Friday 1 September 2017

உயிரைக் குடித்த அனிதாவின் கனவு

கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூறியிருக்கிறார். கனவு ஒரு மனிதனின் வாழ்வை மட்டுமின்றி அவன் வாழும் நாட்டையும் முன்னேற்றும். ஆனால் இன்று நடந்தது அதுவல்லவே. கனவு ஒரு அபலை மாணவியின் வாழ்வையல்லவா பறித்திருக்கிறது.  


ஆம் அனிதா என்ற அந்த ராசியில்லா ராணி, மருத்துவர் ஆகும் தன் கனவுகள் நிறைவேறா விரக்தியில் இன்று தன் உயிரைத் தொலைத்திருக்கிறாள். மற்றவர்களைப் போல புத்தகச் சுமையைத் தோளிலும் கனவுகளை மனதிலும் சுமந்து பள்ளி சென்ற அம்மாணவி பெற்றது 1176 என்னும் இமாலய மதிப்பெண்கள். அதைப் பெற அவள் எவ்வளவு கடினப்பட்டிருப்பாள். இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் நீட்(NEET) தேர்வில் வெற்றி பெற இயலாததால் அவளது மருத்துவக் கனவு கலைந்துவிட்டது. தூக்கம் மறந்து அவள் கண் விழித்துப் படித்த ஒவ்வொரு இரவும் அவளுக்குத் தெரிந்திருக்குமா அவள் பெறப் போகும் மதிப்பெண்கள் அனைத்தும் காற்றில் கரையும் கற்பூரம் போல் ஆகும் என்று. பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்கள் சொல்லும் பொதுவான அறிவுரை "இந்த ஒரு வருடம் மட்டும் நீங்கள் கஷ்டப்பட்டுப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் போதும், பிறகு நீங்கள் வாழ்க்கை முழுதும் சந்தோஷமாக இருக்கலாம்." என்பதே. அதைத் தானே செய்தாள் அனிதா. பிறகு ஏன் அவளுக்கு இந்த நிலை.

ஒரு வருடம் கடினப்பட்டுப் பெற்ற மதிப்பெண்களுக்கு மதிப்பு இல்லை என்றால் அவை மதிபெண்கள் அல்ல மதிப்பில்லா எண்கள் தானே. அந்த மதிப்பில்லா எண்களைப் பெறவா ஒரு தேர்வு. பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று எத்தனை மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அனைத்திற்கும் அர்த்தம் இல்லாமல் செய்யவா இந்த நீட் தேர்வு. நீட் தேர்வு தான் முடிவு என்றால் பிறகு பொதுத் தேர்வின் அவசியம் என்ன? பலதரப்பட்ட பாடத்திட்டங்களைக் கொண்ட நாட்டிற்கு ஓரே நுழைவுத் தேர்வு என்பது பொதுவாக இருக்க முடியுமா?  

பரந்த இந்த தேசத்தில் கல்வியின் தரம் பணத்தின் தரத்திற்கு ஏற்பவல்லவா இருக்கிறது. அம்பானிக்குக் கிடைப்பது அனிதாவுக்குக் கிடைப்பதும் சமமாகுமா? இருவரையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது நியாயமா? அனைவருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்த மத்திய அரசாங்கம் அதன் முதல் படியாக அனைவருக்கும் பொதுவான கல்வியைக் கொண்டு வந்திருக்க வேண்டும் அல்லவா? கல்வி என்பது வியாபாரம் என்ற நிலை மாறி அனைவருக்கும் அரசாங்கமே இலவசமாகக் கல்வியை வழங்குவதோடு ஒரு பொதுவான பாடத் திட்டத்தையும் கொண்டு வந்தால் மட்டுமே பொதுத் தேர்வு என்பது ஞாயமாக இருக்கும். அப்போது தான் அனிதா போன்ற பல திறமைசாலிகளின் இழப்பை இந்த நாடு தவிர்க்கும். அனிதாவின் ஆத்மாவும் சாந்தியடையும்.

3 comments:

  1. அனைத்து தமிழக மக்களின் மனப்பதிவு இதுவே.....
    அனிதா பட்ட மனவேதனையை நினைத்தால் நெஞ்சம் கலங்குகிறது...
    கண்ணீர் அஞ்சலி....
    அவர்களின் காதில் கேட்டுமா நம் மாணவர்களின் விம்மல்கள்?......

    கேட்க வைப்போம்.,.....

    ReplyDelete
    Replies
    1. அனிதா போல் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ?? வேதனை...

      Delete