Saturday 11 November 2017

நான் ஈ..

கோணாரே..!!கோணாரே..!!
கொம்புச் சத்தம் கேட்ட ஊராரே!! 

ஊராருடைய நெல்லே!!
நெல்லுக்கடியில் போகிற நீரே!! 

நீருக்கடியில் போகிற மீனே!! 
மீனைத் திண்ணும் கொக்கே!!

கொக்கு ஏறிய கட்டையே!!
கட்டை ஏறிய கரையானே!!

கரையானைப் பிடிக்கும் காடையே!!
காடையைப் பிடிக்கும் வேடனே!!

வேடனோட ராஜாவே!!
ராஜாவோட குதிரையே!!
என் பெயர் என்ன??
ஈஈஈஈஈஈஈஈ....

என்ன ஒன்றும் புரியவில்லையா? சரி விளக்கமாகச் சொல்கிறேன்.

என் அன்னையுடன் பிறந்த அக்கா வால்பாறையில் இருக்கிறார். சிறு வயதில் ஒவ்வொரு வருடமும் முழுப் பரீட்சை விடுமுறைக்கு நான் அங்கே சென்று ஒரு மாதம் தங்கியிருந்து வருவேன். என் பெரியன்னையின் அண்டை வீட்டுச் சிறுவர்கள் எனக்கு நல்ல தோழர்களாகினர். அவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடல் தான் மேலே உள்ளது. அது வெறும் பாடல் அல்ல. அதில் ஒரு கதை அடங்கியிருக்கிறது. தன் பெயர் மறந்த ஒரு ஈ, தன் பெயரைக் கண்டுபிடிக்கும் கதை. கதையைக் கேளுங்கள்.

ஒரு ஊரில் இருக்கும் ஒரு 'ஈ'க்கு தன் பெயர் மறந்துவிடுகிறது.  எவ்வளவு யோசித்தும் ஞாபகம் வரவில்லை. அப்போது அந்த வழியாக ஒரு கோணார் வருகிறார். சரி இவரிடம் கேட்போம் என்று "கோணாரே.. கோணாரே.., என் பெயர் எனக்கு மறந்துவிட்டது. உங்களுக்குத் தெரியுமா? என் பெயர் என்ன?" என்று கேட்கிறது. அதற்கு அந்தக் கோணார் "உன் பெயர் எனக்குத் தெரியாது. நீ போய்க் கொம்புச் சத்தம் கேட்ட ஊராரிடம்  கேள்", என்கிறார்.   

சரி என்று அந்த ஈ, ஊராரிடம் போய் "கொம்புச் சத்தம் கேட்ட ஊராரே.., என் பெயர் என்ன?" என்று கேட்கிறது. அதற்கு அந்த ஊராரும் "எனக்குத் தெரியாது. நீ போய் ஊராருடைய நெல்லிடம் போய்க் கேள்", என்கிறார்.   

அவர் சொன்னவாரே அந்த ஈ வயலில் இருக்கும் நெல்லிடம் போய் "ஊராருடைய நெல்லே.., என் பெயர் என்ன?" என்று கேட்க, அந்த நெல் "எனக்குத் தெரியாது. நீ நெல்லுக்கடியில் ஓடும் நீரிடம் போய்க் கேள்" என்கிறது. 

உடனே அந்த ஈ, நீரிடம் சென்று, "நெல்லுக்கடியில் ஓடும் நீரே.., என் பெயர் என்ன?" என்று கேட்க, அதற்கு அந்த நீர், "எனக்குத் தெரியாது. நீ நீருக்கடியில் ஓடும் மீனிடம் கேள்" என்கிறது. 

அந்த ஈயும், "நீருக்கடியில் ஓடும் மீனே.., என் பெயர் என்ன?" என்று கேட்க, அந்த மீனும் அதேபோல் "உன் பெயர் எனக்கு எப்படித் தெரியும். நீ மீனைத் திண்ணும் கொக்கிடம் போய்க் கேள்" என்று சொல்கிறது.

உங்களைக் போல் இப்போது ஈக்கும் பயங்கரக் கடுப்பாகிவிட்டது. சரி போய்த் தான் கேட்போம் என்று கொக்கிடம் போய், "மீனைத் திண்ணும் கொக்கே.., என் பெயர் என்ன?" என்று வினவ, அந்தக் கொக்கோ, கொக்கு ஏறிய கட்டையிடம்  போய்க் கேட்கச் சொல்கிறது. 

இதைக் கேட்ட ஈ, கொக்கு ஏறிய கட்டையிடம் சென்று, "கொக்கு ஏறிய கட்டையே.., உனக்காவது என் பெயர் தெரியுமா?" என்று கேட்க,  அதற்கு அந்தக் கட்டையோ, "எனக்குத் தெரியாது. நீ கட்டை ஏறிய கரையானிடம் போய்க் கேள்" என்று சொன்னது.

ஈயும் நேராகக் கரையானிடம் போய்க் "கட்டை ஏறிய கரையானே.., என் பெயர் என்ன?" என்று கேட்டு நிற்க, கரையானோ "எனக்குத் தெரியாது. நீ கரையானைப் பிடிக்கும் காடையிடம் போய்க் கேள்" எனக் கூறியது.

'ஷப்பாஆஆஆ... இப்பவே கண்ண கட்டுதே', என்று நினைத்துக் கொண்டு ஈ, காடையிடம் போய்க், "கரையானைப் பிடிக்கும் காடையே.., நீயாவது என் பேர் என்னனு சொல்லக் கூடாதா?" என்று கேட்க, அதற்கு அந்தக் காடை எல்லோரையும் போலவே "எனக்கும் தெரியாதப்பா, நீ போய்க் காடையைப் பிடிக்கும் வேடனிடம்  கேட்க வேண்டியது தானே" என்று கூற, வேறு வழியில்லை என்று நேராக வேடனிடம் போய் "காடையைப் பிடிக்கும் வேடனே.." என்று விசயத்தைச் சொன்னது.

வேடனும் "உன் பெயர் எனக்குத் தெரியாதப்பு. நீ வேணும்னா, வேடனோட ராஜாவிடம் போய்க் கேட்டுப் பார்" அப்படினு சொல்ல, ராஜாவுக்கு எப்படியும் தெரியும் என்று அவரிடம் போய் "வேடனோட ராஜாவே.., என் பெயர் எனக்கு மறந்து போச்சு. நீங்களாவது சொல்லுங்களேன்" என்று கேட்க, ராஜாவும் யோசித்துவிட்டு "எனக்கும் உன் பெயர் தெரியவில்லை. வேணும்னா என் குதிரையிடம் கேட்டுப் பார்", என்று கூறுகிறார்.

ஈயும் குதிரையிடம் போய் "ராஜாவோட குதிரையே.., நீயாவது என் பெயர் என்னனு சொல்லேன்" என்று கூறிவிட்டு 'முடியலடா சாமி' என்று அப்படியே குதிரையின் மூக்கில் போய் உட்கார்ந்தது. ஈ உட்கார்ந்த குறுகுறுப்பில் குதிரை 'ஈஈஈஈஈஈஈ....' என்று கணைத்தது. உடனே அந்த ஈ "ஓஹோ, ஈ தான் என் பெயரா!!" என்று  தன் பெயரைக் கண்டுபிடித்துவிட்டதில் "நான் ஈ... நான் ஈ.." என்று கத்திக்கொண்டே மகிழ்ச்சியாகத் பறந்து சென்றது. இப்போது மேலே சென்று அந்தப் பாடலை மீண்டும் படித்துப் பாருங்கள், கதை புரியும்.

Saturday 16 September 2017

குற்றாலம் - பாண்டியன் லாட்ஜ் ஹோட்டல்

அதிகாலையே குற்றால மெயின் அருவி சென்று மக்கள் வெள்ளத்தில் அடித்துப் பிடித்துப் புகுந்து அருவி வெள்ளத்தில் குளித்து வந்ததில் உள்ளே இருக்கும் குண்டோதரன் விழித்துக் கொண்டான். மெயின் அருவி அருகில் நல்ல உணவகம் எது என்று விசாரித்த போது பாண்டியன் லாட்ஜ் ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர். அங்கே சென்றோம். மெயின் அருவியில் இருந்து வெளியே வந்து இடதுபுறம் திரும்பி ஐந்தருவி செல்லும் சாலையில் சென்றால் சிறிது தூரத்தில் வலதுபுறம் ஒரு தெரு பிரிகின்றது. அந்தத் தெருவில் கொஞ்சம் முன்னேறினால் பாண்டியன் லாட்ஜ் ஹோட்டலை அடையலாம். 


மற்ற உணவகங்கள் எல்லாம் இட்லி சாம்பார் என்று வழங்கிக் கொண்டிருக்க காலை வேளையிலேயே நல்ல வெட்டுக்குத்து வேண்டுவோர் அணுகும் இடம் தான் இந்தப் பாண்டியன் லாட்ஜ் உணவகம். உணவகத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இல்லை. கட்டிடத்தைச் சுற்றிலும் பல பெயர் பலகைகள் வைத்துள்ளனர். பழைய காலத்து வீடு போல் இருந்தது உணவகம். வரவேற்பறையில் சுற்றிலும் இருக்கும் சாமி படங்கள் ஊதுபத்தி மணத்துடன் நம்மை வரவேற்கிறது. சுவர்கள் வெண்மை பூசப்பட்டு உணவகம் மிகத் தூய்மையாக இருக்கிறது.  

வரவேற்பறை
ஒரே ஒரு மேஜையைத் தவிர அனைத்தும் காலியாக இருந்தது. நல்ல உணவகம் இந்தக் காலை வேளையில் அரவம் இன்றி இருந்தது நமக்கு ஆச்சரியம் அளித்தது. உள்ளே சென்று நாமாக ஒரு இருக்கையில் அமர்ந்த பிறகு சிறிது நேரம் கழித்து வாழை இலையும் தண்ணீரும் வைக்கப்படுகிறது. சர்வரிடம் உணவகத்தின் அமைதிக்கான காரணத்தைக் கேட்டோம். “அவர் குற்றாலத்தில் சீசன் இல்லாததால்..” என்றார். அருவிகளிலும், நேற்று மதியம் பார்டர் கடையிலும் கண்ட கூட்டதிற்கு பின் அவர் சொல்லை நம்ப முடியவில்லை. 

காத்திருக்கும் படலம்
சரி இருக்கட்டும் என்று ஆளுக்கு ஒரு தோசையும் மட்டன் கொத்துக்கறியும் கேட்டோம். கொத்துக்கறி செய்யவில்லை என்றார். மட்டன் சுக்காவும், கோழி சாப்ஸும் கொண்டு வரச் சொன்னோம். மெல்லிய தோசையும் உடன் சிறிய கிண்ணங்களில் சாப்ஸும் சுக்காவும் வந்தது. கோழி சாப்ஸ் அளவு சிறிதாகவும் மட்டன் சுக்கா துவையல் அளவும் இருந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது. சட்னி கேட்டோம். காலியாகி விட்டது என்றனர். மணி பத்து தான் ஆகியிருந்தது. ஆகட்டும் என்று தோசையைப் பிட்டு மட்டன் சுக்காவில் தொட்டுக் கச்சேரியை ஆரம்பித்தோம்.


சுவையில் குறை இல்லை. மிதமான காரத்துடன் மட்டன் சுக்கா பிரமாதமாக இருந்தது. பொடிது பொடிதாக வெட்டப்பட்ட மட்டன் துண்டுகள் மசாலுடன் கலந்து நன்றாக வேகவைக்கப்பட்டிருந்தது. தோசையுடன் சேர்த்துச் சுவைத்தபோது மாவைப் போல் கரைந்து போனது.


கோழி சாப்ஸும் அதேபோல் நல்ல பதத்துடன் தயாரிக்கப்பட்டு நல்ல சுவையில் இருந்தது. சுக்கா போல் அதையும் சிறிய துண்டுகளாகப் பிய்த்துப் போட்டு குருமாவோடு அள்ளி தோசையுடன் சேர்த்து சுவைத்த போது அற்புதமாய் இருந்தது. அருவிக் குளியல் தந்த களைப்பில் உணவு போன இடம் தெரியவில்லை. சுக்காவும் சாப்ஸும் சுவையின் இரு வேறு பரிணாமங்களைக் காட்டின. உணவருந்திவிட்டு அதற்கான விலை கொடுத்தபோது அதிகமெனத் தோன்றியது. 


பாண்டியன் லாட்ஜ் உணவுகள் சுவையில் பார்டர் கடை உணவுகளுக்கு சற்றும் குறையில்லை தான். ஆனால் அந்த உணவை வழங்கும் விதத்தில் தான் இரண்டுக்கும் வித்தியாசம். என்ன தான் சுவையான உணவாக இருந்தாலும் விற்கும் விலைக்கேற்ப உணவின் அளவும் இருந்தால் தானே உண்பவர்களுக்குத் திருப்தி. பார்டரில் இருக்கும் தாராளம் பாண்டியனிடம் இல்லை. எல்லாவற்றையும் விடுத்து சுவையை மட்டுமே கருத்தில் கொண்டால் தாராளமாகப் பாண்டியன் லாட்ஜ் உணவுகள் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். 

Saturday 2 September 2017

பிரானூர் - பார்டர் கடை புரோட்டாவும் நாட்டுக்கோழியும்..


நண்பர்கள் குற்றாலம் பயணத் திட்டமிட்டவுடன் நான் உடனே சம்மதம் தெரிவித்ததும் உள்ளே இருக்கும் குண்டோதரனுக்கு ஒரே குஷி. காரணம் அருவியில் விளையாடுவதற்கல்ல, 'பிரானூர் பார்டர் கடை' புரோட்டா சால்னாவில்(குருமா) புகுந்து விளையாடவே. இன்று என்னைப் போல் பலரும் குற்றாலம் வருவது அருவிகளில் குளித்து மகிழ்வதோடு பார்டர் கடை புரோட்டா, கோழிகளை ஒரு கை பார்க்கும் ஆவலுடன் தான்

குற்றாலம் சென்று முதலில் மெயின் அருவிக்குச் சென்றால் சுமார் அரை கிமீக்கு மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். சரி ஐந்தருவிக்குப் போய்ப் பார்க்கலாம் என்றால் அங்கேயும் அதே நிலை. இந்தக் கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று குளிப்பதற்குக் குளிக்காமலேயே இருக்கலாம் என்று இருந்தது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்தபோது நமக்கு உள்ளே இருக்கும் குண்டோதரன் தன் வேலையைக் காட்டினான். நான், "கூட்டம் குறைந்ததும் இரவு வந்து குளிப்போம். இப்போது போய் பார்டர் கடையில் சாப்பிட்டுவிட்டு ஒரு நல்ல  தூக்கம் போட்டால் என்ன?" என்று கூறவும் நண்பர்களும் அதை ஆமோதித்தனர். குண்டோதரன் குதூகலமானான்ஐந்தருவியில் இருந்து நேராக பைக்கை பார்டர் கடை நோக்கி விரட்டினோம்


கடையின் எதிரே பைக்கை நிறுத்தினோம். சிமெண்ட் சீட் போடப்பட்ட கட்டிடம். பெரிய பெயர் பலகையைத் தவிர ஒரு பிரபலமான உணவகம் என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. ஆவலுடன் உள்ளே சென்ற நமக்குப் பெரிய அதிர்ச்சி. குற்றால அருவிகளில் இருந்ததில் பாதிக் கூட்டம் அங்கே தான் இருந்தது. அனைத்து மேஜைகளும் கூட்டத்தால் நிரம்பி வழிய, மேஜையில் சிக்கிய இடத்தில் எல்லாம் இலையை விரித்து வைத்திருந்தனர். ஒவ்வொரு இலையிலும் சால்னா (குருமா) அருவியாக ஓடிக்கொண்டிருக்க, மக்கள் அதில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்ல வேண்டும். “இந்தக் கடையில் அப்படி என்னதான் இருக்கிறது? இவ்வளவு கூட்டம் அள்ளுகிறது”, என்று உடன் வந்த நண்பர் கேட்டார். “சாப்பிட்டுப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றேன். ஒவ்வொரு இருக்கைக்குப் பின்பும் உண்பவர் எழுந்த பின்பு அந்த இருக்கையைக் கைப்பற்ற அடுத்தவர் தயாராக நின்றுகொண்டிருந்தார். பசி ருசியை மட்டுமல்ல பண்பையும் அறியாது போலும். நமக்கு சற்று சங்கடமாக இருந்தது. ஆனால் இப்போதைக்கு சங்கடப் பட்டால் பட்டினி கிடக்க வேண்டியதுதான் என்று நாமும் ஒரு இருக்கைக்குப் பின்னால் போய் நின்று காத்துக் கொண்டிருந்தோம்J


காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கடையைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். 'பார்டர் கடை' பெயரே விசித்திரமாக இருக்கிறதல்லவா? அது ஒரு காரணப் பெயர் ஆகும். 1956க்கு முன்னர் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்படாத சமயத்தில் செங்கோட்டைத் தாலுகா கேரளாவுடன் இணைந்திருந்தது. அப்போது தமிழக-கேரள எல்லை (பார்டர்) இந்தக் கடை இருக்கும் பிரானூர் அருகில் இருந்ததால் இந்தக் கடை 'பார்டர் கடை' என்று பெயர் பெற்றுள்ளதுமுதலில் பார்டரில் லாரிகளை நிறுத்தி ஓய்வெடுக்கும் லாரி ஓட்டுனர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கடை வழங்கிய சுவையில் அதன் புகழ் பரவி இன்று தமிழகமெங்கும் இருந்து ‘மலர் தேடும் வண்டுகளைப் போல்’ சுவை விரும்பிகள் இந்தக் கடையை நோக்கிப் படையெடுக்கிறார்கள். குற்றாலம் சென்று வந்தவர்கள் தங்கள் நட்புகளிடம் 'பார்டர் கடையில் சாப்பிட்டேன்' என்று பெருமையாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். 



அதோ இருக்கை காலியாகிவிட்டது. டபக்கென்று புகுந்து இருக்கையைப் பிடித்து அமர்ந்தோம். பெரிய வெற்றி பெற்றதைப் போல் ஒரு உணர்வு.  மேஜை சுத்தம் செய்யப்பட்டு நமக்காக இலை விரிக்கப்படுகிறது. தண்ணீர் தெளித்து மீண்டும் காத்திருந்தோம். வெறும் இலையைப் பார்த்துக் கொண்டு உணவுக்காகக் காத்திருக்கும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்களே.. ஆனால் அவர்கள் அதிகம் நம்மைக் காக்க விடவில்லை. ஒரு பெரிய வட்டகை நிறைய புரோட்டா வர, அனைவர் கண்களும் வட்டகையையே நோக்குகிறது. அனைவருக்கும் சமமாக மூன்று புரோட்டாக்களை வைத்துக் கொண்டே வருகிறார்கள். வட்டகையில் புரோட்டாக்கள் குறைந்துகொண்டே வர வர “இங்கே வாருங்கள்”, “எனக்கு வையுங்கள்” என்ற, பல குரல்களின் ஒலி கூடிக் கொண்டே வந்தது. பலரது முகங்களிலும் புரோட்டாவைப் பெற்றுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், தீர்ந்து விடுமோ என்ற ஏக்கமும் தெரிந்தது. 



நமக்குக் கிடைத்தது. பொன்னிற புரோட்டாக்கள் ஒவ்வொன்றும் சிறியதாக உள்ளங்கை அளவே இருந்தது. பிறகு ஒரு வாளி நிறைய சால்னா கொண்டு வந்து மேஜைக்கு ஒன்று வைத்து விடுகின்றனர். நாமே வேண்டிய அளவு எடுத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.  கொஞ்சம் சால்னா எடுத்து இலையில் ஊற்றியபோது அது கெட்டியாக இல்லாமல் இலையில் ஓடிப் பரவியது. முதலில் கொஞ்சமாக புரோட்டாவைப் பிட்டு கொஞ்சமாகச் சால்னாவில் தொட்டு சுவையை சோதிக்கிறோம். சோதனைக்காகக் குறுகியிருந்த கண்கள் புரோட்டா சால்னா சுவையில் பரவசமடைந்து விரிகின்றன. வழக்கமான சாலனாவின் சாயல் சிறிதும் இல்லாமல் ஒரு புதிய சுவையை உணர்த்தியது. பிறகென்ன புரோட்டாவைச் சால்னாவில் தொட்டுத் தின்பதை விடுத்துக் குழைத்து உண்டோம். நாம் மட்டுமல்ல மேஜையில் இருந்த அனைவரும் அப்போது புரோட்டா சூரியாக மாறியிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் அதே போல் ஒரு பெரிய வட்டகை நிறைய வருக்கப்பட்ட நாட்டுக்கோழியைக் கொண்டு வந்து “வேண்டுமா? வேண்டுமா?” என்று ஒவ்வொரு இலையாகக் கேட்டுக் கொண்டே வைக்கின்றனர். பீஸ்கள் ஒவ்வொன்றும் பெரிதாக உள்ளது. அதில் கொஞ்சமாய்ப் பிட்டு சுவைத்தோம். வீட்டு மசால் கலந்து மிளகு தடவப்பட்டு நன்றாக வருக்கப்பட்ட நாட்டுக்கோழி காரமாக சுவையாக இருந்தது. எண்ணையில் பொறித்தது போல் அல்லாமல் வேகவைக்கப்பட்டது போல் நாட்டுக்கோழி அவ்வளவு மிருதுவாக இருந்தது.



சால்னாவும் கோழியும் இவ்வளவு  சுவையாக இருக்கக் காரணம் அவர்கள் வீட்டிலேயே தயாரிக்கும் மசால் தான். புரோட்டாவைச் சால்னாவில் பிரட்டி அதோடு கொஞ்சம் நாட்டுக்கோழியையும் சேர்த்து வாய்க்குக் கொடுத்து சுவைத்த போது அங்கே ஒரு இன்னிசைக் கச்சேரியே நடந்தது. அடுத்து ஆம்லெட் வந்தது. நாங்கள் நிமிர்ந்து பார்க்காமல் புரோட்டாவையும் கோழியையும் வேட்டையாடினோம். மீண்டும் அடுத்த சுற்று புரோட்டா வர அதையும் ஒரு கை பார்த்தோம். திருப்தியாக உண்டு எழுந்தபோது நம்மைத் தள்ளி விட்டுக் கொண்டு டபார் என்று ஒருவர் நம் இருக்கையை பிடித்து அமர்ந்தார். சற்று நேரத்திற்கு முன்னால் நாம் உணர்ந்த வெற்றிக் களிப்பு இப்போது அவர் முகத்தில்… 


விலைப் பட்டியலில் பல வகை உணவுகள் உள்ளன. அவையெல்லாம் கூட்டம் இல்லாத சாதாரண நாட்களில் கிடைக்கும். ஆனால் சீசன் நேரங்களில் புரோட்டா, சிக்கன், ஆம்லெட், புரோட்டா பிடிக்காதவர்களுக்கு இடியாப்பம் அவ்வளவே கிடைக்கிறது. புரோட்டா ஒன்றுக்கு எட்டு ருபாயும், நாட்டுக்கோழி வருவலுக்கு 140 ரூபாயும் வாங்குகின்றனர். அந்த சுவைக்கும், கஞ்சத்தனம் இல்லாமல் அவர்கள் கோழியை அள்ளி வைக்கும் பாங்கிற்கும் அந்த விலை தாராளமாகக் கொடுக்கலாம்.  விலையைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது குற்றாலம் வந்த பயணப் பயனை அடைந்தது போல் உணர்ந்தோம். “இப்போது தெரிகிறது, ஏன் இங்கு மட்டும் இவ்வளவு கூட்டம்”, என்றார் உடன் வந்த நண்பர். 



Friday 1 September 2017

உயிரைக் குடித்த அனிதாவின் கனவு

கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூறியிருக்கிறார். கனவு ஒரு மனிதனின் வாழ்வை மட்டுமின்றி அவன் வாழும் நாட்டையும் முன்னேற்றும். ஆனால் இன்று நடந்தது அதுவல்லவே. கனவு ஒரு அபலை மாணவியின் வாழ்வையல்லவா பறித்திருக்கிறது.  


ஆம் அனிதா என்ற அந்த ராசியில்லா ராணி, மருத்துவர் ஆகும் தன் கனவுகள் நிறைவேறா விரக்தியில் இன்று தன் உயிரைத் தொலைத்திருக்கிறாள். மற்றவர்களைப் போல புத்தகச் சுமையைத் தோளிலும் கனவுகளை மனதிலும் சுமந்து பள்ளி சென்ற அம்மாணவி பெற்றது 1176 என்னும் இமாலய மதிப்பெண்கள். அதைப் பெற அவள் எவ்வளவு கடினப்பட்டிருப்பாள். இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் நீட்(NEET) தேர்வில் வெற்றி பெற இயலாததால் அவளது மருத்துவக் கனவு கலைந்துவிட்டது. தூக்கம் மறந்து அவள் கண் விழித்துப் படித்த ஒவ்வொரு இரவும் அவளுக்குத் தெரிந்திருக்குமா அவள் பெறப் போகும் மதிப்பெண்கள் அனைத்தும் காற்றில் கரையும் கற்பூரம் போல் ஆகும் என்று. பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்கள் சொல்லும் பொதுவான அறிவுரை "இந்த ஒரு வருடம் மட்டும் நீங்கள் கஷ்டப்பட்டுப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் போதும், பிறகு நீங்கள் வாழ்க்கை முழுதும் சந்தோஷமாக இருக்கலாம்." என்பதே. அதைத் தானே செய்தாள் அனிதா. பிறகு ஏன் அவளுக்கு இந்த நிலை.

ஒரு வருடம் கடினப்பட்டுப் பெற்ற மதிப்பெண்களுக்கு மதிப்பு இல்லை என்றால் அவை மதிபெண்கள் அல்ல மதிப்பில்லா எண்கள் தானே. அந்த மதிப்பில்லா எண்களைப் பெறவா ஒரு தேர்வு. பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று எத்தனை மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அனைத்திற்கும் அர்த்தம் இல்லாமல் செய்யவா இந்த நீட் தேர்வு. நீட் தேர்வு தான் முடிவு என்றால் பிறகு பொதுத் தேர்வின் அவசியம் என்ன? பலதரப்பட்ட பாடத்திட்டங்களைக் கொண்ட நாட்டிற்கு ஓரே நுழைவுத் தேர்வு என்பது பொதுவாக இருக்க முடியுமா?  

பரந்த இந்த தேசத்தில் கல்வியின் தரம் பணத்தின் தரத்திற்கு ஏற்பவல்லவா இருக்கிறது. அம்பானிக்குக் கிடைப்பது அனிதாவுக்குக் கிடைப்பதும் சமமாகுமா? இருவரையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது நியாயமா? அனைவருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்த மத்திய அரசாங்கம் அதன் முதல் படியாக அனைவருக்கும் பொதுவான கல்வியைக் கொண்டு வந்திருக்க வேண்டும் அல்லவா? கல்வி என்பது வியாபாரம் என்ற நிலை மாறி அனைவருக்கும் அரசாங்கமே இலவசமாகக் கல்வியை வழங்குவதோடு ஒரு பொதுவான பாடத் திட்டத்தையும் கொண்டு வந்தால் மட்டுமே பொதுத் தேர்வு என்பது ஞாயமாக இருக்கும். அப்போது தான் அனிதா போன்ற பல திறமைசாலிகளின் இழப்பை இந்த நாடு தவிர்க்கும். அனிதாவின் ஆத்மாவும் சாந்தியடையும்.

Friday 25 August 2017

ஸ்ரீவில்லிபுத்தூர் - ஹோட்டல் கதிரவன்

நண்பர்களுடன் குற்றாலத்திற்குப் பயணம். உசிலம்பட்டியில் இருந்து கிளம்பி பேரையூர் கடந்து ஸ்ரீவில்லிப்புத்தூரை அடைந்தபோது காலை மணி ஒன்பது. உள்ளே இருக்கும் குண்டோதரன் கதவைத் தட்ட அவனை அங்கேயே சமாதானப்படுத்த எண்ணினோம். நல்ல உணவகம் எது என்று விசாரித்தபோது பல கைகள் காட்டிய இடம் ஹோட்டல் கதிரவன்.


ராஜபாளையம் செல்லும் சாலையில் தேரடிக்கு அருகில் இருபுறமும் இருக்கும் பால்கோவா கடைகளில் இருந்து வரும் இனிய மணத்தை அனுபவித்துக் கொண்டே சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் ஒரு வேப்பமரத்தின் அடியில் இருக்கிறது இந்த உணவகம். 




பழமையான கட்டிடம். முற்றத்தைத் தேக்குமரத் தூண்கள் தாங்குகின்றன. வெளியே இருந்து பார்க்கும் போது சிறிய உணவகம் போல் தோன்றியது. அதிக உயரமில்லாத நிலைக் கதவில் முட்டிக்கொள்ளாமல் குனிந்து உள்ளே சென்றபோது தான் கடையின் அளவு தெரிகிறது. வரிசையாக நான்கு அறைகள் உள்ளன. நம் வீட்டை விட உயரமாக எழுப்பப்பட்ட கான்கிரீட் கூரை. நாம் சென்ற போது உணவகம் தன் முழு கொள்ளளவில் இயங்கிக் கொண்டிருந்தது. கை  கழுவிவிட்டு, இடம் காலியாகும் வரை ஒரு ஒரமாக ஒதுங்கி ஓட்டப் பந்தய வீரரைப் போல் இடம் பிடிக்கத் தயாராக நின்றோம். நம்மைப் போல் இன்னும் சிலரும்... 



உணவகத்தின் பழமையைப் போல் வருபவர்களைக் கவனிப்பதிலும் பழைய பண்பு இருக்கிறது. நாம் காத்திருப்பதைப் பார்த்துவிட்டு கடையின் முதலாளி நாம் எத்தனை பேர் என்று விசாரித்து உட்கார இடம் ஒதுக்கிக் கொடுத்தார். அதே போல் கல்லாவை மட்டும் கவனிக்காமல் உணவு உண்பவர்களுக்கு இடையிடையே என்ன வேண்டும் என்று கேட்டுத் தருவித்தார். ஒவ்வொரு இருக்கைக்கு மேலும் இருக்கை எண் எழுதப்பட்டிருக்கிறது. சர்வர் வந்து உணவுகளைப் பரிமாறிவிட்டு இருக்கை எண்ணைச் சொல்லவும் கல்லாவில் இருப்பவர் கணக்கு வைத்துக் கொள்கிறார். 
நல்ல அகலமான வாழை இலை விரிக்கப்பட்டு ஒரு குவளையில் தண்ணீர் வைக்கப்படுகிறது. இலையில் தண்ணீர் தெளித்துவிட்டு முன்பசிக்கு இட்லி சொல்லலாம் என்று நினைத்தபோது, ஒரு பெரிய தாம்பளத் தட்டு நிறைய இரண்டு இரண்டாகப் பூரிகள் அடுக்கப்பட்டு ஒவ்வொரு இலையாக ‘’வேண்டுமா?" என்று கேட்டுக் கொண்டு சர்வர் வர, இட்லியை மறந்து நாமும் ஒரு செட் பூரி வாங்கிக்கொண்டோம். மேலே இருக்கும் பூரியை எடுத்தபோது சிற்பிக்குள் இருக்கும் முத்தைப் போல் பூரிகளுக்கு நடுவில் உருளைக் கிழங்கு மசால் ஒழிந்திருந்தது.



சுத்தமான கோதுமையில் செய்யப்பட்ட பூரி சிறிதாக இருந்தாலும் மிருதுவாக இருந்தது. பூரியைப் பிட்டு உருளைக் கிழங்கு மசிய வேகவைக்கப்பட்ட மசாலில் தொட்டுக் கொண்டு சுவைத்தபோது அருமையாக இருந்தது. வித்தியாசமான சுவைக்கு தொட்டுக்கொள்ள சாம்பாரும் தருகிறார்கள். அதுவும் நன்றாகவே இருந்தது. 




அடுத்து ஒரு பொங்கலும் வடையும் வங்கிக் கொண்டோம். பச்சரிசியுடன் பாசிப்பருப்பும் நெய்யும் செழிப்பாகக் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பொங்கல், சுவையில் பூரிக்கு சளைக்கவில்லை. பாசிப்பருப்பும் பச்சரிசியும் நன்றாகக் குழைந்து ஒன்றோடு ஒன்று பிணைந்து அல்வா பதத்தில் இருந்தது. ஒரு வாய் எடுத்து சாம்பாரில் பிரட்டி சுவைத்தபோது அப்படியே கரைந்து போனது. வழக்கமாக பொங்கலில் சேர்க்கப்படும் மிளகு பொங்கலின் சுவையைக் கூட்ட இடையிடையே இருக்கும் சீரகம் மெல்லப்படும்போது அது அந்த சுவையான உணவுக்கு ஒரு அற்புதமான மணத்தைக் கொடுக்கிறது. 



பொங்கலைப் போல் வடையும் இங்கே நல்ல சுவையில் கிடைக்கிறது. இன்று உளுந்து விற்கும் விலையில் பல கடைகளில் உளுந்து வடையில் உளுந்துடன் அரிசியைக் கலந்து மெதுமெதுவென்று இருக்க வேண்டிய வடையை வறவறவென்று தருகின்றனர். ஆனால் இங்கே சுத்தமான உளுந்தமாவை உருட்டி எண்ணையில் பதமாகப் பொறித்துப் பொன்னிறத்தில் கொடுக்கின்றனர். வடை அவ்வளவு மிருதுவாக இருக்கிறது. பொங்கலுக்கு சரியான பங்காளி. உடன் வந்த நண்பர், நெய் தோசையும் அருமை என்றார். நான் சுவைக்கவில்லை.

ஆண்டால் பாடிய பாசுரங்களைக் கேட்டு ரங்கமன்னார் மயங்கியது போல் கதிரவன் ஹோட்டல் தந்த உணவுகளின் சுவையில் நாங்கள் மயங்கி நின்றோம். இவ்வளவு சுவையான உணவுகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் விலை இன்று எங்கெங்கும் முளைத்திருக்கும் பல உயர்தர பவன்களைக் காட்டிலும் குறைவு என்பது மிகச் சிறப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் – ரங்கமன்னாரை தரிசித்த மனநிறைவோடு கதிரவனில் வயிறை நிறையுங்கள் அது ஒரு சுகானுபவமாக இருக்கும்.

Wednesday 16 August 2017

பருவமழைப் பயணம் - வட்டக்கானல் (கொடைக்கானல்) நிறைவு


பருவமழைப் பயணம்-வட்டக்கானல் பாகம் 1 இங்கே

ஓரிடத்தில் தண்ணீர் ஓடும் சத்தம் சலங்கை ஒலி போல் கேட்கிறது. ஒரு சிற்றாறு பள்ளத்தில் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. இறங்கிச் சென்று பார்த்தோம். ஒரு நிமிடம் நம் கண்களை நம்ப முடியவில்லை. காட்டுக்குள் ஒரு அழகிய அருவி விழுந்துகொண்டிருந்தது.


படிக்கட்டுகள் போல் அமைந்த பாறை அமைப்பில் அந்த அருவி தவழ்ந்து வழிந்து ஓடியதைப் பார்க்க அற்புதமாக இருந்தது. சுற்றிலும் பைன் மரங்களும், செடிகளும், கொடிகளும், பசும்புல்வெளிகளும் அருவியைச் சூழ நந்தவனம் போல் இருந்தது அந்த இடம். சிறிது நேரம் அருவிக்கரையில் அமர்ந்து அதன் அழகில் நனைந்தோம். 

அருவியின் மேற்புறம்


பைக்கைக் கிளப்பி வட்டக்கானலை அடைந்தோம். பெரிய கிண்ணம் போல வட்ட வடிவில் நீலமலைச் சிகரங்களால் சூழப்பட்ட ஒரு பசுமையான பள்ளத்தாக்கு. வானம் இறங்கிவந்து பூமியுடன் சேர்ந்தது போல் வானத்தின் நீலமும், பள்ளத்தாக்கின் பசுமையும் கலந்து பள்ளத்தாக்கு முழுதும் கருநீலமாய் காட்சியளிக்கிறது. இறைவன் கைவண்ணத்தில் மிளிரும் அழகிய ஓவியம் அது. மலைவிளிம்பில் வரிசையாய் அமைந்த வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள். 

வட்டக்கானல்
கையில் ஒரு கோப்பைத் தேனீருடன் மலைவிளிம்பில் இருந்து பள்ளத்தாக்கைப் பார்த்துகொண்டே இருக்கலாம். அது ஒரு தியனத்திற்கு இணையான பலனைக் கொடுக்கும் என்றே சொல்லுவேன். வட்டக்கானலைப் பலரும் நாடுவது அதற்காகத் தான். வட்டக்கானல் பேரமைதியாக இருந்தது. கொடைக்கானல் வரும் மக்கள் அருகில் உள்ள இடங்களைப் பார்த்துவிட்டு வட்டக்கானலைத் தங்கள் கடைசித் தேர்வாகவோ அல்லது தவிர்த்துவிட்டோ செல்கின்றபடியால் வந்த அமைதி. அந்த அமைதி நமக்கு லாபமானது.  அன்று வானம் பளிச்சென்று இருந்தது. மழைக்கான அறிகுறி இல்லை. மலைவிளிம்பில் இருந்த ஒரு உணவகத்தில் காலை உணவை அருந்தினோம். தேனீர் விடுதிக்கோ உணவகத்திற்கோ சென்றால், “தங்குவதற்கு அறை வேண்டுமா?” என்று தாங்களாகவே வினவுகின்றனர். அதுமட்டுமின்றி சீசன் நேரங்களில் ‘ஹோம் மேட் சாக்லேட்டுகள்’ தயாரித்து விற்பனையும் செய்கின்றனர்.
இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள ‘டால்பின் மூனை’ என்ற இடத்திற்குச் சென்றோம். மலையின் விளிம்பு டால்பினின் மூக்கைப் போல் இருப்பதால் அப்படிப் பெயர். பைக்கில் செல்ல இயலாது, சரிவான காட்டுப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். இறக்கம் பல இடங்களில் செங்குத்தாக இருந்ததால் இறங்குவதே சற்று சிரமமாக இருக்கிறது. அப்படியானால் ஏறுவதற்கு சொல்ல வேண்டியதே இல்லை.

டால்பின் முனை செல்லும் பாதை
மண்தரை மழையில் நனைந்து நெகிழும் தன்மையுடன் இருந்தது. கால் வழுக்கிய தடங்களைப் பல இடங்களில் காண முடிந்தது. வழியில் பல இடங்களில் தேனீர் மற்றும் குளிர்பானக்கடைகள் இருக்கின்றன. அனைத்து அங்காடிகளிலும் குலுக்கோஸ் நீர் தவறாமல் விற்கிறார்கள். காரணம் இல்லாமல் இல்லை.


மலையின் விளிம்பில் படுத்துக்கொண்டு பள்ளத்தாக்கை எட்டிப் பார்ப்பது போல் அமைந்த ஒரு செவ்வகமான பாறை. அதன் மேல் இரண்டு சிறிய பாறைகள். டால்பின் முனை என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியது. நாங்கள் செல்லும்போது புதுமணத் தம்பதிகள் முனையில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

டால்பின் முனை
ஜோடியாக வரும் அனைவரும் தவறாமல் டைட்டானிக் போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். அதைப் பார்த்து பெருமாளுக்குக் கொஞ்சம் பொறாமை வந்தது. சீக்கிரம் திருமணம் முடித்து மனைவியுடன் இங்கு வந்து இதே போல் போஸ் கொடுப்பேன் என்று மலைவிளிம்பில் நின்று சபதம் செய்துகொண்டார். நேற்று அருந்திய உணவு ஒவ்வாமையைக் கொடுக்க மனோ அன்று சோர்வாக இருந்தார். புதுத் தம்பதிகள் சென்ற பின்பு டால்பின் முனைக்குச் சென்றோம். 

வேறு கோணத்தில் டால்பின் முனை
மலைவிளிம்பில் அந்தக் கல் வெளியே நீட்டிக் கொண்டிருக்க இருபுறமும் பள்ளத்தாக்கு. கல்லின் அகலம் மூன்றடியே இருக்கும். இதுவரை மலைவளிம்பில் நின்று முன்னால் இருக்கும் பள்ளத்தாக்குகளை ரசித்திருக்கிறோம் ஆனால் முதல் முறை காலுக்கடியில் பள்ளத்தாக்கைக் கண்டு பரவசமானோம். தன்னிச்சையாகக் கால்கள் நடுங்கியது. டால்பின் மூக்கின் மேல் அமர்ந்து கீழே இருக்கும் பள்ளத்தாக்கைக் கண்டோம். வனூர்தியில் பறப்பதுபோல் இருக்கிறது.

மனம் லேசானது. இயற்கைக்கு மருத்துவம் தெரியும். அது உடற்பிணி, மனப்பிணி இரண்டையும் போக்கவல்லது. நாம் செய்யவேண்டியதெல்லாம் அதனோடு நேரம் செலவிட வேண்டியது அவ்வளவே. மூவரில் அதிகம் சந்தோசப்பட்டது பெருமாள் தான். ஐந்து வருடங்களுக்குப் பிறகு பயணம் வருவதாகத் தெரிவித்தார். பயணிகளின் கூட்டம் வரவும் அமைதி வேண்டி வேறிடம் நகர்ந்தோம்.
டால்பின் முனையில் இருந்து சற்று தள்ளி ‘எக்கோ பாயிண்ட்’ என்ற இடம் உள்ளது. அங்கு சென்றோம். செல்லும் வழி மலைச்சரிவை ஒட்டிய ஒரு இரண்டடிப் பாதை. சரிவை மரங்கள் மறைத்ததால் முதலில் நாங்கள் அதைக் கவணிக்கவில்லை. பாதையை தொடர்ந்து ஒரு பாறை மேல் ஏறி தொடர்ந்து நடந்தபோது திடீரென்று பள்ளத்தாக்கின் விளிம்புக்கு வந்துவிட்டோம். ஒரு நிமிடம் உறைந்து போனோம்.

எக்கோ பாயிண்ட்
ஏற்கனவே ஒவ்வாமையில் இருந்த மனோவுக்கு அந்தக் காட்சி தலை சுற்றுவதுபோல் ஆக்கிவிட்டது. கீழே போய் அமர்ந்துகொண்டார். நாம் சென்றபோது பள்ளத்தாக்கு முழுதும் மூடுபனி மூடியிருந்தது. காற்று வந்து தள்ள, பனி மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்தது. அதுவரை சூழலைப் பனி சூழ்ந்திருக்க பக்கவாட்டில் ஒரு மலை இருப்பதற்கான தடையமே தெரியவில்லை. பனித்திரை விலக வெளியே எட்டிப்பார்த்த மலை அவதார் திரைப்படத்தில் வரும் மிதக்கும் மலைகள் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. கனவுலகத்தில் நுழைந்தது போல் பிரம்மிப்பில் ஆழ்த்திய காட்சி அது.

மூடுபனி
பனி விலகிகும்போது
மலைவிளிம்பில் நின்று "ஊஊஊஊ…" வெனக் கத்தினோம். மலையும் பதிலுக்கு "ஊஊஊஊ…" என்றது… "நலமா?" என்றோம் பதிலுக்கு அதுவும் "நலமா?" என்று நம்மைக் கேட்டது. இயற்கையெனும் பெருவெளியில் ஒரு சிறு புள்ளியாய் உணர்ந்தோம்.


கனவுலகில் இருந்து மீண்டு மெல்லத் திரும்பி ஏற்றத்தில் நடந்தோம். ஏறும்போது கெண்டைக்கால் சதைகள் பிடித்து இழுத்துக் கால்கள் நோகின. நோவு அதிகமாகும்போது பாதையிலேயே அமர்ந்து வலி குறைத்தோம். இழந்த தெம்பை மீட்க வழியில் ஒரு கடையில் குலுக்கோஸ் வாங்கிப் பருகிவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினோம்.



வட்டக்கானலை அடைந்து பைக்கைக் கிளப்பி அறைக்கு வந்தோம்.
 
மதிய உணவு முடித்து மாலை வரை குட்டித் தூக்கம். மாலை ஊர் திரும்ப வேண்டும். ஆனால் மனது வரவில்லை நமக்கு. மனோவும் பெருமாளும் அத்தகைய எண்ணத்திலேயே இருந்தனர். இன்று இரவும் தங்கிவிட்டு காலையில் கிளம்புவதாக முடிவெடுத்தோம். சமயத்தில் எடுக்கப்படும் இத்தகைய ஒருமித்த முடிவுகள் சூழ்நிலையை மேலும் இனிமையாக்கும்.
இன்று முழுதும் மழை பெய்யவில்லை. அந்தியில் கொடைக்கானல் ‘நட்சத்திர ஏரி’க்குச் சென்றோம். நகரின் நடுவே நட்சத்திர வடிவில் அமைந்த அழகிய செயற்கை ஏரி. ஏரியில் படகு சவாரி செல்லலாம். ஏரியைச் சுற்றி சைக்கிளில் உலா வருவதும், குதிரை சவாரி செய்வதும் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் செயல்கள். ஏரியைச் சுற்றி பைக்கில் உலா வந்தோம். ஏரியைச் சுற்றிப் பல இடங்களில் படகுக் குழாம்கள் உள்ளன. திண்பண்டங்கள் விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் பல உள்ளன. குளிருக்கு மிளகாய் பஜ்ஜியும் தேனீரும் எடுத்துக் கொண்டோம்.

செயல்படாத படகுக் குழாம்
கூட்டம் இல்லாத ஒரு இடத்தில் ஏரிக்கரையில் சென்று அமர்ந்தோம். காற்று தள்ளுவதால் தண்ணீர் வரி வரியாகச் சிற்றலை போட்டுக் கரையில் வந்து மோதிச் சென்றது. நமது வாழ்வும் அப்படித் தானே. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ குடும்பம், சமூகம், பணி போன்ற வெளிப்புற சக்திகளால் தள்ளப்பட்டு தண்ணீரைப் போல் போகிற போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். நகரின் சத்தங்கள் அப்போது கேட்கவில்லை. சில நேரம் தண்ணீரின் ஆழத்திற்குச் சென்று அமைதியானது மனம். கதிரவனும் மறைந்திருந்தது. ஆனால் கதிரின் ஒளி வானத்தில் பட்டு எதிரொளித்தது. இருப்பதைக் கொண்டு இல்லாமையை நிறைக்கும் செயல் அது.   

கொடைக்கானல் நட்சத்திர ஏரி


அறைக்கு வந்து உணவருந்திவிட்டு, சிறிது நேரம் தொலைகாட்சி பார்த்தோம். விஜய் டீவி பிக்பாஸில் ஆர்த்தியும், காயத்திரியும் ஜூலியை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். ஓவியாவும் ஆரவும் சொல்லிக் கொடுத்தது போல் கடலை போட்டுக் கொண்டிருந்தனர். கடுப்பாவதற்குள் தொலைகாட்சியை அணைத்துவிட்டு படுத்தோம். அலாரம் எழுப்ப காலை 5:30 க்கு எழுந்தோம். இன்று அலுவலகம் உள்ளது. சேத்தாண்டி வேடம் போட்டது போல் பைக் முழுவதும் சேறாக அப்பியிருந்தது. இப்படியே சேறோடு அலுவலகம் செல்ல இயலாததால் குளிரில் நடுங்கிக் கொண்டே பைக்கைக் கழுவினோம். குளித்து முடித்து விடுதிப் பொறுப்பாளர் கொடுத்த சூடான காபியையும் அருந்திவிட்டு காலை 6:30 க்கு பெரியகுளத்தை நோக்கி பைக்கைக் கிளப்பினோம். இப்போது அடுக்கம் வழி செல்லாமல் கட் ரோடு வழியாகப் பெரியகுளம் சென்றோம். அதிகாலையில் மலைச் சாலையில் பயணிப்பது இதுவே முதல்முறை. ஆச்சரியமாய் குளிர் அவ்வளவாகத் தெரியவில்லை. குளிர் மிதமாக பைக் பயணத்தை சுகமானதாக்கியது. இடையில் டம்டம் பாறையில் தேனீருக்காக நிறுத்தினோம். வழக்கம்போல் அங்கு வந்த பயணிகளிடம் குரங்குகள் தின்பண்டங்களைப் பிடுங்கிக் கொண்டிருந்தன. 9 மணிக்குப் பெரியகுளத்தை அடைந்தோம். மழையோடு ஆரம்பித்த பருவமழைப் பயணம் மழையின்றி முடிந்தது. அலுவலகம் வந்துவிட்டோம். ஆனால் மனம் கொடைக்கானல் மலையின் பள்ளத்தாக்குகளில் எங்கோ உலாவிக் கொண்டிருந்தது.

பருவமழைப் பயணம் - வட்டக்கானல் (கொடைக்கானல்) பாகம் 1


இந்த வியாதி இன்று நேற்றுப் பிடித்ததல்ல. சிறு வயதிலிருந்தே இருக்கிறது. கல்லூரியில் வருடா வருடம் ‘இண்டஸ்ட்ரியல் விசிட்’ என்ற பெயரில் ஊர் சுற்றிப் பழகிவிட்டபின், பெங்களூரில் பணி நிமித்தமாகக் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா என்று சுற்றியதில் அது சற்று முற்றிவிட்டிருந்தது. இப்போது அது கைமீறிப் பயணம் என்பது வாழ்வில் நீக்கமற நிலைத்த ஒன்றாகவே ஆகிவிட்டது. 
குட்டிக்கானத்திற்குப் பருவமழைப் பயணம் சென்று வந்த இனிய அனுபவத்தில் மீண்டும் ஒரு பருவமழைப் பயணம் செல்ல முடிவெடுத்தோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அப்போது பயணத் திட்டம் எதுவும் நம்மிடம் இல்லை. குட்டிக்கானம் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு மின்சார வாரியத்தில் பணிபுரியும் நண்பர் பெருமாள் தனக்காக ஒரு பயணம் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதால் முடிவானதே இந்தப் பயணம்.


திடீர் பயணம் என்றால் நம்முடைய பிரதானத் தேர்வு கொடைக்கானல் தான். கொடைக்கானல், உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தளம். கோடைக்காலத்தில் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளால் கொடைக்கானல் மலைக்கே மூச்சு முட்டும். வாகனங்கள் ரயிலைப் போல் வரிசையாகச் சென்று கொண்டிருக்கும். தேனீக்கள் தேன்கூட்டை மொய்ப்பது போல் தங்கும் விடுதிகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த பிறகு அவ்வளவு ஆரவாரமாக இருந்த கொடைக்கானல் ஒரு அமைதியான மலையாக மாறிவிடும். அதுமட்டுமின்றி தமிழ்நாடே காய்ந்துகொண்டிருக்க கேரளாவைப் போல் இங்கும் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிடும். ஆகவே இப்போது மீண்டும் ஒரு பருவமழைப் பயணம். 

நான், மனோ, பெருமாள்
ஒரு விடுமுறை நாளின் மதியம்…. பெரியகுளத்தில் இருந்து நமது பைக்கைக் கிளப்புகிறோம். நம்முடன், பெருமாளும், வழக்கம் போல் மனோவும் இந்தப் பயணத்தில் வருகிறார்கள். பொதுவாகக் கொடைக்கானல் செல்ல  வத்தலக்குண்டு தேனி சாலையில் உள்ள ‘கட் ரோடு’ (ghat road) சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்லும் மலைச் சாலையில் பயணிக்க வேண்டும். அந்தச் சாலை நல்ல அகலமானதும், நன்றாகப் பராமரிக்கப்படும் கொடைக்கானலுக்குச் செல்லும் பிரதான சாலையும் ஆகும். ஆனால் நாம் அதை விடுத்து ஒரு திரில்லுக்காக பெரியகுளத்தில் இருந்து ‘அடுக்கம்’ வழியாகச் செல்லும் சாலையைத் தேர்ந்தெடுத்தோம். இந்தச் சாலை அதற்கு நேர்மாறான தடுப்புச்சுவர்களற்ற மிகக் குறுகிய  சாலை. 



பெரியகுளத்தைவிட்டு வெளியேறி கும்பக்கரை அருவி செல்லும் சாலையில் பயணிக்கிறோம். இருபுறமும் பிரம்மாண்டமான புளியமரங்கள் குடைபிடிக்கின்றன. தொடர்ந்து செல்லும்போது காட்சிகள் மாறித் தென்னந்தோப்புகளால் சூழப்படுகிறோம். அதற்கடுத்தாற்போல் சென்றால் எங்கும் மாந்தோப்புகள் மட்டுமே. கல்லாமை, செந்தூரா, பங்கனப்பள்ளி, காளைப்பாடி என்று வகை வகையாய் மாமரங்கள். தந்தையின் தோள்களைப் பிடித்துத் தொங்கும் குழந்தையைப் போல் மரங்களில் மாங்காய்கள் சடைபிடித்துக் காய்த்துத் தொங்கின. மாங்காய்களின் கணம் தாங்காமல் கொப்புகள் தரைதட்டின. அவை ஒடிந்துவிடாமல் இருக்க நீளமான கொம்புகள் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் சேலத்தைப் போல் பெரியகுளமும் மாம்பழங்களுக்குப் பெயர் பெற்றது. 
வானம் மேகங்களால் சூழப்பட்டிருந்தது. பொங்களுக்கு வெள்ளையடிக்கப்பட்டது போல் கொடைக்கானல் மலையே வெண்மை படர்ந்திருந்தது. மேகத்தில் இருந்து கசிந்து நீர்த்துளிகள் சாரலாய் பொழிந்து இந்தப் பருவமழைப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கி நம்மை உற்சாகமூட்டியது. முகத்தைக் கொடுத்து சாரலை வரவேற்று நனைந்துகொண்டே பைக்கைச் செலுத்தினோம். நம்மோடு உற்சாகமான சாரலும் சிறிது நேரத்தில் மழையெனப் பெருகிப் பொழிந்தது. பைக்கை நிறுத்தி ஒரு புளியமரத்தடியில் ஒதுங்கினோம். அரை மணி நேரம் அடித்தது மழை. மரத்தடியில் நின்று மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். பசி எடுத்தது. தண்ணீர் மட்டுமே கையில் இருந்தது. அப்போது ஒரு இன்ப அதிர்ச்சி நமக்கு. சிறிது தூரத்தில் இருந்த சில மாமரங்களில் மஞ்சள் நிறத்தில் மாம்பழங்கள் பழுத்துத் தொங்கின. சுற்றிலும் வேலி கூட இல்லை. நனைந்துகொண்டே அருகில் சென்று பார்த்தோம். தரையிலும் நிறையப் பழங்கள் பழுத்து விழுந்திருந்தன. விலையின்மையின் காரணமாய் காய்கள் பறிக்கப்படாமல் விடப்பட்டிருந்தது. அந்த ஒற்றைக் காட்சி விவசாயிகளின் துன்பத்தைச் சொல்லப் போதுமானதாக இருந்தது. மாம்பழங்களைப் பறித்து உண்டு பசியாறினோம். இன்று அந்த முகம் தெரியாத விவசாயியின் துன்பத்தில் தான் எங்கள் பசியாறியது. இன்று மட்டுமல்ல நாம் தினமும் உண்ணும் உணவு தண்ணீரில் மட்டுமல்ல ஒரு விவசாயியின் கண்ணீரிலும் வளர்ந்ததே. 

நான், பெருமாள், மனோ
மழை நின்றதும் கிளம்பினோம். மழையில் நனைந்து சாலை கன்னங்கரேல் என்றிருந்தது. மரங்களும் செடிகொடிகளும் குளித்துப் பச்சைப்பசேல் என்றிருந்தன. அடிவாரத்தை அடைந்து மலைச்சாலையில் ஏறுகிறோம். சாலையைக் காடு சூழ்கிறது. ஒன்றுக்கொன்று இடித்துக்கொண்டு வளர்ந்த மரங்கள் புதர் போல் இருக்கிறது. அதில் காட்டுக்கொடிகள் வழுக்கட்டாயமாகப் படர்ந்துகிடந்தன.


சாலையின் மறுமுகம் தெரிகிறது. இதுவரை வழவழவென்று அகலமாக  இருந்த சாலை இப்போது அகலம் குறுகி ஒற்றைப் பாதையாக மாறுகிறது. நான்கு சக்கர வாகனங்கள் எதிர் எதிரே வந்தால் கடப்பது சிரமம் தான். மேலே செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக சாலை மறைந்து மண் பாதையாக மாறியது. சில இடங்களில் சரலையாகவும் சில இடங்களில் சகதியாகவும்… 


சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கிய மழைத் தண்ணீரில் பேப்பர் கப்பல் விடலாம். சகதியில் பைக்கைச் செலுத்துவது சிரமமாக இருந்தது. பைக்கின் சக்கரம் சகதியில் பதிந்து எண்ணையில் கால் வைத்தது போல் வழுக்கியும் வாரியும் விட்டது. பக்கவாட்டில் தடுப்புச்சுவரும் இல்லை. சகதியின் தயவால் பைக் நேராகச் செல்லாமல் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தாக்கை நோக்கி வழுக்கிக்கொண்டு சென்றது. சாலை கொடுத்த சவாலில் பல இடங்களில் மழை கொடுத்த குளிரையும் மீறி வியர்த்தது. கால்களைத் தரையில் ஊன்றி முதல் கியரிலேயே மெதுவாக நகர்த்தினோம்.


வழியெங்கும் இயற்கை கொட்டிக்கிடக்கிறது. தாவரங்கள் அனைத்தும் புதுத்தளிர் துளிர்த்து இளம்பச்சை நிறம் பூசியிருந்தன. காட்டுமலர்ச் செடிகளில் பூக்கள் பூத்துப் புன்முறுவல் செய்தன. மூன்று பறமும் மலைச் சிகரங்கள் உயர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.


ஒரு புறம் சமவெளிப் பகுதி தெரிகிறது. மலை பல மடிப்புகளைக் கொண்டு முடிவின்றிச் செல்ல நாமும் அதைத் தொடர்கிறோம். மலைசரிவுகளில் வாழையும், பலாவும் அதிகமாகப் பயிரிடப்பட்டிருக்கிறது. மலைப் பாதையில் ஒருவர் நம்மிடம் அடுக்கம் வரை லிஃப்ட் கேட்கிறார். அவரை ஏற்றி அடுக்கத்தில் இறக்கிவிட்டோம். அடுக்கம் விவசாயம் செய்யும் ஒரு சிறிய மலைக்கிராமம். மொத்தம் ஐம்பது வீடுகளுக்குள்ளாகவே இருக்கும். நாம் ஒரு சாகசப் பயணமாக இந்தச் சாலையில் வந்தோம். அந்த மக்களுக்கோ இது அன்றாடம்.

அடுக்கம் மலை கிராமம்
சகதிச் சாலையில் தொடரும் பயணம் அடர்ந்த தைல மரக் காடுகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. வீசும் காற்று தைலத்தின் நறுமணத்தை அள்ளிக் காடெங்கும் பரப்பிப் புத்துணர்ச்சியளித்தது. சிறிது நேரம் அந்த வாசனைக் காட்டில் இளைப்பாறி அந்த நறுமணத்தை அனுபவித்தோம். வரண்ட நிலங்களில் கூட செழித்து வளரக்கூடிய அவை அபரிமிதமான மழை நீரைக் குடித்து ராட்சஷ உருவில் வளர்ந்திருந்தன. 



தைலக் காட்டைக் கடந்து பெருமாள்மலை என்ற இடத்தில் கொடைக்கானலின் பிரதான சாலையை அடைகிறோம்.  இதுவரை 30 கிமீயைக் கடக்க இரண்டரை மணி நேரம் பிடித்தது. மேகமலைப் பயணத்திற்குப் பின் ஒரு அருமையான சாகசப் பயணம். அட்ரினல் சுரப்பை அதிகரித்த பயணம் இது. சாகச விரும்பிகளுக்கு ஏற்ற சாலை. உடல் கலைத்திருந்தாலும் தன்னம்பிக்கை அதிகரித்திருந்தது. இங்கிருந்து பன்னிரண்டு கிமீ சென்றால் கொடைக்கானலை அடையலாம். கலைப்பு நீங்கப் பெருமாள் மலையில் ஒரு தேனீர் விடுதியில் இளைப்பாறினோம். மழை விட்டுத் தாழ்வாரங்களில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. பூமி குளிர்ந்திருந்தது. நாமும் தான்..
கடைக்கார அக்கா, ஒரு தட்டில் இரண்டு மிளகாய் பஜ்ஜியைப் பிய்த்துப் போட்டு, பஜ்ஜிகள் மூழ்கும் அளவுக்கு சூடான குருமாவும் ஊற்றிக் கொடுத்தார். ஒரு விள்ளலை எடுத்து முடிந்த அளவு குருமவையும் அள்ளி சுவைத்தபோது அந்தச் சுவை அந்தக் குளிருக்கு அமிர்தத்தினும் மேலாக இருந்தது. இதை எழுதும்போதும் நாவில் நீர் ஊறுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் ஒரு கோப்பைத் தேனீரையும் அருந்திவிட்டு கொடைக்கானலை அடைந்தோம்.
நம்மோடு சேர்ந்து இரவும் தன் வரவைக் கொடுத்தது. ஜியோன் பள்ளி அருகில் உள்ள கோகுலம் காட்டேஜ். நாம் எப்போதும் தங்கும் விடுதி. நகரத்திற்குள் ஒரு அமைதியான இடம். விடுதி பொறுப்பாளர் நம்மைக் கண்டதும் முகம் மலர்ந்து நலம் விசாரித்தார். அறைக்குச் சென்று சிறிது நேரம் அயர்ந்தோம்.


இன்று திட்டங்கள் எதுவும் இல்லை. இரவு உணவை எதிரே உள்ள உணவு விடுதியில் பெற்றுக்கொண்டோம். எங்கள் ஒரு அறையைத் தவிர மற்ற அறைகளை சென்னையில் இருந்து வந்த ஒரு கல்லூரியின் மாணவர்கள் பதிந்திருந்தனர். இரவு முழுதும் அவர்களின் ஆட்டம் பாட்டம் தொடர்ந்தது, கல்லூரி நாட்களை நினைவுப்படுத்தியது. கவலைகளே இல்லாத நாட்கள் என்று அதைக் கூறலாம். ஆகையால் அவர்களின் கூச்சலைப் பொருட்படுத்தாது அவர்களுக்காக சந்தோசப்பட்டோம். கொடைக்கானலில் இது மழைக் காலம். ஆனால் அடித்த குளிர், குளிர் காலத்திற்கு இணையான குளிர். கம்பளியின் கதகதப்பில் அப்படியே தூங்கிப் போனோம்.
காலை ஆறு மணி. கம்பளியை ஊடுறுவிய குளிர் தட்டி எழுப்பத் துயில் கலைந்தோம். அறைக்கு வெளியே பனிக் காற்று.. விடுதிப் பொறுப்பாளர் காபியுடன் காலை வணக்கம் கூறினார். வராந்தாவில் அமர்ந்து காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தோம். ஒரு மலை!! இறைவனின் இயற்கைப் படைப்பு. அதற்கு எத்தனை சக்தி!! சிலவன அதனால் வாழ்கின்றன. சிலவன அதனால் மகிழ்கின்றன.. உலகத்து உயிர்களைத் தன்னகத்தே ஈர்க்கும் ஈர்ப்பு எத்தகையது. விளக்கைக் கண்ட பூச்சிகளைப் போல் மாந்தர்கள் இம்மலையால் ஈர்க்கப்படுகிறார்கள். அது தான் இறைவனின் படைப்புத் திறமை. இயற்கையின் சக்தி…

கிளம்பித் தயாரானோம். கொடைக்கானல் மலையின் உண்மையான அழகை ரசிக்க நகரத்திற்கு அப்பால் வட்டக்கானல் என்ற இடம் நோக்கிச் சென்றோம். கொடைக்கானலில் இருந்து ஆறு கிமீயில் இருக்கிறது அந்த இடம்.


‘குட்டி இஸ்ரேல்’ என்று அழைக்கப்படும் வட்டக்கானல் இஸ்ரேலியர்களின் விருப்பமான இடம். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இங்கு வரும் இஸ்ரேலியர்கள் மாதக்கணக்கில் தங்கியிருந்து இளைப்பாறிவிட்டுச் செல்வார்கள். பாம்பார்புரம் சென்று அங்கிருந்து இடதுபுறம் திரும்பும் சாலையில் சென்றால் வட்டக்கானல் செல்லலாம். மிகக் குறுகிய சாலை அடர்ந்த பைன் மற்றும் தைலமரக் காடுகளுக்குள் ஊடுருவிச் சென்றது. இருபுறமும் எதிரெதிரே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று கைகோர்த்து கதிரொளி உட்புகாத வண்ணம் பசுமைக் கூடாரம் அமைக்கின்றன. எதிர் வரும் குளிர்காற்று காதுமடல்களைத் தீண்டிக் குறுகுறுப்பூட்டியது.


வழியில் காவல்துறையின் சோதனைச் சாவடி வருகிறது. இங்கே சோதனைச் சாவடி அமைக்கக் காரணம் வட்டக்கானல் பகுதியில் பிரபலமாகியிருக்கும் போதைக் காளான் கலாச்சாரம். இயற்கையை ரசிக்கப் பலர் இங்கு வரும்போது சிலரோ போதையை அனுபவிக்க வட்டக்கானலில் குவிகின்றனர். சோதனைச் சாவடியைக் கடந்து செல்கிறோம். 


பயணம் தொடரும்.... பருவமழைப் பயணம்-வட்டக்கானல் நிறைவு இங்கே