Showing posts with label மேகமலை. Show all posts
Showing posts with label மேகமலை. Show all posts

Saturday 22 April 2017

மேகமலைப் பயணம் - நிறைவு

                    
              மேகமலைப் பயணம் - பாகம் 1
              மேகமலைப் பயணம் - பாகம் 2
              மேகமலைப் பயணம் - பாகம் 3
                                                
உதவியாளர் கண்ணன் சொன்ன அடையாளங்களை வைத்து நாங்கள் முன்னேறினோம். ஏரியை ஒட்டி செல்லும் சாலை, ஓரிடத்தில் பேருந்து நிறுத்தம், அதை ஒட்டி வலதுபுறம் ஏரிக்குள் இறங்கும் பாதை, ஏரிக்குள் பயணம், ஓரிடத்தில் உடைந்த சின்னப் பாலம், இவற்றைத் தாண்டினால் மறுகரையில் வெளியேறி மீண்டும் தேயிலை எஸ்டேட்டுக்குள் பயணம். ஏரிக்குள் பைக்கை ஓட்டிச் சென்றது புது அனுபவமாக இருந்தது.

ஏரிக்குள் செல்லும் பாதை

அணை கட்டியபோது வெட்டப்பட்ட பலநூறு மரங்களின் தண்டுப்பகுதி தண்ணீருக்கு வெளியே தெரிகின்றது. அதில் ஒரு சில மரங்கள் ஒரு டபுள் பெட் அளவுக்கு அகளமாக இருந்தது ஆச்சரியம்.


தண்ணீரின் விளிம்பு வரை புற்கள் முளைத்து பச்சைப் பசேல் என்று பார்க்க ரம்மியமாக இருந்தது. வற்றியிருந்த தண்ணீர் ஆங்காங்கே சிறு தீவுகளை உருவாக்கியிருந்தது. அங்கேயே ஒரு குடில் அமைத்துக் தங்கிவிடத் தோன்றியது.





தண்ணீருக்கு அருகில் பைக்கைக் கொண்டு சென்று நிறுத்தினோம். புல்தரை தண்ணீர் ஊரிப்போய் பொதுபொதுவென்று இருந்ததால் பைக்கின் சைடு ஸ்டாண்டு பூமிக்குள் இறங்கியது.




அணைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது. தூய்மையான அந்தத் தண்ணீரை ஆசை தீர அள்ளிப் பருகினோம். தண்ணீரின் உண்மையான சுவையை உணர முடிந்தது. முகம் கழுவிப் புத்துணர்ச்சி அடைந்தோம். பயணத்தைத் தொடர்ந்தோம். உடைந்த பாலத்தைக் கடக்கும்போது கொஞ்சம் பயம் தொற்றிக்கொள்கிறது.  வழியில் வெண்ணியாறு எஸ்டேட் வருகிறது. அங்குதான் sandriver cottage உள்ளது. எஸ்டேட் விடுதியில் தங்கினால் நாம் அவர்களின் எஸ்டேட்டுக்குள் செல்லவோ சுற்றிப் பார்க்கவோ தடை இல்லை. அவர்களின் டீ பேக்டரியையும் இலவசமாகச் சுற்றிப் பார்த்து டீ தயாரிக்கும் முறையைத் தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் தலைக்கு ரூ.100 கொடுத்துப் பார்க்கலாம்.



தொடர்ந்து பயணித்தோம். இதுவரை வெட்டவெளியில் சென்ற சாலை மெல்ல மெல்லக் காட்டிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அடர்ந்த காடு பகலிலும் இருளைக் கொடுக்கிறது. சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த மரங்கள் அந்த இருளில் திகிலை ஏற்படுத்துகிறது. ஒரு வித நடுக்கத்துடனே பைக்கைச் செலுத்தினோம். காட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் நிம்மதி பிறந்தது. ஒரு வழியாக 1 மணி நேரம் கழித்து மஹாராஜாமெட்டை அடைந்தோம். மஹாராஜாமெட்டு என்பது ஒரு கிராமம். அங்கேதான் நாம் பார்க்க வேண்டிய வியூ பாயிண்ட் இருக்கிறது. வியூ பாயிண்ட் செல்லும் பாதை தெரியாமல் சாலை முடியும் வரை சென்றபோது நாங்கள் இரவங்களாறு அணையை அடைந்தோம். அணை உள்ளே செல்ல அனுமதி கிடைக்கிறது. நேரமின்மையால் நாங்கள் உள்ளே செல்லவில்லை.

இரவங்கலாறு அணை



மஹாராஜாமெட்டு வியூ பாயிண்ட் செல்ல நாம் வந்த பாதையிலேயே திரும்பி வந்து, அந்தச் சாலையின் ஒரு வளைவை ஒட்டி செல்லும் ஒரு சின்னக் கல்பாதையில் செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு அகலம் இல்லை. நட்டுக்குத்தலான பாதை. திரில்லுக்காக நாங்கள் அதில் எங்கள் பைக்கை ஏற்றிச் சென்றோம். ஆனால் நடந்து செல்வதே பாதுகாப்பு. ஒற்றையடிப் பாதை நம்மை ஒரு மலைக் குன்றின் மேல் கொண்டு செல்கிறது. மரங்களற்ற புற்கள் மேவிய ஒரு மொட்டைக்குன்று. சுற்றிலும் மூன்று புறமும் பள்ளத்தாக்கு. மூன்றுபுறமும் வெவ்வேறு காட்சிகள். இடதுபுறம் தேயிலைத் தோட்டங்கள், வலது புறம் சென்றால் தமிழகத்தின் சமவெளிப் பகுதி, நேராகப் பார்த்தால் கேரளாவின் தேக்கடி மலைப் பகுதி. நாம் சென்றபோது யாருமே இல்லை. சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தோம். முதலில் வலதுபுறம் சென்று மலைமுகட்டில் சிறிது நேரம் அமர்ந்தோம். சின்னமனூர், கம்பம் போன்ற தமிழகப் பகுதிகள் தெரிகிறது. நல்ல காற்று வெயிலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. சொர்க்கதில் இருந்து பூமியைப் பார்த்தது போல் ஒரு தோற்றம். சற்றுத் தடுக்கினால் நிஜமாகவே சொர்க்கத்துக்குச் செல்லலாம் என்பது வேறு விசயம்.


பாதுகாப்பு வேலி எதுவும் இல்லை. ஆகையால் நமது மனதுக்கும் வேலி இட முடியவில்லை. இது போன்ற சூழல் மனச்சோர்வை நீக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்க வல்லது. சிறிது நேரம் இருந்துவிட்டு மலைமுகட்டின் மேற்குப் பக்கம் சென்றோம். ஒரு போலீஸ்காரர் எங்களை அங்கே செல்ல அனுமதிக்கவில்லை. நாங்கள் பத்து நிமிடத்தில் திரும்பிவிடுவதாகச் சொல்லி அனுமதி வாங்கிச் சென்றோம். அது மலைமுகட்டின் உயரமான இடம். கேரளாவை நோக்கி உள்ள பகுதி. போகும் வழியில் ஒரு சிலுவை நிருவப்பட்டிருந்தது, பொங்கல் வைத்த தடங்களும் இருந்தன. நம்மையும் அறியாமல் உடலில் சிலிர்ப்பைக் கொடுக்க சிறிது நேரம் பிரார்த்தனை செய்தோம்.




அதற்கு அடுத்து ஒரு சிரிய சோலை தென்பட்டது. அருகில் சென்றால் நடுவில் ஒரு சிறிய கோயில். அழகாக இருந்தது. கோவிலுக்கு செல்லும் பாதை முன்பு ஒரு இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. அருகே சென்று பார்த்தபோது தான் அது ஒரு சிறிய கேணி என்பது தெரிந்தது. இயற்கையான நீர் ஊற்றால் அமைந்திருந்தது. நல்ல ஆழமாகவே இருந்தது. இயற்கை நமக்கு வழங்கும் ஆச்சரியங்கள் இது தான். அவ்வளவு உயரத்தில் இப்படியான ஒரு நீரூற்றை நாம் எதிர்பார்க்க முடியுமா??!! வனத்துறை அனுமதி கிடைத்தால் கேம்ப் அமைத்துத் தங்க அருமையான இடம்.




 
நீரூற்றைக் கடந்து சென்றால் போலீஸ் கட்டிடம் ஒன்று இருந்தது.  அருகில் சிதிலமடைந்த மற்றொரு கோயில் கோபுரம் இன்றி இருந்தது. உள்ளே காளி போன்று ஒரு கடவுள் சிலை இருந்தது. வணங்கினோம். 

கோபுரமில்லாக் கோவில
சிதிலமடைந்த சிலைகள்
கோயில் பின்புறம் இருந்த நிழலில் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தோம். சிறிது ஓய்வுக்குப் பின் தேக்கடியை நோக்கிய மலை முகட்டிற்கு சென்றோம். முகட்டிலேயும் ஒரு சிரிய தின்னைக் கோயில் அழகாக இருந்தது.


இங்கிருந்து பார்த்தால் தேக்கடி அணையும், சபரிமலையும் தெரியும் என்றார்கள். அன்று தேக்கடி மலைப் பகுதி முழுதும் மேகமூட்டமாக இருந்ததால் எங்களால் பார்க்க இயலவில்லை. மலைமுகட்டில் நின்று ஊஊஊஊஊஊ…… என்று கத்தினோம். புகைப்படம் எடுத்தோம்.  பள்ளத்தாக்கைப் பார்த்தவுடன் பழனிக்கு பயம் வந்துவிட்டது. மிக எச்சரிக்கையாகவே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். நம்மையும் விளிம்புக்குச் செல்ல விடவில்லை. 


ஆங்காங்கே தும்பைச் செடிகள் முளைத்திருந்தன. பட்டாம்பூச்சிகள் தேன் உண்ணுமே சின்னச் சின்ன வெள்ளைப் பூக்களையுடைய அந்தச் செடி தான். எங்கள் ஊரில் கூடப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது. அதில் இருந்தப் பூக்களை எடுத்துத் தேனைச் சுவைத்து ஆனந்தப் பட்டோம். மலைக்குன்றின் பக்கவாட்டில் இருந்து கீழிறங்கிச் செல்லும் ஒரு பாதை கேரளச் செக்போஸ்ட் வரை செல்கிறது.. நேரமின்மையால் அங்கிருந்து திரும்ப மனமின்றித் திரும்பினோம். வரும்போது அந்தப் போலீஸ்காரருக்கு நன்றியைத் தெரிவித்தோம். அவரும் சந்தோஷமாக நமக்குக் கையசைத்து வழியனுப்பி வைத்தார்.
ஒரு மணிக்கு அறையை அடைந்தோம். இனி ஊருக்குக் கிளம்ப வேண்டும். கிளம்புவதற்கு மனது வரவில்லை. ஆனால் ஒவ்வொரு பயணமும் ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும். பேக் செய்து உதவியாளர் கண்ணனிடம் கூடிய சீக்கிரம் திரும்பி வருவோம் என்று கூறிவிட்டுக் கிளம்பினோம். மேகமலை நினைவுகளுடன் சீராக பைக்கைச் செலுத்தினோம். வழியில் இரண்டு இடங்களில் வெடி வைக்கப்பட்டப் பாறைகள் சாலையை அடைத்திருந்தது. சீர் செய்யப்படும்வரை உச்சி வெயிலில் காத்திருந்தோம்.
சீர் செய்யப்படும் சாலை
நமக்குப் பின்னால் எக்ஸ்.யூ.வி காரில் வந்த வடநாட்டு இளைஞர்களும் காத்திருந்தனர். மினி ஸ்கர்ட் அணிந்த இரண்டு பெண்களும் அதில் இருந்தனர். சாலை சீராகத் தாமதம் ஆனதால் அதில் ஒரு பெண் ஒரு பீர் பாட்டிலை எடுத்து ரோட்டோரம் அமர்ந்து குடிக்க ஆரம்பித்து விட்டார். அரை மணி நேரத்தில் சாலை சீரானதும் கிளம்பினோம். கீழே இறங்க இறங்க பசுமை குறைந்து வெயிலும் படிப்படியாக அதிகரித்தது. மண்ணாக இருந்த சலையில் பைக்கை சுதாரிப்புடன் செலுத்த வேண்டி இருந்தது. இருந்தும் ஓரு திருப்பத்தில் என் பைக்கின் டயர் வாரிவிட்டு பைக் கீழே விழுந்தது. பைக் சாயும்போதே நான் அதில் இருந்து தவ்வி தரையில் கையை ஊன்றி பேலன்ஸ் செய்து தப்பித்தேன். கையுறை அணிந்திருந்ததால் கையில் அடிபடவில்லை. பைக்கை நிமிர்த்தி சோதித்தேன். பம்பர் உடைந்திருந்தது. ஃபுட்ரெஸ்ட் தேய்ந்திருந்தது. பைக் பாடியில் சீராய்ப்பு எதும் இல்லாததால் நிம்மதி அடைந்தேன். காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பி ஒரு வழியாக அடிவாரத்தை அடைந்தோம். வெற்றிகரமாக ஒரு மலைப்பயணத்தை முடித்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்தோம். ஆனந்தக் கூச்சலிட்டோம். ஆம் எத்தனையோ முறை மூணாறு, கொடைக்கானல், சிறுமலைக்கு அசால்ட்டாக பைக்கில் சென்று வந்திருந்தாலும் மேகமலைப் பயணம் மட்டுமே சவால் நிறைந்ததாக இருந்தது. கிளம்புமுன் சற்று பயத்துடன் தான் கிளம்பினோம். ஆனால் அந்தக் கரடுமுரடான சாலை அளித்த சவாலைக் கடந்து வந்தது எங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்திருந்து. இமயமலை போன்ற பகுதிகளுக்கு சாகசப் பயணம் செல்ல விரும்புவோர் ஒரு முன்னோட்டமாக மேகமலை சென்று வரலாம் என்பது என் கருத்து. சின்னமனூரில் மதிய உணவை 4 மணிக்கு முடித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு விடை பெற்றோம். 6 மணிக்கு வீட்டை அடைந்தபோது அப்பாடா என்றிருந்தது.
வாட்ஸ்அப் குரூப்பின் பெயரை “ மேகமலை நினைவுகள் ‘’ என்று மாற்றினேன். ஆம் மேகமலையின் நினைவுகள் குறைந்தது ஒரு மாதத்திற்காவது என்னுள் மாறாது இருக்கும். அன்றாட அலுவல்களால் அலுத்துப்போன மனதிற்கும் உடலுக்கும் பயணம் எப்போதும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. அதனால் சொல்கிறேன், என்னைப் பொருத்தவரை பயணம் கூட  தியானம் போன்றதே…
நன்றி!!!

பயண அனுபவத்தில் இருந்து டிப்ஸ்:
Ø  மேகமலை செல்பவர்கள் முன்கூட்டியே அறை முன்பதிவு செய்துகொள்வது நல்லது. இல்லையென்றால் விடுமுறை நாட்ளில் அறைகள் கிடைப்பது கடினம்.
Ø  பட்ஜெட் அறைகள்: 1.inspection bangalow, உள்ளேயே TASMAC கடை உள்ளது. 2. பஞ்சாயத்து விடுதி. இரண்டுக்கும் முன்பதிவு செய்ய, திரு.முருகன் (ஹோட்டல்காரர்) CELL NO: 9442781748, பஞ்சாயத்து விடுதி உதவியாளர்கள் கண்ணன் 7598250335, முருகன் 9488227944. அறை வாடகை ரூ.850-/-. எக்ஸ்ரா பெட் ரூ.350-/-.
Ø  சொகுசு அறைகள் Sand river cottage, cloud mountain bangalow. இவர்களுக்கு தனி வலைதளம் உள்ளது.
Ø   உணவுக்கு முருகன் கடை. பஞ்சாயத்து விடுதி வளாகத்தில் உள்ளது. சுவை சாப்பிடும் அளவுக்கு இருக்கும்.
Ø  Route சென்னை, கோவை, பெங்களூரில் இருந்து வருவோருக்கு, திண்டுக்கல்>வத்தலக்குண்டு>பெரியகுளம்>தேனி>சின்னமனூர்>மேகமலை>ஹைவேவிஸ்
Ø  கேரளாவில் இருந்து குமுளி>கம்பம்>சின்னமனூர்>மேகமலை>ஹைவேவிஸ்
Ø  சின்னமனூரில் ஸ்னாக்ஸ், குடிநீர் வாங்கிக்கொள்ளலாம். பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்ளலாம்.
Ø  பைக்கில் வருவோர் இஞ்சின், டயர், பிரேக், கிளட்ச் கண்டிசன் செக் செய்து எடுத்து வருவது நல்லது. மலைச் சாலையில் பழுதோ, பஞ்சரோ ஏற்பட்டால் ரொம்ப கஷ்டம்.
Ø  காரில் வருபவர்கள் SUV, MPV வகை கார்களில் வருவது நல்லது.
Ø  இரவில் குளிர் அதிகமாக இருக்கும். ஸ்வெட்டர், கையுறை, VASELIN கொண்டு வருவது நல்லது.
Ø  மழைக்காலத்தில் அட்டைப் பூச்சிகள் தொல்லை இருக்கும்.
Ø  சரிவான பாதைகளில் நடக்க நல்ல கிரிப் உள்ள ஷூக்கள் தேவை.
Ø  பார்க்க வேண்டிய இடங்கள் ஹைவேவிஸ் டேம், மஹாராஜாமெட்டு, இரவங்களாறு டேம், தூவானம் டேம். வட்டப்பாறை.
Ø  ஹைவேவிஸ் டேம் வரும் வழியிலேயே உள்ளது.
Ø  மஹாராஜாமெட்டு, இரவங்களார் டேம் செல்ல முருகன் கடையில் ஜீப் ரூ.2500-/- வாடகைக்கு கிடைக்கும்.
Ø  தூவானம் டேம் நடந்து செல்லலாம். வாகனத்தில் செல்ல EB Dept அனுமதி வேண்டும்.
Ø  வட்டப்பாறை தனியார் எஸ்டேட் உள்ளே உள்ளது. விலங்குகள் வரும் இடம். எஸ்டேட் ரிசார்ட்டில் தங்கினால் பார்க்க அனுமதி கிடைக்கும்.
Ø  சீசன்: ஜூன் – நவம்பர், மழைக்காலம். டிசம்பர் – ஃபிப்ரவரி, கடும் குளிர். மார்ச் – மே, வெயில் காலம்.
Ø  செல்போன்- BSNL சிக்னல் மட்டுமே கிடைகிறது.
குறிப்பு: சின்னமனூரில் இருந்து மேகமலைக்குச் சாலை அமைக்கப்பட்டு விட்டால் மேகமலை வணிகமயமாவது உறுதி. பிறகு மனித நடமாட்டம் அதிகமாகி மற்ற மலைப்பிரதேசங்களைப் போல் தன் இயற்கையை இழந்து அனைத்தும் செயற்கையாகி விடும். ஆகவே, மேகமலையின் உண்மையான அழகை ரசிக்க வேண்டும் என்றால் சாலை அமைப்பதற்குள் சென்று வருவது நல்லது.


   அப்போ மேகமலை கிளம்புறீங்க தானே??!!

மேகமலைப் பயணம் - பாகம் 3

                                                 
      மேகமலைப் பயணம் - பாகம் 1                    
      மேகமலைப் பயணம் - பாகம் 2

நிழலும் குளிர்காற்றும் சேர்ந்து உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்த தூக்கத்திலிருந்து மெல்ல மீண்டோம். மேகமலையின் சிறப்பே அதுதான். வெயிலில் நிற்கும்போது வெப்பம் வியர்வையை வரவழைத்தாலும் அருகில் ஒரு நிழலில் ஒதுங்கிப் பாருங்கள் நிழலுடன் சேரும் காற்றால் நீங்கள் ஒரு ஸ்வெட்டரையும் ஒரு கப் தேனீரையும் தேடுவீர்கள். நாமும் தேனீரைத் தேடி முருகன் கடைக்குப் போனோம்.
முருகன் கடை முன்பு

மணி ஐந்தை நெருங்கியதால் நாளை  மஹாராஜாமெட்டு செல்லத் திட்டமிட்டு இப்போது தூவானம் டேம் வரைக் காலாற நடந்துவரத் திட்டமிட்டோம். பஞ்சாயத்து அலுவலக நுழைவாயிலை விட்டு வெளியே வந்தவுடன் இடதுபுறம் செல்லும் சாலை வழியாக ஒரு 2 கிமீ வரை நடந்து சென்றால் தூவானம் டேம் செல்லலாம். சாலையின் தொடக்கத்திலேயே மின்துறைச் செக்போஸ்ட் உள்ளது. வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதிக ஏற்றம் இல்லாத சாலை. நடக்க எளிதாகவே இருந்தது.
தூவானம் செல்லும்போது

உயரே சென்று சாலையின் ஒரு வளைவில் நின்று பார்த்தால் ஊர் மிக அழகாகத் தெரிகிறது. வியூ பாயிண்ட் போல் உள்ளது அந்த இடம்.

ஹைவேவிஸ் எழில் தோற்றம்
தொடர்ந்து போகும்போது தேயிலைத் தோட்டத்தை விடுத்துக் காட்டிற்குள் நடந்து செல்கிறோம். வழியெங்கும் யானையின் கழிவுகள் சாலையிலேயே கிடப்பது லேசாக பயத்தைத் தோற்றுவிக்கின்றது. யானை வந்தால் எப்படித் தப்பிப்பது என்று எங்களுக்குள் விவாதித்துக்கொண்டு முன்னேறினோம். அப்போது ஒரு செங்குத்தான பாறையில் யானையின் கழிவைக் கண்ட பழனி, யானை எப்படி அவ்வளவு உயரத்தில் ஏறிச் சாணமிட்டது என்ற ஒரு கடினமான கேள்வியைக் கேட்டார். யாருக்கும் பதில் தெரியவில்லை. அதற்குள் இருட்டத் தொடங்கியதால் டேம் செல்ல முடியாமல் பாதி வழியிலேயே திரும்பினோம்.
தூவானம் செல்லும் பாதை

விடுதியை அடைந்தபோது நன்றாக இருட்டியிருந்தது. இருட்டில் நான் முருகன் கடைக்கு முன் உள்ள ஒரு இரண்டாடி ஆழமுள்ள கழிவுநீர்க் கால்வாயில் காலை விட்டு தடுமாறி விழப்போனேன். நல்ல வேலையாக அது கழிவுநீர் இன்றிக் காய்ந்திருந்தது. அப்போது ஒருவர் என்னை விழாமல் தாங்கிப்பிடித்தார். அவருக்கு நன்றி தெரிவித்தேன். பிறகு வெளிச்சத்தில் அவரப் பார்த்தபோது எங்கோ பார்த்ததுபோல் இருந்தது. எனக்கு பிடிபடவில்லை. மனோ தான் அவர் சினிமா நடிகர் என்று கூறினார். கொம்பன் போன்ற படங்களில் பெரும்பாலும் போலீஸ் வேடங்களில் நடித்திருக்கிறார். மதுரைக்காரர். நிஜத்திலும் அவர் போலீஸ் SI ஆகப் பணியாற்றுவதாக அவர் உடன் வந்தவர்கள் கூறினார்கள். கண்ணனைத் தொடர்ந்து அனைவரும் அவருடன் கைகுலுக்க அவரும் உற்சாகமாகி நம்முடன் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். குளிர் அதிகமாக இருந்ததால் இரவு உணவு தயாராகும்வரை கேம்ப் ஃபயர் போட்டுக் குளிர் காய்ந்தோம்.
நடிகருடன்..

உற்சாகமாய் நம் பழனி..

சிறிது நேரத்தில் இரவு உணவாகச் சப்பாத்தியும் சிக்கன் கிரேவியும் அறைக்கு வந்தது. சிக்கன் அருமையாக இருந்தது. சப்பாத்தி தான் வறண்டும் ரப்பர் போலும் இருந்தது. கோதுமையில் அரிசி மாவைக் கலந்து சுட்டால் இப்படி இருக்கும் என்று கண்ணன் அதற்கான காரணத்தைக் கூறினார். அனைவரும் அவரவர் பணி, குடும்பச் சூழல் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். குழுவில் பழனி மட்டுமே பேச்சிலர். தனது திருமணத் திட்டம் பற்றி ரகசியமாக வைத்திருக்கிறார். கரகாட்டக்காரன் படத்தில் வரும் ‘ ஊருவிட்டு ஊருவந்து காதல் கீதல் பண்ணாதீங்க ‘, பாடலைப் போட்டு எல்லோரும் சேர்ந்து பாடி அவரைக் கலாய்த்தோம். நாளைக் காலை மஹாராஜாமெட்டு சென்றுவிட்டு மதியம் ஊர் திரும்புவதாகத் திட்டம். மனோ மட்டும் காலை பணிக்குச் செல்ல வேண்டிய காரணத்தால் காலையிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது. மனோவைத் தனியாக அனுப்ப யாருக்கும் மனசு இல்லை. கண்ணன் எப்படியாவது மனோவைத் தங்க வைத்துவிட முயற்சித்தார். ஆனால் மனோ தன்னுடைய நிலையை விளக்கியதும் மனமின்றித் தலையசைத்தார். அரட்டையை முடித்து அந்த நாளுக்கு விடைகொடுத்தோம்.
போர்த்தி இருந்த கம்பிளிக்குள் ஊடுருவிய குளிர் உடலையும் துளைத்துத் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டிருந்தது. அருகில் இருப்பதால் எத்தனையோ முறை கொடைக்கானல் சென்றுள்ளேன், ஆனால் இப்படி ஒரு குளிரை அனுபவித்தது இல்லை. என்னைப் பொருத்தவரைக் கொடைக்கானலை ஒப்பிடும்போது மேகமலையில் குளிர் அதிகமே. ஏரி அருகிலேயே இருப்பதால் கூட அவ்வாறு இருக்கலாம். அரைக்கண்ணில் விழித்துப் பார்த்தேன். ஒரு உருவம் அறையில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தது. மனோ தான் அது. எனக்கு முன்னரே விழித்திருந்தார். ஆறு மணியளவில் அவர் கிளம்பி ஆக வேண்டும். அப்போது தான் அவன் 9:30க்குள் கல்லூரியை அடைய முடியும். உடை மாற்றித் தயாராக இருந்தார். மொபைலில் மணியைப் பார்த்தேன், 5:30 ஆகி இருந்தது. குப்புறப்படுத்து முயற்சித்தும் தூக்கம் வராததால் வேறு வழியுன்றி நானும் எழுந்துவிட்டேன். எனது தூக்கத்தைக் கெடுத்த குளிரால் கண்ணன் மற்றும் பழனியை எதுவும் செய்ய முடியவில்லை. முரட்டுத் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தனர் இருவரும். வெளியே எட்டிப்பார்த்தேன். டியூப் லைட் வெளிச்சத்திலும் பனி அப்பட்டமாகத் தெரிந்தது.
அதிகாலைப் பனி
மணி 6 ஆகி இருந்தது. முருகன் கடை திறந்திருந்தால் டீக் குடிக்கலாம் என்று கீழே சென்றோம். அப்போது தான் கடையைத் திறந்துகொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் பழனியும் கண்ணனும் வந்துவிட்டனர். 


கண்முன்னே பசும்பால் கறந்து டீ போட்டுக் கொடுத்தார்கள். குளிருக்கு இதமாக இருந்தது. இருள் விலகி லேசாக வெளிச்சம் வந்திருந்தது ஆனால் பனி விலகவில்லை. நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் மனோ எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். மனமின்றி விடை கொடுத்தோம். 
விடைபெறும் மனோவுடன்

மனோவை அனுப்பிவிட்டு ஏரிக்கரைக்குச் சென்றோம். நேற்றுப் பகல் வெளிச்சத்தில் பளிச்சென்று இருந்த ஏரி இப்போது வேறுமாதிரியாக உருமாறி இருந்தது. கோனில் நிரப்பிய ஐஸ்கிரீம் போல் ஏரியில் இருக்கும் நீர் தெரியாத அளவுக்கு அதன்மேல் பனி சூழ்ந்திருந்தது. வெள்ளை உடை அணிந்த தேவதை வானிலிருந்து இறங்கி வந்து பூமியில் உலாவுவது போல் வெண்பனி அந்த ஏரி முழுவதும் தவழ்ந்து சென்றது வாழ்வில் பார்க்க வேண்டிய காட்சி. காதலர்கள் காதல் செய்ய ஏற்ற அருமையான சூழல்.
அதிகாலை ஏரிக்கரையில்...

குளிரைப் பொருட்படுத்தாமல் பனி விழகும்வரை அங்கேயே இருந்து அந்தக் காட்சியை ரசித்துக்கொண்டு இருந்தோம்.


வெயில் வருவதற்குள் பைக்கில் ஒரு ரவுண்டு போய் வரலாம் என்று கண்ணன் விருப்பப்பட்டதால் கிளம்பினோம். இப்போது விடுதி காம்பவுண்டை விட்டு நேராக வெளியே வந்து சின்னமனூர் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் செக்போஸ்ட் போடப்பட்ட ஒரு சாலை செல்கிறது. அந்தச் சாலையில் தொடர்ந்து சென்றோம். வழியில் எஸ்டேட் வேலையாட்கள் மலையில் இருந்து வழிந்து வரும் தூய நீரைப் பிடித்து களைக்கொல்லி மருந்தைக் கலக்கிக்கொண்டு இருந்தனர், தேயிலையின் ஊடே இருக்கும் களையை அழிக்க.  சரிவில் வழிந்தோடும் நீர் சமதளம் வரை சென்று புல்த்தரைக்குள் மறைகிறது. நாங்கள் தேயிலையின் ஊடே இறங்கி அருகில் சென்று பார்த்தபோது புற்களுக்குள் நீர் ஓடுவதைத் தெளிவாகக் காண முடிகிறது. அருமையான இடம். தேயிலைப் பள்ளத்தாக்கு என்று சொல்லலாம். புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
தேயிலைச் சரிவு

மீண்டும் பாதைக்கு வந்தோம். தேயிலைத் தோட்டத்தின் மேல் வரிசையாக இருந்த மரங்களின் ஊடே புகுந்து வெளியேறிய சூரியக்கதிர் விசிறியைப் போல் ஒரு தோற்றத்தைக் கொடுத்தது. புகைப்படம் எடுக்க அருமையான பேக்கிரவுண்ட். மொபைல் கேமராவில் எடுத்ததால் ஓரளவிற்கு மேல் அதன் அழகைப் பதிய முடியவில்லை.

சூரிய விசிறி

பழனியின் மிரட்டல் போஸ்.. ஹா..ஹா...
பைக்கை எடுத்து சிறிது தூரம் சென்றபோது வழியில் ஒருவர் நம்மை மறித்து எங்கே செல்கிறோம் என்று கேட்டார். சுற்றிப் பார்க்க வந்தோம் என்றோம். இது தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் என்றும் வெளியாட்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்றும் அதனால் தான் சாலையின் தொடக்கத்தில் செக்போஸ்ட் போட்டிருப்பதாகக் கூறினார். நாம் சுற்றிப் பார்க்க அனுமதி கேட்டோம். கிடைக்கவில்லை. இந்த இடத்தைப்போல் ஒரு அழகான இடத்தைக் கண்டதில்லை என்று கூறினோம். அவர் ஒன்றும் சொல்லவில்லை. இவ்வளவு அழகான இடத்தில் வாழ்கிறீர்கள் என்று பழனி கூறியதற்குமலங்காட்டில் என்னங்க சந்தோசம்?” என்று அவர் கூறியது எங்களை யோசிக்க வைத்தது. ஆம் உல்லாசப் பயணம் சென்ற நமக்கு அதன் அழகு மட்டுமே தெரிகிறது. ஆனால் அந்த மலங்காட்டை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு மட்டுமே அவர்கள் வாழ்வின் வலி தெரியும். ஆம், அடிப்பாடை வசதிகள் ஏதும் இல்லாத அங்கு மழை, குளிர், அட்டைக் கடியைப் பொருட்படுத்தாமல் சொற்ப வருமானத்திற்காக அந்தத் தேயிலைக் காடுகளை நம்பி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் அந்த மக்கள். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் சின்னமனூர் சென்றுப் பரீட்சை முடியும்வரை அங்கேயே அரசு விடுதியில் தங்கி இருந்து பரீட்சைகளை முடித்துவிட்டு ஊர் திரும்புகிறார்கள். சுற்றிப் பார்க்க மட்டுமே சென்ற நமக்கு அவர்களின் வாழ்வின் இன்னல்கள் விளங்க வாய்ப்பில்லை. எங்கிருந்து வருகிறீர்கள் என்றார். மதுரை என்றோம். எஸ்டேட் மேலாளர் வந்தால் பிரச்சனை ஆகிவிடும் கிளம்புங்கள் என்றார்


அவர்களையும் குறை சொல்ல முடியாது. இது போன்ற இயற்கையான இடங்களைச் சுற்றிப் பார்க்க வருகிறவர்கள் அந்த இடங்களைத் தாங்கள் ரசிப்பதுபோல் மற்றவர்களும் ரசிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். மாறாக அந்த இடங்களில் தங்களின் எச்சங்களை விட்டு வருகின்றனர். ஆம், ஆங்காங்கே சில பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், மது பாட்டில்கள் ஆகியவற்றைக் காண முடிகிறது. மேகமலை வருபவர்கள் இதே அழகைத் தங்கள் வாழ்நாள் முழுதும் அனுபவிக்க வேண்டும் என்றால் சூழல் பொறுப்புடன் நடந்துகொள்வது நல்லது. விடைபெற்றுத் திரும்பினோம்.

மஹாராஜாமெட்டு
அறைக்குச் சென்று கிளம்பித் தயார் ஆனோம். நேராக மஹாராஜாமெட்டு

 சென்றுவிட்டு வந்து அறையைக் காலி செய்து மதியம் ஊருக்குக் கிளம்ப வேண்டும். பொதுவாக மதியம் 12 மணிக்கு அறையைக் காலி செய்ய  வேண்டும். அன்று அறைகள் எதும் முன்பதிவு செய்யப்படாததால் உதவியாளர் கண்ணன் எங்களை மெதுவாகக் காலி செய்ய அனுமதித்தார். முருகன் கடையில் காலை உணவாகத் தோசை கொடுத்தார்கள். சாப்பிடுமளவுக்கு இருந்தது.  நேற்று அந்தக் கடையில் இருந்த ஒருவர் மஹாராஜாமெட்டுக்கு பைக்கில் செல்வது சிரமம் என்று சொல்லியிருந்தாலும் நாங்கள் துணிந்து பைக்கில் செல்ல முடிவு செய்தோம். உதவியாளர் கண்ணன் மஹாராஜாமெட்டு செல்ல அணைக்குள் செல்லும் ஒரு குறுக்குப்பாதையைக் கூறினார். விடுதியை விட்டு வெளியே வந்து வலதுபுறம் திரும்பும் சாலையில் மஹாராஜாமெட்டு செல்லலாம்.. ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து துருத்திக்கொண்டும் தண்ணீர் தேங்கியும் உள்ள கரடுமுரடான குறுகிய சாலை.
மஹாராஜாமெட்டு செல்லும் சாலை

செல்லும் வழியெங்கும் ஏரி நம்மோடு பயணிக்கிறது. ஏரியின் மறுகரையில் அந்தச் சாலை செல்கிறது. வழியெங்கும் இயற்கையை ரசித்துக்கொண்டு பயணிக்கலாம். சாலை ஆங்காங்கே சில பிரிவுகளைக் கொண்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாததால் நாமே முடிவெடுத்து முன்னேற வேண்டும். 

பயணம் தொடரும்...   மேகலைப் பயணம் - நிறைவு இங்கே


மேகமலைப் பயணம் - பாகம் 1 (திட்டமிடல்)


மேகமலை!!! பெயருக்கேற்ப அது மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஒரு அழகிய மலைப் பிரதேசம்!! தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மேகமலை இறைவனின் படைப்புத் திறமைக்கு ஒரு சான்று. மலைகளின் ராணி என்று ஊட்டியையும் இளவரசி என்று கொடைக்கானலையும் சொல்பவர்கள் மேகமலையைப் பார்த்தால் தங்கள் கூற்றை மறுபரிசீலனை செய்ய நேரிடும். ஊட்டி, கொடைக்கானல் உடன் ஒப்பிடும் அளவுக்கு மேகமலையில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பது என் செவிகளில் விழுகிறது. அதற்கு என்னுடைய பதில் ‘ஒன்றுமே இல்லை’ என்பது தான். ஆம், ஊட்டி, கொடைக்கானல் போல் பூங்காவோ, படகு சவாரியோ, கடைத் தெருக்களோ எதுவும் மேகமலையில் இல்லை. அதுதான் மேகமலை. மேகமலையில் இருப்பதெல்லாம் இயற்கை… இயற்கை… இயற்கை… அமைதியான ஏரி, அடுக்கடுக்கானப் பசுந்தேயிலைத் தோட்டங்கள், அதற்கு வேலி போல் அமைந்த நீண்ட மரங்களை உடைய காடுகள், முடிவில் பசுமையான பள்ளத்தாக்குகள் இது தான் மேகமலையின் அடையாளம் உலகத்து அழகை தன்னகத்தே கொண்டுள்ள மேகமலை ஒரு கடவுளின் தேசம்!!!! 


மதுரை மண்ணில் பிறந்து, கடந்த மூன்று வருடங்களாகத் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பணி புரிந்தாலும் சமீபத்தில் தான் மேகமலை பற்றி அறிந்தேன். முதலில் மேகமலை பற்றிய அறிமுகம் எனக்கு திகிலாகவே இருந்தது. “அங்க ஒன்னுமே இல்ல… வெறும் காடு…. மோசமான ரோடு…. ரோடே இல்ல…. ஒரு நாள் கூட தங்க முடியாது… வனவிலங்குகள் தொந்தரவு…” இப்படிப் பல விமர்சனங்கள். அனால் நான் எதிர்பார்ப்பது அந்தத் திரில் தானே. மேகமலையைப் பார்த்துவிட வேண்டும் என்று எனக்குள் சபதமே செய்து விட்டேன். வலைதளத்தில் மேகமலை பற்றிய பகிர்வுகள் என் ஆவலை மேலும் அதிகரித்தன. ஒற்றைக்கால் கொக்காக மேகமலை செல்லச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு மூணாறு, சிறுமலை, கொடைக்கானல், இடுக்கி, ராமக்கல்மேடு, வால்பாறை என்று பயணங்கள் சென்று வந்த போதிலும் மேகமலைப் பயணம் மட்டும் எனக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. இத்தனைக்கும் நான் பணிபுரியும் இடத்தில் இருந்து மேகமலை வெறும் 60 கிமீ தான். கனவுகளில் மட்டும் மேகமலை வந்து சென்றது.
ஆனால் என் காத்திருப்பு வீணாகவில்லை. தேவதானப்பட்டியைச் சேர்ந்த என் நண்பர் கண்ணன் அவர்கள் சுகர் மருந்துகள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் ரீஜனல் மேனேஜராகப் பணிபுரிபவர். பணி நிமித்தமாகத் தமிழகம் முழுதும் பயணம் செய்பவர். திருமணமான முதல் நாளே இயற்கையை நோக்கியத் தன் பயணங்களுக்குத் தன் மனைவியிடம் வாழ்நாள் ஒப்புதல் பெற்றவர். வருமுன் காப்பது என்பது இதுதானோ???!!!
கண்ணன்
கண்ணன் அவர்களுடனான ஒரு யதார்த்தமான சந்திப்பில் பயணத்திற்கான விதை விழுந்தது. ஒரு இயற்கைப் பயணம் செல்லவேண்டும் என்ற தன் ஆவலைக் கூறி அதற்காகத் திட்டமிடக் கேட்டுக் கொண்டார். அடுத்த பயணத்திற்கு அழைப்பதாகக் கண்ணனிடம் தெரிவித்துவிட்டு விடைபெற்றபோதும் எங்கே செல்வது, எப்போது செல்வது என்ற உறுதி இல்லாமலேயே இருந்தேன். ஒரிரு தினங்களுக்குப் பின் கண்ணன் விதைத்த விதை என் மனதில் துளிர்க்க ஆரம்பித்தது. இம்முறை மேகமலை செல்லும் ஆசையை நிறைவேற்ற விரும்பினேன். கண்ணனுக்கு ஏற்கனவே மேகமலையின் மறுபுறம் உள்ள வெள்ளிமலைக்குக் காட்டுப்பயணம் செய்த அனுபவம் இருந்ததால் தன் சம்மதத்தை உடனே தெரிவித்தார். 

அடுத்து யார் யாரை இந்தப் பயணத்திற்கு அழைக்கலாம் என்று எண்ணியபோது என் மனதிற்குத் தோன்றியவர்கள் பழனியப்பன், மனோபாலா ஆகிய என் நண்பர்கள்.பெரியகுளத்தைச் சேர்ந்த பழனியப்பன் அவர்கள் தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டிங் பிரிவில் தமிழகம் முழுதும் சென்று பணிபுரிபவர். நான் செல்லும் பயணப் புகைப்படங்களை ஃபேஸ்புக் மூலம் அறிந்துகொண்டு அடுத்த பயணத்திற்கு அழைக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டிருந்தார். அவரிடம் திட்டத்தைப் பற்றிச் சொன்னவுடனே குதூகலம் ஆகிவிட்டார்.
பழனி
அடுத்து என் நண்பர் மனோபாலா. என் ஊர் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். சிறு வயது முதல் என்னுடன் எப்போதும் இருப்பவர். என் அனைத்து சுக துக்கங்களிலும் இவரின் பங்கு உண்டு. தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவர். பயணம் என்றால் போதும் தலை போகிற வேலையாக இருந்தாலும் உதறித் தள்ளிவிட்டு இவர் கண்டிப்பாக ஆஜர் ஆகிவிடுவார்.

மனோ
ஆக, நாங்கள் நால்வர் சேர்ந்து இந்தப் பயணத்தை மேற்கொள்வது என்று முடிவு செய்தோம். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் அல்ல. இந்த மேகமலைப் பயணத்திற்க்காக என் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. மேகமலை செல்கிறோம் என்று முடிவானவுடனே நான் செய்த முதல் காரியம் பயணத் திட்டமிட வாட்ஸ்அப்பில் ‘மேகமலைக் கனவுகள்’ என்று ஒரு குழு தொடங்கி இவர்கள் மூவரையும் அதில் இணைத்தது தான். அது எங்கள் திட்டதிற்கு பெரிதும் உதவியதோடு ஒருவருக்கொருவர் அறிமுகமாக நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதனால் பயண நாளன்று எல்லோரும் இயல்பாகப் பழக முடிந்தது. குரூப் தொடங்கிய அன்று முதல் மேகமலைக் கனவுகளில் திழைத்தேன்.
முதலாவதாக எவ்வாறு பயணம் செய்வது என்று விவாதித்தோம். பயணம் என்றாலே எனக்குப் பிடித்தது பைக்கில் செல்வது தான். சிறுமலை, மூணாறு, கொடைக்கானலுக்கு ஏற்கனவே பைக்கில் சென்ற அனுபவம் இருந்ததால் மேகமலைக்கும் பைக்கில் செல்வது என்று முடிவு செய்தோம். தடுப்புச்சுவர்களற்ற மேகமலையின் மோசமான சாலை மனதில் சிறு பயத்தை ஏற்படுத்தினாலும் அந்தத் திரில்லுக்காகவே பைக்கைத் தேர்ந்தெடுத்தோம். மேகமலை செல்லும் சாலையின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு அனைவரும் தனித் தனி பைக்கில் செல்வது என்று தீர்மானித்தோம்.
விடுமுறை எடுப்பதில் அனைவருக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் ஓர் இரவு மட்டும் தங்குவது என்று தீர்மானித்து ஒரு நல்ல நாளையும் குறித்தாகி விட்டது. அடுத்து தங்கும் அறை.
மேகமலையில் நான்கே நான்கு இடங்கள் மட்டுமே பயணியர் தங்க உள்ளது. 
1. ஹைவேவிஸ் அணைக்கரையில் உள்ள inspection bangalow.
2. ஹைவேவிஸ் ஏரிக்கரையில் அமைந்துள்ள panchayat guest house
3. Sand river cottage
4.cloud mountain bangalow     
முதல் இரண்டும் அரசுக்குச் சொந்தமானது. ஹைவேவிஸ் பேரூராட்சியிலேயே உள்ளது. வாடகையும் குறைவு. மற்ற இரண்டும் தனியார்த் தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமானது. சொகுசு பங்களாக்கள். அங்கே ஒரு நாள் தங்கச் சில பல ஆயிரங்களை நீங்கள் செலவு செய்ய நேரிடும். அதுமட்டுமல்லாது இந்த விடுதிகள் தனியார் தேயிலைத் தோட்டத்திற்குள் இருப்பதால் இவைகளை அடைய நீங்கள் ஹைவேவிஸ் தாண்டி மேலும் 10 கிமீக்களுக்கும் மேல் பயணிக்க வேண்டும்.        
நான் தங்கும் அறை முன்பதிவு செய்ய ஹைவேவிஸ் பாஞ்சாயத் அலுவலகம் அருகில் உணவகம் நடத்தி வரும் திரு.முருகன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் இன்னொரு முருகன் என்பவரின் செல் நம்பரைக் கொடுத்தார். அந்த முருகனைத் தொடர்புகொண்டு அறை முன்பதிவு செய்தேன். முன்பதிவு செய்ய நமது பெயர், முகவரி, தொடர்பு எண், எத்தனை அறைகள் அடங்கிய விவரங்களை SMS செய்தால் போதும். நேரில் சென்று வாடகையைச் செலுத்திக் கொள்ளலாம். முன்பதிவு செய்துவிட்டு மேகமலை செல்லும் நாளுக்காகக் காத்திருந்தோம்.
அந்த நாளும் வந்தது…

முதல் நாள் இரவு ஒவ்வொருவராகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வரவை உறுதி செய்தேன். கண்ணன் தயாராக இருந்தார். பெற்றோரைப் பார்க்கச் சென்றிருந்த மனோவின் மனைவி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று, அவரிடம் சொல்லாமல் ஊரிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். ஒரு வழியாக அவர் மனைவியிடம் விஷயத்தை எடுத்துக்கூறிச் சம்மதம் வங்கியாகிவிட்டது. காலையில் எழுந்தவுடன் தனக்குப் போன் செய்து எழுப்பிவிடும்படிக் கேட்டுக்கொண்டார் மனோ.  அடுத்து பழனி, பணி விஷயமாக சென்னை சென்றவர் அப்போதுதான் ஊருக்குத் திரும்புகிறார். அதிகாலை ஊரை அடைந்து விடுவதாகவும் குறித்த நேரத்தில் ஆஜராகி விடுவதாகவும் உறுதியளித்தார். எனக்கு சந்தேகமாகவே இருந்தது. ‘பயணக்களைப்பில் வந்து அப்படியே தூங்கிவிடுவாரோ?’ என்று. மறுநாள் காலை எட்டு மனிக்கு அனைவரும் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே சந்திப்பதாகத் திட்டம். பயணத்திற்குத் தேவையானவைகளை பேக் செய்துவிட்டு, முறையே அதிகாலை 5:20, 5:25, 5:30 மணிக்கென்று மூன்று அலாரங்களை வைத்துவிட்டு (என் மேல அவ்வளவு நம்பிக்கை) தூங்கச் சென்றேன்...

பயணம் தொடரும்......       மேகமலைப் பயணம் - பாகம் 2 இங்கே