Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Saturday 11 November 2017

நான் ஈ..

கோணாரே..!!கோணாரே..!!
கொம்புச் சத்தம் கேட்ட ஊராரே!! 

ஊராருடைய நெல்லே!!
நெல்லுக்கடியில் போகிற நீரே!! 

நீருக்கடியில் போகிற மீனே!! 
மீனைத் திண்ணும் கொக்கே!!

கொக்கு ஏறிய கட்டையே!!
கட்டை ஏறிய கரையானே!!

கரையானைப் பிடிக்கும் காடையே!!
காடையைப் பிடிக்கும் வேடனே!!

வேடனோட ராஜாவே!!
ராஜாவோட குதிரையே!!
என் பெயர் என்ன??
ஈஈஈஈஈஈஈஈ....

என்ன ஒன்றும் புரியவில்லையா? சரி விளக்கமாகச் சொல்கிறேன்.

என் அன்னையுடன் பிறந்த அக்கா வால்பாறையில் இருக்கிறார். சிறு வயதில் ஒவ்வொரு வருடமும் முழுப் பரீட்சை விடுமுறைக்கு நான் அங்கே சென்று ஒரு மாதம் தங்கியிருந்து வருவேன். என் பெரியன்னையின் அண்டை வீட்டுச் சிறுவர்கள் எனக்கு நல்ல தோழர்களாகினர். அவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடல் தான் மேலே உள்ளது. அது வெறும் பாடல் அல்ல. அதில் ஒரு கதை அடங்கியிருக்கிறது. தன் பெயர் மறந்த ஒரு ஈ, தன் பெயரைக் கண்டுபிடிக்கும் கதை. கதையைக் கேளுங்கள்.

ஒரு ஊரில் இருக்கும் ஒரு 'ஈ'க்கு தன் பெயர் மறந்துவிடுகிறது.  எவ்வளவு யோசித்தும் ஞாபகம் வரவில்லை. அப்போது அந்த வழியாக ஒரு கோணார் வருகிறார். சரி இவரிடம் கேட்போம் என்று "கோணாரே.. கோணாரே.., என் பெயர் எனக்கு மறந்துவிட்டது. உங்களுக்குத் தெரியுமா? என் பெயர் என்ன?" என்று கேட்கிறது. அதற்கு அந்தக் கோணார் "உன் பெயர் எனக்குத் தெரியாது. நீ போய்க் கொம்புச் சத்தம் கேட்ட ஊராரிடம்  கேள்", என்கிறார்.   

சரி என்று அந்த ஈ, ஊராரிடம் போய் "கொம்புச் சத்தம் கேட்ட ஊராரே.., என் பெயர் என்ன?" என்று கேட்கிறது. அதற்கு அந்த ஊராரும் "எனக்குத் தெரியாது. நீ போய் ஊராருடைய நெல்லிடம் போய்க் கேள்", என்கிறார்.   

அவர் சொன்னவாரே அந்த ஈ வயலில் இருக்கும் நெல்லிடம் போய் "ஊராருடைய நெல்லே.., என் பெயர் என்ன?" என்று கேட்க, அந்த நெல் "எனக்குத் தெரியாது. நீ நெல்லுக்கடியில் ஓடும் நீரிடம் போய்க் கேள்" என்கிறது. 

உடனே அந்த ஈ, நீரிடம் சென்று, "நெல்லுக்கடியில் ஓடும் நீரே.., என் பெயர் என்ன?" என்று கேட்க, அதற்கு அந்த நீர், "எனக்குத் தெரியாது. நீ நீருக்கடியில் ஓடும் மீனிடம் கேள்" என்கிறது. 

அந்த ஈயும், "நீருக்கடியில் ஓடும் மீனே.., என் பெயர் என்ன?" என்று கேட்க, அந்த மீனும் அதேபோல் "உன் பெயர் எனக்கு எப்படித் தெரியும். நீ மீனைத் திண்ணும் கொக்கிடம் போய்க் கேள்" என்று சொல்கிறது.

உங்களைக் போல் இப்போது ஈக்கும் பயங்கரக் கடுப்பாகிவிட்டது. சரி போய்த் தான் கேட்போம் என்று கொக்கிடம் போய், "மீனைத் திண்ணும் கொக்கே.., என் பெயர் என்ன?" என்று வினவ, அந்தக் கொக்கோ, கொக்கு ஏறிய கட்டையிடம்  போய்க் கேட்கச் சொல்கிறது. 

இதைக் கேட்ட ஈ, கொக்கு ஏறிய கட்டையிடம் சென்று, "கொக்கு ஏறிய கட்டையே.., உனக்காவது என் பெயர் தெரியுமா?" என்று கேட்க,  அதற்கு அந்தக் கட்டையோ, "எனக்குத் தெரியாது. நீ கட்டை ஏறிய கரையானிடம் போய்க் கேள்" என்று சொன்னது.

ஈயும் நேராகக் கரையானிடம் போய்க் "கட்டை ஏறிய கரையானே.., என் பெயர் என்ன?" என்று கேட்டு நிற்க, கரையானோ "எனக்குத் தெரியாது. நீ கரையானைப் பிடிக்கும் காடையிடம் போய்க் கேள்" எனக் கூறியது.

'ஷப்பாஆஆஆ... இப்பவே கண்ண கட்டுதே', என்று நினைத்துக் கொண்டு ஈ, காடையிடம் போய்க், "கரையானைப் பிடிக்கும் காடையே.., நீயாவது என் பேர் என்னனு சொல்லக் கூடாதா?" என்று கேட்க, அதற்கு அந்தக் காடை எல்லோரையும் போலவே "எனக்கும் தெரியாதப்பா, நீ போய்க் காடையைப் பிடிக்கும் வேடனிடம்  கேட்க வேண்டியது தானே" என்று கூற, வேறு வழியில்லை என்று நேராக வேடனிடம் போய் "காடையைப் பிடிக்கும் வேடனே.." என்று விசயத்தைச் சொன்னது.

வேடனும் "உன் பெயர் எனக்குத் தெரியாதப்பு. நீ வேணும்னா, வேடனோட ராஜாவிடம் போய்க் கேட்டுப் பார்" அப்படினு சொல்ல, ராஜாவுக்கு எப்படியும் தெரியும் என்று அவரிடம் போய் "வேடனோட ராஜாவே.., என் பெயர் எனக்கு மறந்து போச்சு. நீங்களாவது சொல்லுங்களேன்" என்று கேட்க, ராஜாவும் யோசித்துவிட்டு "எனக்கும் உன் பெயர் தெரியவில்லை. வேணும்னா என் குதிரையிடம் கேட்டுப் பார்", என்று கூறுகிறார்.

ஈயும் குதிரையிடம் போய் "ராஜாவோட குதிரையே.., நீயாவது என் பெயர் என்னனு சொல்லேன்" என்று கூறிவிட்டு 'முடியலடா சாமி' என்று அப்படியே குதிரையின் மூக்கில் போய் உட்கார்ந்தது. ஈ உட்கார்ந்த குறுகுறுப்பில் குதிரை 'ஈஈஈஈஈஈஈ....' என்று கணைத்தது. உடனே அந்த ஈ "ஓஹோ, ஈ தான் என் பெயரா!!" என்று  தன் பெயரைக் கண்டுபிடித்துவிட்டதில் "நான் ஈ... நான் ஈ.." என்று கத்திக்கொண்டே மகிழ்ச்சியாகத் பறந்து சென்றது. இப்போது மேலே சென்று அந்தப் பாடலை மீண்டும் படித்துப் பாருங்கள், கதை புரியும்.

Friday 1 September 2017

உயிரைக் குடித்த அனிதாவின் கனவு

கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூறியிருக்கிறார். கனவு ஒரு மனிதனின் வாழ்வை மட்டுமின்றி அவன் வாழும் நாட்டையும் முன்னேற்றும். ஆனால் இன்று நடந்தது அதுவல்லவே. கனவு ஒரு அபலை மாணவியின் வாழ்வையல்லவா பறித்திருக்கிறது.  


ஆம் அனிதா என்ற அந்த ராசியில்லா ராணி, மருத்துவர் ஆகும் தன் கனவுகள் நிறைவேறா விரக்தியில் இன்று தன் உயிரைத் தொலைத்திருக்கிறாள். மற்றவர்களைப் போல புத்தகச் சுமையைத் தோளிலும் கனவுகளை மனதிலும் சுமந்து பள்ளி சென்ற அம்மாணவி பெற்றது 1176 என்னும் இமாலய மதிப்பெண்கள். அதைப் பெற அவள் எவ்வளவு கடினப்பட்டிருப்பாள். இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் நீட்(NEET) தேர்வில் வெற்றி பெற இயலாததால் அவளது மருத்துவக் கனவு கலைந்துவிட்டது. தூக்கம் மறந்து அவள் கண் விழித்துப் படித்த ஒவ்வொரு இரவும் அவளுக்குத் தெரிந்திருக்குமா அவள் பெறப் போகும் மதிப்பெண்கள் அனைத்தும் காற்றில் கரையும் கற்பூரம் போல் ஆகும் என்று. பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்கள் சொல்லும் பொதுவான அறிவுரை "இந்த ஒரு வருடம் மட்டும் நீங்கள் கஷ்டப்பட்டுப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் போதும், பிறகு நீங்கள் வாழ்க்கை முழுதும் சந்தோஷமாக இருக்கலாம்." என்பதே. அதைத் தானே செய்தாள் அனிதா. பிறகு ஏன் அவளுக்கு இந்த நிலை.

ஒரு வருடம் கடினப்பட்டுப் பெற்ற மதிப்பெண்களுக்கு மதிப்பு இல்லை என்றால் அவை மதிபெண்கள் அல்ல மதிப்பில்லா எண்கள் தானே. அந்த மதிப்பில்லா எண்களைப் பெறவா ஒரு தேர்வு. பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று எத்தனை மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அனைத்திற்கும் அர்த்தம் இல்லாமல் செய்யவா இந்த நீட் தேர்வு. நீட் தேர்வு தான் முடிவு என்றால் பிறகு பொதுத் தேர்வின் அவசியம் என்ன? பலதரப்பட்ட பாடத்திட்டங்களைக் கொண்ட நாட்டிற்கு ஓரே நுழைவுத் தேர்வு என்பது பொதுவாக இருக்க முடியுமா?  

பரந்த இந்த தேசத்தில் கல்வியின் தரம் பணத்தின் தரத்திற்கு ஏற்பவல்லவா இருக்கிறது. அம்பானிக்குக் கிடைப்பது அனிதாவுக்குக் கிடைப்பதும் சமமாகுமா? இருவரையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது நியாயமா? அனைவருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்த மத்திய அரசாங்கம் அதன் முதல் படியாக அனைவருக்கும் பொதுவான கல்வியைக் கொண்டு வந்திருக்க வேண்டும் அல்லவா? கல்வி என்பது வியாபாரம் என்ற நிலை மாறி அனைவருக்கும் அரசாங்கமே இலவசமாகக் கல்வியை வழங்குவதோடு ஒரு பொதுவான பாடத் திட்டத்தையும் கொண்டு வந்தால் மட்டுமே பொதுத் தேர்வு என்பது ஞாயமாக இருக்கும். அப்போது தான் அனிதா போன்ற பல திறமைசாலிகளின் இழப்பை இந்த நாடு தவிர்க்கும். அனிதாவின் ஆத்மாவும் சாந்தியடையும்.

Saturday 5 August 2017

குழந்தைப் பருவப் பாடல்

வாழ்வில் ஒரு சமயம் சலிப்புறும்போது குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் நமக்குத் தோன்றியிருக்கலாம். கவலையே அறியாத பருவம் அல்லவா அது!! எவ்வளவு பெரிய விசயத்தையும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.  அப்படி சிறு வயதில் விளையாட்டுத்தனமாக நாங்கள் பாடிய பாடல் ஒன்றை இங்கே பகிர்கிறேன்.


"இரண்டு மனம் வேண்டும்... 
 இறைவனிடம் கேட்டேன்..
 நினைத்து வாழ ஒன்று.. 
 மறந்து வாழ ஒன்று..." 

என்று நடிகர் திலகம் காதல் தோல்வியில் பாடும் பாடல் அனைவரும் கேட்டிருப்போம்.  கேட்போர் மனதை உருகச் செய்யும் சோகமயமான பாடல் அல்லவா அது? கவியரசு கண்ணதாசன் அதை அற்புமாக எழுதியிருப்பார். ஆனால் அந்தப் பாடலை நாங்கள் பாடிய விதத்தைக் கண்ணதாசன் கேட்டால் என்ன செய்திருப்பாரோ, தெரியவில்லை. அந்தப் பாடல் கீழே..


"இரண்டு இட்லி வேண்டும்.. 
 சர்வரிடம் கேட்டேன்..
 சட்னியோடு ஒன்று.. 
 சாம்பாரோடு ஒன்று..

அரிசியின் தண்டனை மாவு வழி..
 மாவின் தண்டனை இட்லி வழி..
 இட்லியின் தண்டனை வயித்து வலிலிலிலி....
 சர்வரை தண்டிக்க என்ன வழி???" 

இவ்வாறு பாடிக்கொண்டிருப்போம். இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. 

Friday 23 June 2017

இயன்றவரும்... இயலாதவரும்...

நேரம், காலை 8:15. சென்னை  எழும்பூரிலிருந்து 'குருவாயூர் எக்ஸ்பிரஸ்' கிளம்புகிறது. சொந்த வேலையாக  சென்னை சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். சென்னையில் இருந்து மதுரைக்கு முதல் முறை பகலில் ரயில்பயணம். எனக்கு 'சைடு அப்பர் பெர்த்'  முன்பதிவாகி இருந்தது. லோயர் பெர்த்தில் திருச்சி செல்ல வேண்டிய ஒருவர். என்னைக் கீழே அமரச் சொல்லிவிட்டு அவர் மேலே சென்று படுத்துக்கொண்டார். ஜன்னல் காற்றை அனுபவித்துக்கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் பயணித்தேன்.

ரயில் தாம்பரம் தாண்டியதும் கால்கள் செயலிழந்த ஒருவர் தவழ்ந்து கொண்டு வந்தார். அவர் கையில் ஒரு துணி இருந்தது. வந்தவர் அந்தத் துணியை வைத்து நடைபாதையில் இருந்த தூசுகள் முழுதும் துடைக்க ஆரம்பித்தார். துடைத்துவிட்டு நடைபாதையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். வாய் திறந்து யாரிடமும் எதும் கேட்கவில்லை. ஒரு சிலர் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பினார். 

பிறகு செங்கல்பட்டில் ஒரு திருநங்கை ஏறி அனைவரிடமும் பணம் வேண்டினார்.  யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்று நன்கு அறிந்து வைத்திருக்கிறார். குடும்பமாய் வந்திருந்தவர்களை அவர் தொந்தரவு செய்யவில்லை. இளைஞர்கள் பலர் அவர் கேட்பதற்குள்ளாகவே பணத்தை நீட்டினர். பணம் தரத் தயங்கிய ஒரு சிலரையும் அவர் விடவில்லை. நின்று பெற்றுக் கொண்டே கிளம்பினார். பணம் கொடுத்தவர்களின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் அவர் கையில் பத்து ரூபாய் நோட்டுக்கள் கத்தையாய்  இருந்தன. மேல்மருவத்தூர் வந்ததும் இரயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் போய் குத்தவைத்து அமர்ந்துகொண்டார்.  

அடுத்து ஒரு தட்டில் அம்மன் படம், விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டும், 'ஓம்சக்தி.... ஓம்சக்தி...' என்று கூறிக்கொண்டும் சிவப்பும் மஞ்சளும் கலந்த உடை அணிந்த மூன்று பெண்கள் ரயிலில் ஏறிக் காணிக்கை கேட்டனர். மறக்காமல் கையில் வேப்பிலையும் எடுத்து வந்திருந்தனர். வந்ததற்காக சிலர் சில்லரைக் காசுகளைக் கொடுப்பதைப் பார்க்க முடிந்தது. திண்டிவனம் வந்ததும் இறங்கிவிட்டனர்.

கொஞ்ச நேரத்தில் வெள்ளை நிற கவுன் அணிந்த ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை வந்தது. பல நாள் உடுத்தியதில் வெள்ளை உடை மஞ்சளாய் காவியாய் மாறியிருந்தது. திடீரென்று அந்தக் குழந்தை, ரயில் பெட்டியின் ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் பல்டி அடித்துக்கொண்டே சென்றது. அதை பார்த்த ஒரு வயதான அம்மா அந்தக் குழந்தையை அழைத்து கையில் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து "நீ இதெல்லாம் செய்ய வேண்டாம்" என்று கூறி அனுப்பினார். அதைப் பெற்ற குழந்தை நேராகப் போய் கதவருகே மறைந்து அமர்ந்திருந்த தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்தது. அடுத்து கையில் வைத்திருந்த வளையத்தை கால் வழியாக இடுப்பிற்கு கொண்டுவந்து , உடலை ரப்பர் போல் வளைத்துத் தலையை மேலிருந்து கீழாக வளையத்திற்குள் விட்டு முதுகு வழியாக வளையத்தை வெளியே எடுத்தது. இதைப் பார்த்துப் பதறிய அந்த வயதான அம்மா அந்த குழந்தையை மீண்டும் மீண்டும் அழைத்தும் அந்தக் குழந்தை அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் காரியத்தில் கருத்தாக இருந்தது. பிறகு ஒரு தட்டைக் கொண்டுவந்து அனைவரிடமும் நீட்டியது. அந்த வயதான அம்மையார் அருகில் வந்தபோது வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது. அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது, வளர வளர வெட்டப்படும் தேயிலைச் செடி ஏனோ என் நினைவிற்கு வந்தது.

விழுப்புரத்தில் அவர்கள் இறங்கிவிட அங்கே பார்வையற்ற ஒருவர் ரயிலில் ஏறினார்.  ஏடிம் கவர், ரேசன் கார்டு கவர் போன்றவற்றை விற்று அதில் வரும் பணத்தைப் பார்வையற்றோர் ஆசிரமத்திற்கு அளிப்பதாகக் கூறினார். பெரிய வரவேற்பு இல்லை அவருக்கு. ஒரு சிலர் மட்டும் அனுதாபத்தில் அவர் விற்ற பொருட்களை வாங்கினர்.

இவ்வாறாக திருச்சி வரை ஒவ்வொருவராக மாறி மாறி தங்கள் பிழைப்புக்காக அந்த ரயிலைப் பயன்படுத்தினர். திருச்சியில் முக்கால்வாசிக் கூட்டம் இறங்கிய பிறகு மதுரை வரை வேறு யாரும் இவ்வாறு வரவில்லை

இந்த ரயில் பயணத்தில் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. இயலாதவர் கூட யாசிக்க மறுத்து உழைக்கிறார், ஆனால் இயன்றவரோ உழைக்க மறுத்து மற்றவரை அண்டிப் பிழைக்கிறார். 

அந்தக் கால் இழந்தவரும், கண் இல்லாதவரும் உழைத்துப் பிழைக்க நினைத்ததில் எனக்கு மேலாகத் தெரிந்தனர். சமூகப் புறக்கணிப்பால் யாசிக்கும் அந்தத் திருநங்கையின் செயல் கூடத் தவறாகத் தெரியவில்லை. ஆனால் அம்மன் பெயரைச் சொல்லி யாசித்த அந்தப் பெண்களின் கண்களுக்கு உழைத்துப் பிழைக்கும் அந்த மாற்றுத்திறனாளிகள் தெரியவில்லையோ?? அதுபோல் பெற்ற குழந்தையை யாசிக்க வைத்து வேடிக்கை பார்த்த அந்தத் தாயின் செயலும் ஒப்பவில்லை. தான் யாசித்துக் கூட பெற்ற பிள்ளையைக் காப்பற்றலாம் என்று ஏனோ அந்தத் தாய்க்குத் தோன்றவில்லை.  "இயலாதவரால் இயலும்போது, இயன்றோர் இயலாதவரானார்".


இவர்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது கடவுள் நமக்கு எவ்வளவோ மேலான வாழ்வை வழங்கியிருக்கிறார் அல்லவா??


Friday 2 June 2017

குளிர்பானத்தில் எய்ட்ஸ் இரத்தம்...



பெண்களிடம் ஒரு விசயத்தைச் சொன்னால் போதும் அது ஒரு நொடியில் ஊரெல்லாம் பரவிவிடும் என்று நம்மூர் பக்கம் கேலியாகச் சொல்வதுண்டு ஊரில் கிழக்குத் தெருவில் நடந்து போகும்போது வீட்டுத் திண்ணைகளில் உட்கார்ந்து வெற்றிலை இடித்து மென்றுகொண்டு இருக்கும் பாட்டிகள் நம்மைப் பார்த்து “ என்னடா, பாலன் மகனே எங்கயோ பட்டணத்துல படிக்கப் போயிருக்கனு சொன்னாக, நீ  ஊருக்குள்ள சுத்திக்கிருக்க…” என்று கேட்க, “பத்து நாள் லீவு விட்ருக்காங்க பாட்டி” என்று பதில் சொல்லிவிட்டு மேலத்தெரு தான் போய் இருப்போம், அங்க இரண்டு பாட்டிகள் இவ்வாறு பேசிக்கொண்டிருப்பது நம் காதில் விழும், “அடியே, தெரியுமா சேதி ? பட்டணத்துக்குப் படிக்கப் போன நம்ம பாலன் மகனுக்கு படிப்பு வரலனு வீட்டுக்குப் பத்திவிட்டாகளாம்டீ”. அம்புட்டு ஸ்பீடு.. (மகளிர் மண்ணிக்க..).   அந்த வேகத்தை எல்லாம் மிஞ்சுவதற்குத் தான் வாட்ஸப்பும், ஃபேஸ்புக்கும் வந்துள்ளது. ஒளியின் வேகத்தையும் மிஞ்சி உலக எல்லைகளுக்குத் தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றன, இவை இரண்டும். அதில் வரும் தகவல்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டம் சமீபத்திய உதாரணம். ஆனால் அதில் வரும் தகவல்கள் நூறு சதவிதம் உண்மை தானா என்றால்  இல்லை. அப்படித்தான் கீழ்வருவது போல் ஒரு தகவல் ரொம்ப நாட்களாக உலாவிக்கொண்டு இருக்கிறது. அதாவது,

      “ஒரு பன்னாட்டுக் குளிர்பான நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது. அவர் தன் இரத்தத்தை அந்நிறுவனத்தின் குளிர்பானத்தைத் தயாரிக்கும்போது அதில் கலந்து விட்டார். அந்த குளிர்பானத்தைக் குடிப்பவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவி விடும், அதனால் யாரும் அந்தக் குறிப்பிட்ட குளிர்பானத்தைப் பருக வேண்டாம்.” 

இவ்வாறு அந்தச் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் ஆகியவையே மனிதனுக்குப் பெரும்பான்மையான நோய்களைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் ஆகும். இதில் பூஞ்சையும் பாக்டீரியாவும்  தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும். ஆம், டெட்டால் மற்றும் சோப்பு விளம்பரங்களில் வருவது போல் நிலம், நீர், காற்று, நாம் சாப்பிடும் தட்டு, மனித உடல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்... ஆனால் இந்த வைரஸ் இருக்கு பாருங்கள் அது செயல்பட ஒரு உயிருள்ள மீடியம் தேவை. அதாவது மனிதன் உயிர் வாழக் காற்று எவ்வளவு முக்கியமோ அது போல.. உயிருள்ள உடலை விட்டு அது வெளியேறினால் அது செயலற்றுவிடும் (இறந்துவிடும் என்று வைத்துக் கொள்ளுங்கள்)..

எய்ட்ஸ் என்பது HIV (HUMAN IMMUNODEFICIENCY VIRUS) எனப்படும் வைரஸால் பரவக் கூடியது. ஆகவே அந்தச் செய்தியில் வருவது போல் அந்த ஊழியர் எய்ட்ஸ் இரத்தத்தைக் குளிர்பானத்தில் கலந்திருந்தால் அந்த இரத்தம் உடலை விட்டு வெளி வந்த சில நொடிகளிலேயே அதில் இருக்கும் வைரஸ் செயலற்று விடும். ஆகையால் அதைப் பருகும் எவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவ வாய்ப்பில்லை.. அப்படியே அந்தக் கிருமி உயிருடன் இருந்தாலும் (ஒரு பேச்சுக்கு), அதைப் பருகும் போது நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரில் உள்ள நொதிப்பான்கள் (enzymes) வைரஸை நொதித்து விடும். அதையும் மீறி வயிற்றுக்குள் சென்றால் அங்கே இருக்கவே இருக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம், அது அந்த வைரஸை ஒரு வழி பண்ணி விடும், கவலையை விடுங்கள். நீங்கள் பயப்பட வேண்டியதெல்லாம் அந்தக் குளிர்பானங்களில் கலந்திருக்கும் பெயர் தெரியாத இரசாயனங்களுக்கு மட்டுமே..


நினைவில் கொள்ளுங்கள் எய்ட்ஸ் பரவ வேண்டுமானால் எய்ட்ஸ் பாதித்த ஒருவரின் இரத்தம் மற்றவரின் இரத்த ஓட்டத்தில் நேரடியாகக் கலக்க வேண்டும் அவ்வளவே.. ஆகையால் இது போன்ற வதந்திகளைப் பரப்பி உங்கள் பொன்னான மொபைல் டேட்டாவை வீணடிக்காதீர்கள். 

Wednesday 24 May 2017

குண்டோதரனுக்கு தாகமெடுத்தால்……


சித்திரைத் திருவிழாவின் மற்றொரு முக்கியமான நிகழ்வு...

மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணம் மதுரையில் வெகு விமரிசையாக நடந்து விருந்து தடபுடலாக நடக்கிறது. விண்ணிலிருந்து வந்த தேவர்கள் உட்பட விருந்தினர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்படுகிறது. விருந்தினர்கள் அனைவரும் உண்ட பின்பும் சமைத்த உணவு தீரவே இல்லை. மீனாட்சிக்கு பெருமை தாங்கவில்லை. தன் கணவரிடம் “உங்கள் சொந்தத்தில் யாரேனும் விருந்துண்ணாமல் இருக்கிறார்களா?” என்று கேட்டு கர்வம் கொள்கிறாள்.

குண்டோதரன் என்ற பூதம் மட்டும் விருந்துண்ணாமல் உள்ளதை அறிந்து ஈசன் குண்டோதரனை விருந்துண்ணப் பணிக்கிறார். ஈசன் அருளால் அடங்காப் பசி எடுத்த குண்டோதரன் உணவு அனைத்தையும் உண்டு முடிக்கிறார். மீண்டும் மீண்டும் சமைத்துப் பரிமாறியும் குண்டோதரன் பசி அடங்கவில்லை. இது ஈசனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த மீனாட்சி தன் தவறை உணரவும் ஈசன் குண்டோதரனின் பசியை அடக்குகிறார்.

பசியடங்கிய குண்டோதரனுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் மட்டும் தீரவே இல்லை. கடைசியில் குண்டோதரன் தாகத்தைத் தீர்க்க ஈசன் தன் ஜடாமுடியில் இருக்கும் கங்கையைப் பொங்கியெழச் செய்கிறார். பொங்கிய வேகத்தில் அது வருசநாட்டு மலைத் தொடரில் போய்ப் பாய்கிறது. அங்கிருந்து வழிந்து தேனி, ஆண்டிபட்டி, அணைப்பட்டி, குருவித்துறை, சோழவந்தான் வழியாக வைகை ஆறாகப் பாய்ந்து மதுரையை அடைந்து குண்டோதரனின் தாகம் தீர்க்கிறது. தாகம் தீர்த்து எஞ்சிய தண்ணீர் இறுதியில் இராமநாதபுரம் பெரிய கண்மாயில் போய்க் கலக்கிறது. அன்று குண்டோதரனுக்காக உருவான வைகை பிறகு மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் தாகத்தைத் தீர்த்தது.
வைகை அணை 

மற்றொரு முறை வைகையில் பெருவெள்ளம் வர, கரையடக்க வீட்டிற்கு ஒரு ஆள் வருமாறு பாண்டிய மன்னன் மக்களைப் பணித்து அதன் விளைவாக ‘பிட்டுக்கு மண் சுமக்க இறைவனே’ வந்த திருவிளையாடலும் நாம் அறிந்ததே. இதன் மூலம் அன்று கரை கடந்து வைகையில் தண்ணீர் ஓடியதை அறிகிறோம். ஆனால் இன்றைய நிலைமை என்ன?

சமீபத்தில் முடிந்த சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கக்கூடத் தண்ணீர் இல்லை. செயற்கையாய் அமைக்கப்பட்ட தண்ணீர்த் தொட்டியில் இறங்கிச் சென்றிருக்கிறார். ஒருமுறை மூலவைகையில் வெள்ளம் வந்து தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள ‘இராமச்சந்திராபுரம்’ என்ற ஊரே அழிந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்கள், அவ்வூர் மக்களுக்கு ஒரே நாளில் வேறொரு இடம் ஒதுக்கி ‘புதுராமச்சந்திராபுரம்’ என்ற ஊர் உருவாகியது வரலாறு.


முல்லை பெரியாறு அணை

வருசநாட்டில் உருவாகும் மூலவைகையில் இன்று தண்ணீர் வரத்து இல்லை. இன்று வைகையாற்றில் பாய்வதெல்லாம் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் கட்டிய பெரியாறு அணையில் இருந்து தமிழகம் நோக்கித் திருப்பிவிடப்படும் முல்லைப்பெரியாறே!! அதுவும் அபரிமிதமாக மழை பொழிந்து பெரியாறு அணை நீரம்பி வழிந்தால் மட்டுமே வைகையில் தண்ணீர் கரைகடந்து ஓட வாய்ப்புள்ளது. ஒருவேளை கேரளா நமக்குத் தண்ணீர் தர மறுத்தாலோ அல்லது முல்லைப் பெரியாறு அணை இல்லாமல் போனாலோ வைகை என்ற நதியே இங்கு இருக்க வாய்ப்பு இல்லை, பிறகு வைகை அணைக்கும் வேலை இல்லை.



மூலவைகை காக்கப்பட வேண்டுமானால் வருசநாட்டு மலைத் தொடரின் பசுமை காத்து பேணப்பட வேண்டும். அதுவரை குண்டோதரனின் தாகத்தைத் தீர்க்க வைகையில் தண்ணீர் இல்லை.

Monday 22 May 2017

அழகரின் திருவிளையாடல்

image source: alagarkovil.org
சித்திரைத் திருவிழா!!! மதுரை மக்கள் கொண்டாடும் விழாக்களிலேயே மிகக் கோலாகலமானது. வெளிநாட்டினரும் வந்து கண்டுகளிக்கும் அவ்விழாவில் மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் திருமணத்தை சிறப்பாக நடத்துவார்கள். மிகப் பிரம்மாண்டமாக அவ்விழாவை முடித்துவிட்டு இளைப்பாறிக் கொண்டிருக்கிறது மதுரை மாநகரம்.. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நடக்கும் இந்த விழா மூலம் அழகர் நமக்கு இரு விஷயங்களைப் புலப்படுத்துகிறார்.

மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் நடக்கும் இந்தத் திருமணம் ஒரு கலப்புத் திருமணம் தெரியுமா? ஆம், சைவ மதத்தைச் சேர்ந்த சுந்தரேசுவரருக்கும் (ஈஸ்வரன்) வைணவ மதத்தைச் சேர்ந்த அழகரின் (பெருமாள்) தங்கை மீனாட்சிக்கும் நடக்கும் காதல் திருமணம் இது. ஒரு சின்ன ஃபிளாஸ்பேக்…..

மதுரையை  அரசாண்ட அரசி மீனாட்சி திக்விஜயம் செய்து உலகை வெல்கிறாள். மண்ணுலகம் வென்றும் திருப்தி அடையாத மீனாட்சி விண்ணுலகையும் வெல்ல எண்ணி கைலாயத்திற்குப் படையெடுக்கிறாள். போரில் ஈசனின் தீரம் கண்டு, வந்த வேலையை மறந்து அவன் மீது காதல் கொள்கிறாள். கணை தொடுத்து எதிரிகளை மண்ணில் வீழ்த்தியவள், ஈசன் தொடுத்த மலர்கணையில் வீழ்கிறாள். ஈசனுக்கும் மீனாட்சியைப் பிடித்துவிட வாக்குக் கொடுத்ததுபோல் மதுரை வந்து மீனாட்சியை மணமுடிக்கிறார்.

விஷயம் என்னவென்றால், ஈசன் வேற்று மதத்தவன் என்று தெரிந்தும் அழகர் தன் தங்கையின் காதலுக்குக் குறுக்கே நிற்கவில்லை. தன் தங்கையின் விருப்பத்திற்காக அவனைத் தன் தங்கைக்கு மணமுடித்து வைக்க சம்மதிக்கிறார். இதிலிருந்து கடவுளற்குள்ளே சாதி மத வேறுபாடு இல்லை என்பது தெளிவகிறது.

மற்றொன்று, மதுரையை ஆண்டது மீனாட்சி என்பதை அறிவோம். மீனாட்சியின் சகோதரர் எனும்போது மதுரையில் சரிபாதி உரிமை அழகருக்கு உள்ளது. ஆண் வாரிசு என்ற முன்னுரிமையில் அவர் மதுரையை ஆள விரும்பவில்லை. மாறாகத் தன் தங்கைக்கு சொத்தை விட்டுக்கொடுத்துவிட்டு அழகர்மலை காட்டிற்குள் போய் எளிமையாக வாழ்கிறார். பணத்தைவிடப்  பாசமே பெரிது என்றும் பெண்குழந்தைக்கும் சொத்தில் சமவுரிமை உண்டு என்பதையும் உணர்த்துகிறார்.

என்னைப் பொறுத்தவரை இவையிரண்டும் அழகரின் திருவிளையாடல்களே…

ஆனாலும் மீனாட்சி, இவ்வளவு அன்பான அண்ணன் வரும்வரை காத்திருக்காமல் நீபாட்டுக்கு கல்யாணத்தை முடிச்சுக்கிட்டியே??? அழகர் எவ்ளோ ஃபீல் பண்ணியிருப்பார்.. இது ரொம்ப தப்புமா…..

(சித்திரைத் திருவிழா கூறும் மற்றொரு விஷயம் அடுத்த பதிவில்...)