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அனைவரும் எழுந்துவிட குளிரில் ஒரு நடை சென்றோம். குளிருக்கு இதமாய் ஆளுக்கு ஒரு ‘சாயா’ அடித்தோம். சொம்பு போன்ற பெரிய கண்ணாடிக் கோப்பையில் வழங்கப்பட்ட சாயா, பருக சற்று நேரம் பிடிக்கிறது. நம் ஊர் அளவை விட அதிகம்.


அறையை அடைந்து தயாரானோம். காலை உணவாக ஆப்பமும் முட்டைக் குருமாவும் புதிய சுவையைக் கொடுத்தன. பைக்கை எடுத்துக் கொண்டு எலப்பாரா செல்லும் சாலையில் பயணித்தோம். வலது புறம் ஒரு மிகப்பெரிய கற்பாறை அழகிய ஓவியம் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. பூதக் கண்ணாடியில் பார்த்தபோது எறும்பு போல் சாரை சாரையாக மனிதர்கள் அதன் உச்சியில் நடந்து கொண்டிருந்தனர். தங்கல்பாறை அதன் பெயர். இஸுலாமியர்களின் புனிதத் தளம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் ‘பீர் முகமது’ என்ற இஸுலாமியத் துறவி அங்கு வந்து தொழுகை செய்த வரலாற்றைக் கொண்டது. நாமும் அங்கே சென்றோம். 

தங்கல்பாறை

பைக்கை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு மலையேறினோம். செங்குத்தாக இல்லாமல் ஏறுவதற்கு எளிதாகவே இருந்தது. உயரே செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரித்து வெயிலின் தாக்கத்தைக் குறைக்கிறது. பாறை இடுக்கில் தேங்கிய மண்ணில் அங்காங்கே எழுமிச்சம் புற்கள் வளர்ந்திருக்கின்றன. அதைக் பிடுங்கி அதில் வரும் சுகந்தமான வாசனையை முகர்ந்து புத்துணர்ச்சி அடைந்தோம்.


மலை உச்சியின் குறுக்கே ஓரிடத்தில் பள்ளமான பகுதி வருகிறது. அந்தப் பகுதியின் இருபுறத்தையும் ஒரு ‘வின்ச்’சால் இணைத்துத் தொழுகைக்குத் தேவையான பொருட்களை அதில் கடத்துகிறார்கள். அந்தப் பள்ளத்தின் மறுபக்கத்தை அடைந்தால் பீர் முகமது அவர்கள் தொழுகை செய்த இடத்தை அடையலாம்.


வின்ச்
அப்போது கண்ணனிடம் அவரின் பைக் சாவி இல்லாதது தெரிந்தது. கண்ணன் நம்மை முன்னேறச் சொல்லிவிட்டு பைக் சாவியை தேடச் சென்றார். அனால் அவரை விட்டுச் செல்வது அவ்வளவு நல்ல செயல் அல்ல என்பதால் நாமும் அவரோடு சாவியைத் தேடினோம். கடைசியில் சாவி அவரின் பைக்கிலேயே விட்டு வந்திருக்கிறார். மலையேற்றம் தந்த களைப்பை ‘குலுக்கிய சர்பத்’ அடித்துத் தணித்தோம். அந்த அனுபவம் இங்கே…

குலுக்கிய சர்பத்

தங்கல்பாறையின் இடதுபுறம் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் ஒரு பசுமையான பள்ளத்தாக்கு உள்ளது. நாங்கள் சென்றபோது யாரும் இல்லை. அங்கிருந்த ஒரு கூடாரத்தில் அமர்ந்து இயற்கையின் துணையை அனுபவித்தோம். வானத்தின் நீலத்தைக் கரைத்துப் பள்ளத்தாக்கு முழுதும் தெளித்ததுபோல், பள்ளத்தாக்கு நீலமாய் தெரிந்தது. பள்ளத்தாக்கில் இருந்து மேல் நோக்கி வரும் காற்று சாமரம் வீசியது. அப்போது பேருந்தில் ஒரு சுற்றுலாக் குழுவினர் அங்கு வர அவர்களுக்கு அந்த இடத்தை விடுத்துக் கிளம்பினோம். 




சூரியன் உச்சிக்கு வந்திருக்க அவரிடம் இருந்து தப்பித்து பைன் மரக்காட்டிற்குள் தஞ்சமடைந்தோம். இது எலப்பாரா செல்லும் சாலையிலேயே உள்ளது. மலைச்சரிவில் ஓங்கு தாங்காய் வளர்ந்த பைன் மரங்கள் அடர்ந்திருக்கும் காடு அது. சூரியக் கதிர்கள் தடை செய்யப்பட்ட பகுதி. மரக்கிளைகள் ஒன்றோடொன்று கைகோர்த்து இயற்கையான குளிர்சாதன வசதியைக் கொடுத்தது. உதிர்ந்த பைன் மர இலைகளின் மேல் நடப்பது மெத்தை மேல் நடப்பது போல் இருந்தது.  மதிய வெயிலுக்கு வாகமனின் முக்கால்வாசி சுற்றுலாப் பயணிகள் அங்கே தான் இருந்தனர். அந்தக் கூட்டம் நமக்கும் இயற்கைக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியது போல் தோன்றியது. தனிமையும் அதை நிறப்ப இயற்கையும் ஒரு பேரின்பம். ஒதுக்குப்புறமான இடத்தைத் தேடி சிறிது இளைப்பாறினோம். அறைக்குச் சென்று மதிய உணவு அருந்திவிட்டு சிறிது கண் அயர்ந்தோம். 

பயணம் தொடரும்... வாகமன் பயணம் நிறைவு இங்கே

Friday 9 June 2017

கள்ளும்...கப்பையும்...மீன் குழம்பும்...

சமீபத்தில் வாகமன் சென்றிருந்த போது ‘குளுக்கிய சர்பத்’ அருந்திய அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன். இது அதே வாகமன் பயணத்தில் மற்றொரு சுவையான அனுபவம்.


வாகமன் பயணத்தை முடித்துவிட்டுச் ‘செங்கரா’ வழியாகக் குமுளி திரும்பிக் கொண்டிருந்தோம். சாலையின் இருமருங்கும் பசுமை சூழ்ந்திருக்க அதை ரசித்துக் கொண்டு பயணித்தோம். ‘ஃபாத்திமுக்கு’ என்ற இடத்தைக் கடக்கும்போது அந்தப் பசுமைக்குள் இருந்து ஒரு சிறிய கட்டிடம் எட்டிப் பார்க்கிறது. வெள்ளைப் பலகையும் அதில் உள்ள கருப்பு எழுத்துக்களும் நம் கண்களை மின்னச் செய்ய, அதைப் பார்த்ததும் சடன் பிரேக் அடித்து நிற்கிறோம். 


பின்னணியில் "ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்.... இந்தப் பார்வை பார்க்கப் பகலிரவா பூத்திருந்தேன்....", என்ற பாடல் வரிகள் நமக்குக் கேட்கிறது. ஆம், நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கேரளப் புகழ் கள்ளுக் கடை இது தான். நம்மூரில் தலைகீழாய் நின்றாலும் கிடைக்காத ஒன்று.. விட்டுவிடுவோமா? கடைக்குப் படையெடுத்தோம்.

முதலில் நம் மனதைக் கவர்ந்தது அந்தக் கடை அமைந்த இடம். சுற்றிலும் மிளகுக் கொடி படர்ந்த பலா மரங்களும், ஊடே வாழை மரங்களும் சூழ்ந்திருக்க கீழே ஆறு ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தது. தோட்டத்தின் நடுவே இந்தக் கடை மட்டுமே..




கடையின் உள்ளே சென்றோம். மிகச் சிறிய கடை இரண்டே இரண்டு பெஞ்ச் போடும் அளவுக்கு இருந்தது. இரண்டையும் நாம் ஆக்கிரமித்தோம். உள்ளே இரண்டு பெரிய அண்டாக்களில் பால் போன்று வெள்ளை நிறத்தில் கள் நிரம்பியிருந்தது. நமக்கு இருந்த ஆவலில் அண்டாவைத் தூக்கி அப்படியே குடித்துவிடத் தோன்றியது. 'கள்ளுண்ணாமை' என்ற அதிகாரத்தில் கள் உண்பது தவறு என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்படி வெள்ளை வெளேர் என்று வெள்ளந்தியாக இருக்கும் கள்ளை நம்மால் புறக்கணிக்க முடியவில்லை. வள்ளுவரிடம் மன்னிப்பு வேண்டிவிட்டு கடைக்காரரிடம் கள் வேண்டும் என்றோம். 'தென்னையா? இல்லை பனையா?' என்றார். 'கேரளாவில் பனை மரம் எங்கே இருக்கிறது?' என்று நினைத்துக் கொண்டு, எதற்கு வம்பென்று தென்னங்கள் கேட்டோம். தொட்டுக் கொள்ள வேக வைத்த கப்பைக் கிழங்கும், மீன் குழம்பும் சொல்லிவிட்டு ஆவலாய் காத்திருந்தோம்.




ஒரு லிட்டர் அளவுடைய இரண்டு பிளாஸ்டிக் குவளைகளில் கள் வந்தது, பின்னாடியே கப்பையும் மீன் குழம்பும்.. ஆளுக்கு ஒரு கண்ணாடிக் கோப்பையில் கள்ளை ஊற்றிக் கொண்டு பயபக்தியுடன் அதை எடுத்து ஒரு வாய் பருகிப் பார்த்தோம். சும்மா சொல்லக் கூடாது, அமிர்தம் என்றால் அது இது தான். நாவின் நுணி இனிப்பை உணர, நாவின் பக்கவாட்டில் உள்ள சுவை நரம்புகள் கள்ளின் புளிப்பைப் பெற்று மூளைக்கு செலுத்துகிறது. புளிப்பும் இனிப்பும் கலந்த அந்தக் கள்ளின் சுவைக்கு மகுடிக்கு மயங்கிய பாம்பைப் போல் மயங்கினோம். 


சிறகடிப்போம்

அந்தச் சுவையின் மயக்கத்தில் அப்படியே கப்பைக் கிழங்கை ஒரு விள்ளல் எடுத்து மீன் குழம்பில் தொட்டு, கொஞ்சம் மீனோடு வாய்க்குக் கொடுத்த போது ஏற்கனவே கள்ளின் சுவையில் மெய் மறந்திருந்த நாம் இப்போது மீன் குழம்பின் சுவையில் திக்குமுக்காடி விடுகிறோம். சூரியா ஜோதிகா போல் அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் கள்ளும் மீன் குழம்பில் நனைந்த கப்பையும்...



தென்னை மரத்தில் தேங்காய் கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவ்வளவு உயரத்தில் ஏறி தென்னம்பாளை பூப்பதற்குள்  அதன் முனையை சீவி விட்டால் அதில் இருந்து அமிர்தம் போன்ற ஒரு திரவம் வரும். அதைப் பருகி இன்புறலாம் என்று கண்டுபிடித்து நமக்குச் சொன்ன நம் முன்னோர்களை என்னவென்று பாராட்டுவது!!

மீன்குழம்பின் காரம் நாவைத் தூண்ட கை தானாகக் கள் இருக்கும் கோப்பையை நாடுகிறது. இவ்வாறு ஒரு ஐந்தாறு கோப்பைகள் தீர்ந்ததும் நமது வயிறோடு மனதும் நிறைந்தது. நினைத்துப் பாருங்கள் பகலெல்லாம் பாடுபட்டு, அந்தி சாய்ந்ததும் இது போன்ற ஒரு இயற்கை நிறைந்த இடத்தில் கையில் ஒரு கோப்பை கள்ளும்   தொட்டுக் கொள்ள கப்பையும் மீன் குழம்பும் இருக்க, கவலை மறந்து வாழ்வை ரசித்துக் கொண்டிருக்கும்போது பின்னணியில் ஜேசுதாஸ் "கடலினக்கர போனோரே... காணா பொன்னினு போனோரே..."  என்று பாடிக்கொண்டிருப்பார். மண்ணுலகில் இதை விட சொர்க்கம் வேறென்ன இருக்க முடியும்...

Friday 2 June 2017

குளிர்பானத்தில் எய்ட்ஸ் இரத்தம்...



பெண்களிடம் ஒரு விசயத்தைச் சொன்னால் போதும் அது ஒரு நொடியில் ஊரெல்லாம் பரவிவிடும் என்று நம்மூர் பக்கம் கேலியாகச் சொல்வதுண்டு ஊரில் கிழக்குத் தெருவில் நடந்து போகும்போது வீட்டுத் திண்ணைகளில் உட்கார்ந்து வெற்றிலை இடித்து மென்றுகொண்டு இருக்கும் பாட்டிகள் நம்மைப் பார்த்து “ என்னடா, பாலன் மகனே எங்கயோ பட்டணத்துல படிக்கப் போயிருக்கனு சொன்னாக, நீ  ஊருக்குள்ள சுத்திக்கிருக்க…” என்று கேட்க, “பத்து நாள் லீவு விட்ருக்காங்க பாட்டி” என்று பதில் சொல்லிவிட்டு மேலத்தெரு தான் போய் இருப்போம், அங்க இரண்டு பாட்டிகள் இவ்வாறு பேசிக்கொண்டிருப்பது நம் காதில் விழும், “அடியே, தெரியுமா சேதி ? பட்டணத்துக்குப் படிக்கப் போன நம்ம பாலன் மகனுக்கு படிப்பு வரலனு வீட்டுக்குப் பத்திவிட்டாகளாம்டீ”. அம்புட்டு ஸ்பீடு.. (மகளிர் மண்ணிக்க..).   அந்த வேகத்தை எல்லாம் மிஞ்சுவதற்குத் தான் வாட்ஸப்பும், ஃபேஸ்புக்கும் வந்துள்ளது. ஒளியின் வேகத்தையும் மிஞ்சி உலக எல்லைகளுக்குத் தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றன, இவை இரண்டும். அதில் வரும் தகவல்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டம் சமீபத்திய உதாரணம். ஆனால் அதில் வரும் தகவல்கள் நூறு சதவிதம் உண்மை தானா என்றால்  இல்லை. அப்படித்தான் கீழ்வருவது போல் ஒரு தகவல் ரொம்ப நாட்களாக உலாவிக்கொண்டு இருக்கிறது. அதாவது,

      “ஒரு பன்னாட்டுக் குளிர்பான நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது. அவர் தன் இரத்தத்தை அந்நிறுவனத்தின் குளிர்பானத்தைத் தயாரிக்கும்போது அதில் கலந்து விட்டார். அந்த குளிர்பானத்தைக் குடிப்பவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவி விடும், அதனால் யாரும் அந்தக் குறிப்பிட்ட குளிர்பானத்தைப் பருக வேண்டாம்.” 

இவ்வாறு அந்தச் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் ஆகியவையே மனிதனுக்குப் பெரும்பான்மையான நோய்களைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் ஆகும். இதில் பூஞ்சையும் பாக்டீரியாவும்  தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும். ஆம், டெட்டால் மற்றும் சோப்பு விளம்பரங்களில் வருவது போல் நிலம், நீர், காற்று, நாம் சாப்பிடும் தட்டு, மனித உடல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்... ஆனால் இந்த வைரஸ் இருக்கு பாருங்கள் அது செயல்பட ஒரு உயிருள்ள மீடியம் தேவை. அதாவது மனிதன் உயிர் வாழக் காற்று எவ்வளவு முக்கியமோ அது போல.. உயிருள்ள உடலை விட்டு அது வெளியேறினால் அது செயலற்றுவிடும் (இறந்துவிடும் என்று வைத்துக் கொள்ளுங்கள்)..

எய்ட்ஸ் என்பது HIV (HUMAN IMMUNODEFICIENCY VIRUS) எனப்படும் வைரஸால் பரவக் கூடியது. ஆகவே அந்தச் செய்தியில் வருவது போல் அந்த ஊழியர் எய்ட்ஸ் இரத்தத்தைக் குளிர்பானத்தில் கலந்திருந்தால் அந்த இரத்தம் உடலை விட்டு வெளி வந்த சில நொடிகளிலேயே அதில் இருக்கும் வைரஸ் செயலற்று விடும். ஆகையால் அதைப் பருகும் எவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவ வாய்ப்பில்லை.. அப்படியே அந்தக் கிருமி உயிருடன் இருந்தாலும் (ஒரு பேச்சுக்கு), அதைப் பருகும் போது நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரில் உள்ள நொதிப்பான்கள் (enzymes) வைரஸை நொதித்து விடும். அதையும் மீறி வயிற்றுக்குள் சென்றால் அங்கே இருக்கவே இருக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம், அது அந்த வைரஸை ஒரு வழி பண்ணி விடும், கவலையை விடுங்கள். நீங்கள் பயப்பட வேண்டியதெல்லாம் அந்தக் குளிர்பானங்களில் கலந்திருக்கும் பெயர் தெரியாத இரசாயனங்களுக்கு மட்டுமே..


நினைவில் கொள்ளுங்கள் எய்ட்ஸ் பரவ வேண்டுமானால் எய்ட்ஸ் பாதித்த ஒருவரின் இரத்தம் மற்றவரின் இரத்த ஓட்டத்தில் நேரடியாகக் கலக்க வேண்டும் அவ்வளவே.. ஆகையால் இது போன்ற வதந்திகளைப் பரப்பி உங்கள் பொன்னான மொபைல் டேட்டாவை வீணடிக்காதீர்கள்.