Monday 22 May 2017

அழகரின் திருவிளையாடல்

image source: alagarkovil.org
சித்திரைத் திருவிழா!!! மதுரை மக்கள் கொண்டாடும் விழாக்களிலேயே மிகக் கோலாகலமானது. வெளிநாட்டினரும் வந்து கண்டுகளிக்கும் அவ்விழாவில் மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் திருமணத்தை சிறப்பாக நடத்துவார்கள். மிகப் பிரம்மாண்டமாக அவ்விழாவை முடித்துவிட்டு இளைப்பாறிக் கொண்டிருக்கிறது மதுரை மாநகரம்.. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நடக்கும் இந்த விழா மூலம் அழகர் நமக்கு இரு விஷயங்களைப் புலப்படுத்துகிறார்.

மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் நடக்கும் இந்தத் திருமணம் ஒரு கலப்புத் திருமணம் தெரியுமா? ஆம், சைவ மதத்தைச் சேர்ந்த சுந்தரேசுவரருக்கும் (ஈஸ்வரன்) வைணவ மதத்தைச் சேர்ந்த அழகரின் (பெருமாள்) தங்கை மீனாட்சிக்கும் நடக்கும் காதல் திருமணம் இது. ஒரு சின்ன ஃபிளாஸ்பேக்…..

மதுரையை  அரசாண்ட அரசி மீனாட்சி திக்விஜயம் செய்து உலகை வெல்கிறாள். மண்ணுலகம் வென்றும் திருப்தி அடையாத மீனாட்சி விண்ணுலகையும் வெல்ல எண்ணி கைலாயத்திற்குப் படையெடுக்கிறாள். போரில் ஈசனின் தீரம் கண்டு, வந்த வேலையை மறந்து அவன் மீது காதல் கொள்கிறாள். கணை தொடுத்து எதிரிகளை மண்ணில் வீழ்த்தியவள், ஈசன் தொடுத்த மலர்கணையில் வீழ்கிறாள். ஈசனுக்கும் மீனாட்சியைப் பிடித்துவிட வாக்குக் கொடுத்ததுபோல் மதுரை வந்து மீனாட்சியை மணமுடிக்கிறார்.

விஷயம் என்னவென்றால், ஈசன் வேற்று மதத்தவன் என்று தெரிந்தும் அழகர் தன் தங்கையின் காதலுக்குக் குறுக்கே நிற்கவில்லை. தன் தங்கையின் விருப்பத்திற்காக அவனைத் தன் தங்கைக்கு மணமுடித்து வைக்க சம்மதிக்கிறார். இதிலிருந்து கடவுளற்குள்ளே சாதி மத வேறுபாடு இல்லை என்பது தெளிவகிறது.

மற்றொன்று, மதுரையை ஆண்டது மீனாட்சி என்பதை அறிவோம். மீனாட்சியின் சகோதரர் எனும்போது மதுரையில் சரிபாதி உரிமை அழகருக்கு உள்ளது. ஆண் வாரிசு என்ற முன்னுரிமையில் அவர் மதுரையை ஆள விரும்பவில்லை. மாறாகத் தன் தங்கைக்கு சொத்தை விட்டுக்கொடுத்துவிட்டு அழகர்மலை காட்டிற்குள் போய் எளிமையாக வாழ்கிறார். பணத்தைவிடப்  பாசமே பெரிது என்றும் பெண்குழந்தைக்கும் சொத்தில் சமவுரிமை உண்டு என்பதையும் உணர்த்துகிறார்.

என்னைப் பொறுத்தவரை இவையிரண்டும் அழகரின் திருவிளையாடல்களே…

ஆனாலும் மீனாட்சி, இவ்வளவு அன்பான அண்ணன் வரும்வரை காத்திருக்காமல் நீபாட்டுக்கு கல்யாணத்தை முடிச்சுக்கிட்டியே??? அழகர் எவ்ளோ ஃபீல் பண்ணியிருப்பார்.. இது ரொம்ப தப்புமா…..

(சித்திரைத் திருவிழா கூறும் மற்றொரு விஷயம் அடுத்த பதிவில்...)

No comments:

Post a Comment