Saturday 16 September 2017

குற்றாலம் - பாண்டியன் லாட்ஜ் ஹோட்டல்

அதிகாலையே குற்றால மெயின் அருவி சென்று மக்கள் வெள்ளத்தில் அடித்துப் பிடித்துப் புகுந்து அருவி வெள்ளத்தில் குளித்து வந்ததில் உள்ளே இருக்கும் குண்டோதரன் விழித்துக் கொண்டான். மெயின் அருவி அருகில் நல்ல உணவகம் எது என்று விசாரித்த போது பாண்டியன் லாட்ஜ் ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர். அங்கே சென்றோம். மெயின் அருவியில் இருந்து வெளியே வந்து இடதுபுறம் திரும்பி ஐந்தருவி செல்லும் சாலையில் சென்றால் சிறிது தூரத்தில் வலதுபுறம் ஒரு தெரு பிரிகின்றது. அந்தத் தெருவில் கொஞ்சம் முன்னேறினால் பாண்டியன் லாட்ஜ் ஹோட்டலை அடையலாம். 


மற்ற உணவகங்கள் எல்லாம் இட்லி சாம்பார் என்று வழங்கிக் கொண்டிருக்க காலை வேளையிலேயே நல்ல வெட்டுக்குத்து வேண்டுவோர் அணுகும் இடம் தான் இந்தப் பாண்டியன் லாட்ஜ் உணவகம். உணவகத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இல்லை. கட்டிடத்தைச் சுற்றிலும் பல பெயர் பலகைகள் வைத்துள்ளனர். பழைய காலத்து வீடு போல் இருந்தது உணவகம். வரவேற்பறையில் சுற்றிலும் இருக்கும் சாமி படங்கள் ஊதுபத்தி மணத்துடன் நம்மை வரவேற்கிறது. சுவர்கள் வெண்மை பூசப்பட்டு உணவகம் மிகத் தூய்மையாக இருக்கிறது.  

வரவேற்பறை
ஒரே ஒரு மேஜையைத் தவிர அனைத்தும் காலியாக இருந்தது. நல்ல உணவகம் இந்தக் காலை வேளையில் அரவம் இன்றி இருந்தது நமக்கு ஆச்சரியம் அளித்தது. உள்ளே சென்று நாமாக ஒரு இருக்கையில் அமர்ந்த பிறகு சிறிது நேரம் கழித்து வாழை இலையும் தண்ணீரும் வைக்கப்படுகிறது. சர்வரிடம் உணவகத்தின் அமைதிக்கான காரணத்தைக் கேட்டோம். “அவர் குற்றாலத்தில் சீசன் இல்லாததால்..” என்றார். அருவிகளிலும், நேற்று மதியம் பார்டர் கடையிலும் கண்ட கூட்டதிற்கு பின் அவர் சொல்லை நம்ப முடியவில்லை. 

காத்திருக்கும் படலம்
சரி இருக்கட்டும் என்று ஆளுக்கு ஒரு தோசையும் மட்டன் கொத்துக்கறியும் கேட்டோம். கொத்துக்கறி செய்யவில்லை என்றார். மட்டன் சுக்காவும், கோழி சாப்ஸும் கொண்டு வரச் சொன்னோம். மெல்லிய தோசையும் உடன் சிறிய கிண்ணங்களில் சாப்ஸும் சுக்காவும் வந்தது. கோழி சாப்ஸ் அளவு சிறிதாகவும் மட்டன் சுக்கா துவையல் அளவும் இருந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது. சட்னி கேட்டோம். காலியாகி விட்டது என்றனர். மணி பத்து தான் ஆகியிருந்தது. ஆகட்டும் என்று தோசையைப் பிட்டு மட்டன் சுக்காவில் தொட்டுக் கச்சேரியை ஆரம்பித்தோம்.


சுவையில் குறை இல்லை. மிதமான காரத்துடன் மட்டன் சுக்கா பிரமாதமாக இருந்தது. பொடிது பொடிதாக வெட்டப்பட்ட மட்டன் துண்டுகள் மசாலுடன் கலந்து நன்றாக வேகவைக்கப்பட்டிருந்தது. தோசையுடன் சேர்த்துச் சுவைத்தபோது மாவைப் போல் கரைந்து போனது.


கோழி சாப்ஸும் அதேபோல் நல்ல பதத்துடன் தயாரிக்கப்பட்டு நல்ல சுவையில் இருந்தது. சுக்கா போல் அதையும் சிறிய துண்டுகளாகப் பிய்த்துப் போட்டு குருமாவோடு அள்ளி தோசையுடன் சேர்த்து சுவைத்த போது அற்புதமாய் இருந்தது. அருவிக் குளியல் தந்த களைப்பில் உணவு போன இடம் தெரியவில்லை. சுக்காவும் சாப்ஸும் சுவையின் இரு வேறு பரிணாமங்களைக் காட்டின. உணவருந்திவிட்டு அதற்கான விலை கொடுத்தபோது அதிகமெனத் தோன்றியது. 


பாண்டியன் லாட்ஜ் உணவுகள் சுவையில் பார்டர் கடை உணவுகளுக்கு சற்றும் குறையில்லை தான். ஆனால் அந்த உணவை வழங்கும் விதத்தில் தான் இரண்டுக்கும் வித்தியாசம். என்ன தான் சுவையான உணவாக இருந்தாலும் விற்கும் விலைக்கேற்ப உணவின் அளவும் இருந்தால் தானே உண்பவர்களுக்குத் திருப்தி. பார்டரில் இருக்கும் தாராளம் பாண்டியனிடம் இல்லை. எல்லாவற்றையும் விடுத்து சுவையை மட்டுமே கருத்தில் கொண்டால் தாராளமாகப் பாண்டியன் லாட்ஜ் உணவுகள் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். 

4 comments:

  1. Nice......different tastes in every payanam...
    எல்லா பயணங்களும் இனித்திட வாழ்த்துக்கள்....

    ReplyDelete