Tuesday 2 May 2017

மண்ணவனூர் (கொடைக்கானல்) பயணம்-பாகம் 1

இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கல..  அதுக்குள்ள சூரிய பகவான் செஞ்சுரி போட்டாப்ல.. வெளிய போய் வீட்டுக்கு வர்றதுக்குள்ள எண்ணை தடவாமயே நல்லா வருத்து அனுப்புறாப்ல.. அவருகிட்ட இருந்து தப்பிச்சு எங்கயாவது கோடை வாசஸ்தளம் போய் தஞ்சமடைந்து,
              
              “ நீல வானம் ...................நீயும் நானும்...............
                            கண்களே பாஷையாய்... கைகளே ஆசையாய்...
                            வையமே கோயிலாய்... வானமே வாயிலாய்...
                            பால்வெளி பாயிலே, சாய்ந்து நாம் ஆடுவோம்..."

என்று உங்கள் மனம் பாட ஏங்குதா? அப்ப வாங்க மண்ணவனூருக்கு… 


என்னடா இது கேள்விப்படாத ஊரா இருக்கேனு பாக்குறீங்களா?? மேற்சொன்ன பாடலை ‘மன்மதன் அம்பு’ படத்தில் உலகநாயகன் கமல் பிரெஞ்சு நடிகை கரோலினுடன் பாடுவது இங்கு தான். அதே படத்தில் மற்றொரு பாடலில் சூரியாவும் திரிஷாவும் உய்யாலா.. உய்யாலா.. என்று குத்தாட்டம் போடுவதும் இங்கு தான். தெனாலி, குட்டி போன்ற படங்களும், ஐ படத்தில் எமி ஜாக்சன் கட்டியிருப்பாரே ஒரு கனவு இல்லம் அந்தக் காட்சி எல்லாம் படமாக்கப் பட்டது இங்கு தான். எல்லையில்லாப் புல்வெளியும் நடுவில் ஒரு அழகிய ஏரியும் பறவைகளின் ஒலியைத் தவிர வேறு எந்தத் தொந்தரவும் இல்லாத இடத்தை யாருக்குத்தான் பிடிக்காது. அதனால் மண்ணவனூர் எப்போதும் சினிமாக்காரர்களின் சொர்க்கபுரியாகவே இருக்கிறது. 




கொங்கு நாட்ட கோடைல இருந்து காப்பாத்துறது ஊட்டினா, நம்ம பாண்டிய நாட்டுக்கு கொடைக்கானல் தாங்க.. எங்க ஊர்ல இருந்து வெறும் 80 கிமீ தூரத்துல இருக்குறதால திடீர்னு டூர் போனும்னா விடு வண்டிய கொடைக்கானலுக்குனு கிளம்பிருவோம். அப்படி எல்லோருக்கும் தெரிந்த கொடைக்கானலில் பலருக்கும் தெரியாத ஒரு அழகுப்பிரதேசம் தான் மண்ணவனூர். கொடைக்கானலில் இருந்து கவிஞ்சி, பூண்டி செல்லும் வழியில் சுமார் 35 கிமீ தொலைவில் இவ்விடம் உள்ளது. வெட்கத்தில் தன் முகம் மறைக்கும் பருவ மங்கை போல் கொள்ளை அழகை எவரும் அறியாமல் மறைத்துக் கிடக்கிறது மண்ணவனூர். 


பொதுவாகக் கொடைக்கானல் செல்லும் நாம் நேராகப் பேருந்து நிலையம் அருகில் அறை எடுத்துத் தங்கி, அப்படியே பைன் மரக்காடு, குனா குகை, மோயர் பாய்ண்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர் ராக் என்று ஒரு ரவுண்டு வந்து விட்டு, மதியம் தாவரவியல் பூங்காவில் இளைப்பாறிவிட்டு மாலை படகு சவாரியை முடித்துவிட்டு ஊர் திரும்பி விடுவோம். ஆனால் இன்றைய நிலையில் இவ்விடங்கள் எல்லாம் இயற்கையை இழந்து செயற்கையாய் மாறிக் கிடக்கிறது என்பது என் கருத்து. உண்மையான இயற்கையை ரசிக்க வேண்டும் என்றால் கொடைக்கானலைத் தாண்டி அதைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களுக்குத் தான் செல்ல வேண்டும். அப்படி ஒரு இடம் தான் மண்ணவனூர்.

சென்ற மாதம் நான், நண்பர்கள் மனோ, கண்ணன், பழனி ஆகியோருடன் மேகமலைப் பயணம் சென்று வந்த பின், மீண்டும் அதே அணி மற்றொரு பயணம் செல்ல ஆவலாய் இருந்தோம். குரங்கனி – கொழுக்குமலை டிரெக்கிங், வாகமன் போன்ற இடங்களைப் பரிசீலித்து விடுப்பு எடுப்பதில் பிரச்சனை இருந்ததால் ஒரு நாள் பயணமாக அருகில் எங்காவது செல்லலாம் என்று திட்டமிட்டு மண்ணவனூரைத் தேர்ந்தெடுத்தோம். அறை முன்பதிவு செய்ய கூகுள் செய்தபோது எதுவும் சிக்கவில்லை. பின்னர் நண்பர் கண்ணன் அவர்கள் கொடைக்கானலில் தனக்குத் தெரிந்த ஒரு நண்பர் மூலம் மண்ணவனூரில் உள்ள ஒரு விடுதியின் தொலைபேசி எண்ணைப் பெற்றுத் தந்ததால் அறை முன்பதிவு செய்தோம். சனிக்கிழமை மாலை கிளம்பி மண்ணவனூரில் தங்கிவிட்டு ஞாயிறு மாலை ஊர் திரும்புவதாகத் திட்டம்.

ஆனால் எதிர்பாராதவிதமாகத் தங்களின் சொந்தக் காரணங்களுக்காகக் கண்ணனும், பழனியும் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. மனோவும் நானும் மட்டும் இப்போது மிச்சம். ஒரு பயணம் செல்லத் திட்டமிட்டு அதை ரத்து செய்தால் அது மனதை உருத்திக்கொண்டே இருக்கும். ஆகையால் எப்படியாவது பயணத்தை முடித்து விட்டால் தான் நமக்கு நிம்மதி. மனோவும் என்னைப்போல் தான். பயணத்திற்கு அடிமைப்பட்டவர்கள் நாங்கள். ஆகையால் நாங்கள் எப்படியும் மண்ணவனூரைப் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தோம்.

மனோவுக்குக் கொடைக்கானலில் சொந்த வேலைகள் இருந்ததால் வெள்ளிக்கிழமையே கிளம்பிவிட்டார். எனக்கு சனிக்கிழமை அரை நாள் அலுவலகம் இருந்ததால் காலையில் அலுவலகம் சென்றுவிட்டு மதியம் பெரியகுளத்தில் இருந்து தனியாக என் பைக்கைக் கிளப்பினேன் கொடைக்கானலுக்கு..

பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லத் தேவதானப்பட்டி வழியாகக் கட் ரோடு (ghat road) சென்று அங்கிருந்து  காமக்காபட்டி வழியாகச் செல்லும் மலைப்பாதையில் செல்ல வேண்டும். மொத்தம் 70 கிமீ. அதில் 52 கிமீ மலைப்பாதை. கொடைக்கானல் செல்லும் மலைப் பாதை மற்ற மலைப்பாதைகள் போல் அதிக ஆபத்தில்லாதது. அதிகக் கொண்டைஊசி வளைவுகளோ, ஏற்றமோ இல்லாத வளைந்து நெலிந்து செல்லும் அகலமான சாலை. பிரதான சுற்றுலாத்தளம் என்பதால் சாலையும் நன்றாகப் பராமரிக்கப் படுகிறது.

கட் ரோடில் பைக் டயரில் காற்றழுத்தத்தைச் சோதனை செய்துவிட்டுக் கிளம்பினேன். வெயில் சற்றுத் தூக்கலாகவே இருந்தது. மலைப்பாதையின் ஆரம்பத்தில் இருபுறமும் இளநீர்க் கடைகளும், சின்னச் சின்ன உணவு விடுதிகளும் வரிசை கட்டுகிறது. சாலையின் இருபுறமும் புளியமரங்கள் அடர்ந்திருக்கிறது.


 சின்னச் சின்ன ஊர்களையும் வனத்துறை சோதனைச் சாவடியையும் கடந்து சாலை கொஞ்சம் கொஞ்சமாக உயரே செல்கிறது.

மலைச் சாலை ஆரம்பம்
சிறிது நேரம் மலைப் பாதையில் பயணம் செய்த பின்பு இடதுபுறம் மஞ்சலாறு அணை நம் கண்களுக்குப் புலப்படுகிறது. சுற்றிலும் தென்னந்தோப்பால் சூழப்பட்ட அழகிய அணை. வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி பகுதிகளுக்கு நீர் ஆதாரம். 


மஞ்சலாறு அணை
கொஞ்ச தூரம் சென்றதும் டம்டம் பாறை என்ற இடம் வருகிறது. அங்கிருந்து மஞ்சலாறு அணையையும் இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான தலையாறு அருவியையும் ரசிக்கலாம். எலி வால் அருவி மற்றும் கேத்தரின் அருவி என்று இந்த அருவிக்கு வேறு பெயர்களும் உள்ளன. அருவியின் மொத்த உயரம் 300 மீ.  அருவியில் அதிகமாக நீர் விழும்போது அந்தச் சத்தம் ‘டம் டம்’ என்று இந்த இடத்தில் கேட்குமாம். அதனால் தான் இந்த இடத்திற்கு டம்டம் பாறை என்று பெயர் வந்ததாம். 
தூரத்தில் தலையாறு அருவி

தலையாறு அருவி (image source : wikimapia)

தலையாறு அருவி (image source:wikimapia)
ஒரு காட்சிக் கோபுரம் பயன்பாடின்றி உள்ளது. இங்கே வருவோரிடம் உணவுகளை வாங்கி உண்ண எப்பொழுதும் குரங்குக் கூட்டம் இங்கே இருக்கிறது. நாமாகக் கொடுக்கவில்லையெனில் அவை பறிக்கவும் தயங்காது. மனிதன் கொடுத்துப் பழக்கியதால் நாளடைவில் அவை உணவைத் தேடி உண்பதை மறந்து நம்மையே எதிர்பார்த்துப் பழகிவிட்டிருக்கிறது. அந்தப் பழக்கம், நாம் கொடுக்க மறுக்கும்போது நம்மைத் தாக்கவும் உந்துகிறது. அதனால் தான் நாம் காடுகளுக்குச் செல்லும் இடங்களில் வனவிலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்று அறிவிப்புப் பலகைகளை வனத்துறை வைத்துள்ளது. 
காட்சிக் கோபுரம்
குரங்கு தெரிகிறதா??
தொடர்ந்து பயணிக்கிறோம். வளைந்து நெலிந்து செல்லும் சாலையில் நாம் பைக்கில் பயணிப்பது சுகானுபவமாக இருக்கிறது.




கும்பரை பிரிவு, ஊத்து, பெருமாள் மலை ஆகிய ஊர்களைக் கடந்து செல்லச் செல்லக் குளிரும் மெல்ல மெல்ல அதிகரிப்பதை உணருகிறோம். பெருமாள்மலையைக் கடந்தவுடன் வெள்ளி அருவியை அடைகிறோம். அருவியில் வழியும் நீர் வெள்ளியை உருக்கி ஊற்றுவதுபோல் இருப்பதால் இந்தப் பெயர். குளிக்க இயலாது. புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். பிரட் ஆம்லெட், மிளகாய் பஜ்ஜிக் கடைகள் வரிசையாய் இருக்கின்றது. ஷ்வெட்டர் மற்றும் பொம்மைக் கடைகளும்… கொடைக்கானலில் அனைத்து இடங்களிலும் இந்தக் கடைகளைக் காணலாம். வழியெங்கும் ஆங்காங்கே பழக்கடைகள் இருக்கின்றன. கொடைக்கானல் மலையில் விளையும் பிளம்ஸ், பேரிக்காய், வெண்ணைப் பழம், பேஸன் பழம் போன்றவற்றை வாங்கலாம். 


வெள்ளி அருவி
அனைத்தையும் கடந்து மனோ இருக்கும் விடுதியை அடைந்தேன். மனோவின் மாப்பிள்ளை 'தென்னரசு'வும் நம் பயணத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். தென்னரசு சிவில் இஞ்சினியரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தென்னரசு வந்ததும் மண்ணவனூர் கிளம்பினோம். மண்ணவனூர் செல்லப் பைன் மரக்காடு செல்லும் சாலையில் சென்று, மோயர் பாயிண்டுக்கு முன்னர் வலதுபுறம் பிரியும் பூம்பாறை செல்லும் சாலையில் செல்ல வேண்டும். உயர்ந்த மரங்களால் சூழப்பட்ட இந்தச் சாலை இயற்கைக் காட்சிகள் நிறைந்து, பயணம் செல்ல அருமையான சாலை என்று பலராலும் விரும்பப்படுகிறது. பூம்பாறை வரை இருக்கும் சாலை ஒரு தேசிய நெடுஞ்சாலையைப் போல் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சாலையில் நமது பைக் கியரை அவ்வளவாக மாற்றாமல் வளையும் சாலைக்கேற்ப நமது பைக்கை சாய்த்து ஓட்டுவது தனி உற்சாகம். செல்லும் வேகத்தில் எதிர்வரும் குளிர்காற்று குண்டூசிக் கணைகளாய் நம் மீது பட்டுத் தெறிக்கிறது. பூம்பாறை கொடைக்கானல் பகுதியில் உள்ள அழகிய கிராமங்களில் ஒன்று. TERRACE FARMING எனப்படும் மலையைப் படிக்கட்டு போல் அடுக்கடுக்காகச் செதுக்கிச் செய்யப்படும் விவசாய முறை இங்கு நடைபெருகிறது. நாம் உண்ணும் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், பூண்டு, கேரட் போன்றவை இந்த மலைமக்கள் கஷ்டப்பட்டு விளைவிப்பவை தான். பூம்பாறை, கவுஞ்சி, கிளாவரை, பூண்டி, பள்ளங்கி, மண்ணவனூர் உள்ளிட்ட அனைத்து மலைக் கிராமங்களிலும் இந்த முறையில் விவசாயம் நடைபெறுகிறது.

பூம்பாறை செல்லும் சாலை வலதுபுறம் பிரிய நாம் கவுஞ்சி செல்லும் சாலையில் தொடர்ந்து செல்கிறோம். பூம்பாறைக்குப் பிறகு சாலை சேதமடைந்துள்ளது. இங்கிருந்து 12 கிமீ சென்றால் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த மண்ணவனூரை அடைகிறோம். நாம் தங்கும் விடுதி மண்ணவனூர் பிரிவிலேயே உள்ளது. ஊருக்குள் செல்ல வேண்டியதில்லை.  விடுதிக்குப் பொறுப்பாளராகத் தங்கவேல் என்ற பெரியவர் இருந்தார். அறையைச் சென்று பார்த்தோம். மிக மிகச் சிறிய அறை ஒரு கட்டில் போடும் அளவுக்கு மட்டும் இருந்தது. கொஞ்சம் தூய்மையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேறு வழி இல்லை. இரண்டு அறைகளைப் பெற்றுக்கொண்டோம். மண்ணவனூரில் இருக்கும் ஒரு பிரச்சனை தங்க நல்ல அறைகள் உள்ள விடுதிகள் இல்லை. இருப்பது இரண்டு விடுதிகள் மட்டுமே. மற்றொன்று இதைப் போன்றே என்று உள்ளூர்வாசிகள் சொல்லக் கேட்டோம். புதிதாக ஒரு விடுதி இப்பொழுதுதான் கட்டப்படுகிறது. 

[ மண்ணவனூர் பயணக்கட்டுரையைப் படித்துவிட்டு, மண்ணவனூர் வனத்துறையில் பணிபுரியும் வனவர் திரு.டேவிட் ராஜா அவர்கள் நம்மை அழைத்திருந்தார். வனத்துறை சார்பாக மண்ணவனூரில் இயற்கையான சூழலில் தங்கவும், உணவும், காட்டுக்குள் சென்றுவர வழிகாட்டி மற்றும் வனத்திற்குள் தங்க கூடார வசதியும் தற்போது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். வனத்துறையின் இந்த முயற்சி பாராட்டக்கூடியது. விருப்பம் உள்ளவர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி மகிழலாம். தொடர்புக்கு: திரு.டேவிட் ராஜா, வனவர், செல்போன் எண்:9751495138 ]

மண்ணவனூர்
கீழே இருந்த ஒரு சின்ன உணவகத்தில் இரவு உணவு சொல்லிவிட்டு வெளியே சென்றோம். இருள் சூழ ஆரம்பித்திருந்தது. சாலையின் இருபுறமும் சில தேனீர் மற்றும் உணவு விடுதிகள் இருந்தன. ஒரு அரசு மதுபானக் கடையும் இருந்தது. விடுதிக்கு எதிரே மத்திய அரசுக்குச் சொந்தமான செம்மறியாடு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. ஒரு அரை கிமீ தூரத்தில் நாம் காண வந்த மண்ணவனூர் ஏரி உள்ளது. குளிருக்கு இதமாக ஒரு தேனீர் அருந்திவிட்டு அறைக்கு வந்தோம்.




2 comments:

  1. அந்த இடத்தின் பெயர் மன்னவனுர் கைகாட்டி இது எனது பாட்டியின் கிராமம் SRC ஆட்டு பண்னை எங்க தாத்தா அரசாங்கத்திற்க்கு கொடுத்தது அதற்க்கு முன்னர் அங்கு உருளைக்கிழங்கு விவசாயம் நடந்தது
    அந்த அம்மன் கோயிலுக்கம் நீங்கள் தங்கி இருந்த அறைக்கும் நடுவில் இருக்கும் பகுதி எனது சித்தியின் இடம்
    அந்த வேக்கில் பரிசல் நடத்துபவர் எனது பாட்டிக்கு வேண்டப்பட்ட நபர்கள்

    ReplyDelete
  2. nice write up. any possibility of contacts at Mannavanur. Planning a trip in Oct'21. Ramani, Chennai

    ReplyDelete